எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 22 June 2018

படித்ததில் பிடித்தவை (“பயணம்” – அநிருத் ஆகாஷ் கவிதை)



பயணம்

நான்
பேருந்தை விட்டு
இறங்கிய பின்னும்
பயணம்
செய்துகொண்டிருக்கிறது
எனது
மீதி சில்லறை..!

-   அநிருத் ஆகாஷ்.

Tuesday 12 June 2018

படித்ததில் பிடித்தவை (“பாவம்” – திருமலை சோமு கவிதை)


பாவம்
எல்லா
பாவங்களையும் தொலைக்க
நதியில் நீராடச் சொன்னார்கள்..!

நதிகளைத் தொலைத்த
பாவத்தை
எப்படித் தீர்ப்பது..?

 திருமலை  சோமு.
(மனசுக்குள் பெய்யும் மழை – கவிதை தொகுப்பு)

Tuesday 5 June 2018

தனி ஒருவன்



கிராமத்திலிருந்து
இரவு முழுவதும்
சொகுசுப் பேருந்தில்
பயணம்
மனைவியுடன்
மாநகரத்திற்கு...


அதிகாலை
மாநகரத்தின்
பெரியப் பேருந்து நிலையத்தில்
இறங்கியவுடன்
புறநகர் செல்ல
மாநகரப் பேருந்தைப் பிடிக்க
பெரிய கூட்டம்.


எனது கைப் பையை
வாங்கிக் கொண்ட
மனைவி
எப்படியாவது பிடிங்க
இரண்டு இடங்களை! என்றாள்.


எப்போதுமே
கூட்டமாக உள்ள
பேருந்தில் ஏறாத நான்
மனைவியின் கட்டளையை ஏற்று
பேருந்து வந்தவுடன்
முண்டியடித்த கூட்டத்தில்
தட்டு தடுமாறி
எப்படியோ பிடித்து விட்டேன்
மனைவிக்கான இடத்தை
மட்டும்!
நான் நின்றுக் கொண்டே
பயணித்தேன்
மனைவியின்
பார்வையை தவிர்த்தபடி.


சென்ற மாதம்
கிராமத்திலிருந்து
மாநகரம் திரும்பியப் போதும்
இப்படிதான் பயணித்தேன்.
அப்போது முண்டியடித்து
பேருந்து ஏற முயற்சிக்கவே இல்லை.
இரண்டு பேருந்துகள்
கூட்டங்களை சுமந்து
சென்ற பின்
மூன்றாவது பேருந்தில்
உட்கார்ந்தே பயணித்தேன்
மனைவி இல்லாத
பயணத்தில்
தனி ஒருவனாக..!

-     கி. அற்புதராஜு.