எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 20 September 2020

படித்ததில் பிடித்தவை (“கூடை நிறைய” – பட்டுக்கோட்டை தமிழ்மதி கவிதை)

 


*கூடை நிறைய*

 

ஏழெட்டு கூடைகளோடு

என் மகன்

 

மண்ணள்ளி விளையாட

ஒன்று தம்பிக்கென்றான்.

 

அப்பாவிடம் ஒன்றை கொடுத்து

கவிதை எழுதும்  காகிதத்திற்கென்றான்.

 

இது பிளாஸ்டிக்பைக்கு பதில்

கடையில் பொருள் வாங்கவென்றான்.

 

ஆத்தா வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள

ஒன்றை ஊருக்கு அனுப்பச் சொன்னான்.

 

குத்தடி கொடிமல்லி பூப்பறிக்க

இது அக்காவுக்கென்றான்.

 

கூடைகளுக்கெல்லாம் கொண்டாட்டம்

குதித்து குதித்து குப்புற விழுந்து சிரித்தன.

 

ஊரில் பார்த்த ஓலை குட்டான்

கடவாய் பொட்டி

 

சாணி அள்ளும் தட்டுக்கூடை

 

ஈச்சமிளாறில் செய்த

நெல் தூற்றும் கூடை

 

அவித்த நெல்லை அள்ளும் கூடை

 

நெல்லரைக்க போய்

தவிடு அள்ளும் கூடை

 

பனையோலை கிழித்து

மூங்கில் சீவி

முடைந்த கூடை

 

ஞாபகம்.

 

அழகு கூடையொன்றில்

அள்ளி கொடுத்தான்

அம்மாவுக்கு தன்

முத்தங்களை.

 

வரைய சொன்ன ஆசிரியையிடம்

கூடை ஒன்றை கொடுத்து

அதில்

நட்சத்திரங்களை போட சொல்லி

நின்றான்.

 

வெறுங் கூடை

நிறைய நிறைய

கனவுகள்..!

 

 *பட்டுக்கோட்டை தமிழ்மதி*


1 comment: