எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 27 April 2020

படித்ததில் பிடித்தவை (“மாரப்பன் (எ) அய்யனார்” – இரா.பூபாலன் கவிதை)


மாரப்பன் (எ) அய்யனார்

வழக்கத்துக்கு மாறாக
மாரப்பன் மீது
அய்யனார் வந்தது
இதுவே முதல்முறை.

ஒரு போத்தல் சாராயமும்
வறுத்த முழுக் கோழியும்
நாட்டாமைதான்
படைக்க வேண்டுமென
உத்தரவிட்டதால்
நாட்டாமை பொண்டாட்டி
நடுங்கியபடி கொண்டுவந்து
படையலிட்டாள்.

நாக்கைச் சுழற்றியபடி
மிச்சம் வைக்காமல்
உருட்டிய விழிகளுடன்
தின்று முடித்தார்
மாரப்பன் (எ) அய்யனார்.

கைதுடைக்க
நாட்டாமை தோளில்
கிடந்த துண்டை
பவ்யமாக தந்தபோது,
அய்யனார் (எ) மாரப்பனுக்கு
நினைவு வந்தது

ஒரு வாரம் முன்னதாக
நாட்டாமை முன்பாக
தோளில் துண்டோடு
நின்றதற்காக
மாரப்பன் அப்பா வாங்கிய
அறை..!

             -         இரா.பூபாலன்.
               (நன்றி: ஆனந்த விகடன்).

No comments:

Post a Comment