எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 14 May 2020

படித்ததில் பிடித்தவை (“குருவியுடன் சற்று நேரம்” – தேவதேவன் கவிதை)


குருவியுடன் சற்று நேரம்

நான் அதைப்பார்த்து புன்னகைத்தவுடன்
அது கேட்டது

என்ன செய்துகொண்டிருக்கிறாய்..?
ஒரு கவிதையை எழுதப்பார்க்கிறேன்.’
புரியும்படியாக சொல்.’
உன்பார்வையில் சொல்ல வேண்டுமானால் பறத்தல்
படிப்பவர்களை கொஞ்சம் பறக்கும்படி செய்கிற
சில வரிகள் எழுத முயன்றுகொண்டிருக்கிறேன்.’
உனக்கு பறக்கத் தெரியுமா..?’
பறக்கத்தெரிந்தவன்தானே எழுத முடியும்.’
அப்படியா ரொம்ப சந்தோஷம்
அதுதான் உன்னைப்பார்த்த உடனேயே
எனக்கு உன்மேல் ஒரு பிரியம்
ஏற்பட்டது போலிருக்கிறது
சரி இப்போது என்னோடு வருகிறாயா
ஒரு ரவுண்டு போய்வருவோம்

இருவரும் பறக்க தொடங்கினோம்.

எங்கே போயிருந்தீர்கள் இத்தனைநேரம்..?
எத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா..?’
மாடிப்படி ஏறிவந்து எரிச்சலுற்றாள் மனைவி.

எழுதுவதிலேயே மூழ்கி இருந்திருக்கிறேன் என்றேன்.

வெற்றுக்காகிதத்தை சுட்டிக்காட்டி
விடாது அவள் துரத்த
உண்மை வெளியே வந்துவிட்டது..!”

          - தேவதேவன்.

No comments:

Post a Comment