எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 17 July 2020

படித்ததில் பிடித்தவை (“யாரிடம் கொடுப்பது?” – ஜெயபாஸ்கரன் கவிதை)



*யாரிடம் கொடுப்பது?*

நாரசமாக ஒலிக்கிறது
நகரப் பேருந்துகளின்
நடமாட்டம்.
நரமாக இருக்கிறது
அவற்றில் எனக்கு நேரும்
பயண அனுபவங்கள்.

என்னருகே சிக்கிய
எவனோ ஒரு பயணி
இளஞ்சூடாகக் கசியவிடுகிற
கார்பன்டை ஆக்சைடுதான்
எனக்கான ஆக்ஸிஜனாகிறது
கொட்டிவாக்கத்தில் இருந்து
அடையாறு வரைக்கும்.

படியில் தொற்றிப் பதை பதைத்து
முன்னால் போ என
மரண ஓலமிடுகிறார்கள்
தமது முந்தைய பயணங்களில்
முன்னால் போகாதவர்கள்
நசுங்கும் என் கால்களை
லாவகமாக மீட்டெடுத்து
மிதிக்கத் தேடித் தோற்கிறேன்
மிதித்த கால்களை.

இருந்தும்,
டைரியால் பஸ் மறித்து
பாய்ந்து உட்புகுந்து
அதிகாரம் பீய்ச்சிய
பரிசோதகர்களிடம்
கொடுத்துவிட்டேன்
பயணச்சீட்டை..!

யாரிடம் கொடுப்பது
பயண வேதனைகளை..?

*ஜெயபாஸ்கரன்*


{நெரிசல் மிக்க நமது பயண அனுபவங்களின் வலியை எளிமையான வார்த்தைகளால் மிக யதார்த்தமாக கவிஞர் ஜெயபாஸ்கர் தனது கவிதையில் பதிவு செய்திருக்கிறார்.
நம்மில் பெரும்பாலானவர்க்கு இந்த அனுபவம் இருப்பதால் இந்தக் கவிதையும் நம்மை தொற்றிக் கொள்கிறது. வாசியுங்கள் தோழமைகளே...! தோழர். சக்கையா.}

No comments:

Post a Comment