எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 21 July 2020

படித்ததில் பிடித்தவை (“பகல் ஒழியும் காலத்தில்” – ஆதவன் தீட்சண்யா கவிதை)



*பகல் ஒழியும் காலத்தில்*

மாடத்தில் ஒரு மெழுகுவர்த்தி
இருக்கும் தைர்யத்தில்
தனித்திருந்தேன் அறையில்.

தளிரென ஒயிலாய்
அசைந்துருகி ஒளியீந்தும்
அதன் திரியிலிருந்து
சுடர்ந்து பரவியது இருட்டு.

ஒளியையே எதிர்பார்த்திருந்த
அதிர்ச்சியிலும் இருளிலும்
அமிழ்பவனுக்கு சொன்னது:

உனக்கென ஒளி வேண்டின்
பந்தமாய் கொளுத்திக்கொள்ளேன்
உன் தலைமுடியை.

என்னையே உருக்க அஞ்சித்தான்
இதுகாறுமதை
தியாகியாய்  கொண்டாடிய கபடம்
எப்படித்தான் புரிந்ததோ மெழுகுவர்த்திக்கு..?

*ஆதவன் தீட்சண்யா*

{தியாகங்கள் போற்றப்பட வேண்டும். தியாகிகள் வணங்கப்பட வேண்டும் என்ற சொல்லாடல் மகத்தானது. எனினும் பல நேரங்களிலும் அதன் பின்னே ஒரு நுண்அரசியலும், ஏமாற்றுத்தனமும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த கவிதை சொல்கிறது.
நேர்கோணத்தில் நின்று இந்த கவிதையை வாசிக்காமல் எதிர்கோணத்தில் நின்று வாசித்துப் பாருங்கள் . அப்போதுதான் அதன் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும் தோழமைகளே..! தோழர். சக்கையா.}

No comments:

Post a Comment