எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 26 February 2019

படித்ததில் பிடித்தவை (‘பொய்’ – வண்ணதாசன் கவிதை)


பொய்
பழைய சேலை கேட்டு ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.

வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்.

அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்..!

- வண்ணதாசன்.

Tuesday 19 February 2019

வைக்க மறந்த கதை...


கல்யாண மண்டபத்தில்
காலை விருந்தில்
காசி அல்வா, பாசந்தி,
பொங்கல், வடை,
ஊத்தப்பம், மசால் தோசை,
இடியாப்பம் - தேங்காய் பால்,
உப்புமா - தயிர்,
இட்லி, பூரி - கிழங்கு...
என அடுத்தடுத்து
அதிரடியாக
கவனிக்கப்பட்டாலும்...

ஏனோ முழுமை பெறாமல்
அன்று முழுவதும்
உறுத்திக் கொண்டிருந்தது...

பரிமாறும் போது
என் இலைக்கு முன்
தீர்ந்துப் போய்,
திரும்பவும் பரிமாறுகையில்
என் இலையில் வைக்க மறந்த
கேரளத்து புட்டு..!
            
                   -  கி. அற்புதராஜு.

Friday 8 February 2019

படித்ததில் பிடித்தவை (‘செத்த மீன்’ – கு.அழகர்சாமி கவிதை)


செத்த மீன்

ஒரு மீன் வரைந்து கலர் அடிஎன்பார்
டீச்சர்.

குழந்தை
கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே.

கட்டத்துக்குள் அடிஎன்பார்
டீச்சர்.

குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.

கத்துவார் டீச்சர் இம்முறை
கட்டத்துக்குள் அடிஎன்று.

பரிதாபமாய் டீச்சரைப் பார்த்துக் கொண்டே
கட்டத்துக்குள் கலரடிக்கும் குழந்தை
செத்த மீனின் மேல்.

- கு. அழகர்சாமி.

Wednesday 6 February 2019

படித்ததில் பிடித்தவை (‘ருசி’ – யுகபாரதி கவிதை)



ருசி

அப்படியொன்றும் ருசியானதில்லை
அம்மாவின் சமையல்...

பரிமாறுபவள் அம்மா என்பதால்
ஆகிவிடுகிறது அப்படி...

பழக்கத்திலிருந்து விடுபடாமல்
உணரமுடியாது அன்பின் ருசியை..!

-   யுகபாரதி (மராமத்து).