எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 31 January 2021

படித்ததில் பிடித்தவை (“இனி என்ன மிச்சமிருக்கிறது..?” – ராம் வசந்த் கவிதை)



*இனி என்ன மிச்சமிருக்கிறது..?*

 

நாம்

மெர்க்குரிப் பூக்கள்

வாசித்துக் கொண்டிருந்த

கடலைக்காய் கொல்லைகளில்

கார் கம்பெனி

வந்து விட்டது தேன்மொழி..!

 

ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாசித்த

நெல் வயல்களில்

செல்ஃபோன் கம்பெனி

வரப் போகிறது..!

 

பொன்னியின் செல்வன்

படித்த ஏரிக்கரைதான்

அடுக்குமாடிக் குடியிருப்பின்

மதிலாக நிற்கிறது..!

 

இருவரையும் தோழர் என்றே விளிக்கும்

நூலகர் பரிந்துரைத்த

வால்காவிலிருந்து கங்கை வரை யில்

ஆழ்ந்த மந்தைவெளியில்தான்

கோக் பாயப் போகிறது

 

இனி என்ன மிச்சமிருக்கிறது..?

புத்தகங்களை

எடைக்குப் போட்டு விட்டு

புகை கக்கும் பூமியில்

கூலிக்கு மாரடிப்பதைத் தவிர..!

 

*ராம் வசந்த்*


Saturday 30 January 2021

படித்ததில் பிடித்தவை (“எல்லாம் இருந்தும்” – லாவண்யா சுந்தர்ராஜன் கவிதை)

 


*எல்லாம் இருந்தும்*

 

சுற்றுச் சுவரோடு

வாசல் இரும்புக்கதவில்

அஞ்சல் போட ஒரு பெட்டி.

 

அன்றாடம் ஓடும்

தண்ணீர் மின்னியக்கிக்கு

தகரத்தால் ஆன சிறு வீடு.

 

பிரிய ரங்கனின் விதவிதமான

புகைப்படங்களுடன்

ஏனைய கடவுளர்க்கும்

மணிக் கதவம் கொண்ட

பெருமாள்படியுள்.

 

அலங்கார பொம்மைகளுக்கு

வரவேற்பறையில் ஒரு ஓரிடம்.

 

செல்ல நாய்க்கு

மாடிப் படிக்கட்டுக்கடியில்

சிறு குடியிருப்பு.

 

குப்பைத்தொட்டிக்கு கூட

சமையலுள்ளில்

கதவோடு இடம் ஒன்று.

 

தாளிக்கும் கடுகுக்கும்

அஞ்சறைப் பெட்டியில் இடம்.

 

காலணிகளை வைக்கவோ

ஷூ ராக்.

 

எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது

வயதேறி குழந்தையான என்

பெற்றோர்களுக்கான

இடத்தை தவிர..!

 

*லாவண்யா சுந்தர்ராஜன்*


Friday 29 January 2021

படித்ததில் பிடித்தவை (“சூரியநதி” – சுந்தரபுத்தன் கவிதை)


*சூரியநதி*

 

வெளிச்சம்

அருவியாகக் கொட்டும்

கணத்தில்...

 

பூமியில்

சூரியநதி..!

 

*சுந்தரபுத்தன்*


Thursday 28 January 2021

படித்ததில் பிடித்தவை (“இறகு” – கோ.வசந்தகுமாரன் கவிதை)

 


*இறகு*

 

உதிர்ந்து கிடக்கும்

பறவையின் இறகை

மிதித்துவிடாதீர்...

 

ஒரு காலத்தில் அது

த்

தி

ல்

இருந்தது..!

 

*கோ.வசந்தகுமாரன்*


Wednesday 27 January 2021

படித்ததில் பிடித்தவை (“மண்ணில் தொலைத்தது” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மண்ணில் தொலைத்தது*

 

மண்புழுவைப் பற்றி

எழுதி வரச்சொன்னார் டீச்சர்

குழந்தையிடம்..!

 

மண்ணில் தொலைத்த

மண்புழுவை

இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார்

அப்பா..!”

 

*ராஜா சந்திரசேகர்*


Tuesday 26 January 2021

படித்ததில் பிடித்தவை (“கண்ணாடி” – ஜெகநாதன் கவிதை)


 

*கண்ணாடி*

 

எல்லா

உறவுகளும்

கண்ணாடி

போலத்தான்...

 

உடையாதவரை

ஒரு முகம்..!

உடைந்துவிட்டால்

பல முகம்..!

 

*ஜெகநாதன்*