எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 24 April 2020

படித்ததில் பிடித்தவை (“நன்றி சொல்ல வேண்டும்” – கல்யாண்ஜி கவிதை)


நன்றி சொல்ல வேண்டும்

வாகனத்தைத் தவறான இடத்தில்
நிறுத்தியதற்காக நான்
காவல் நிலையத்தின் வெளிப்புறம்
நிறுத்தப்பட்டிருக்கிறேன்.

இதைவிடக் கூடுதலான குற்றமாக
என் உடல் மொழியின் ஏதோ ஒன்று
இருந்திருக்க வேண்டும்.

வெயிலைப் பூசிக்கிடக்கிற
நகராட்சி மருத்துவமனையிலிருந்து
மகப்பேறு முடிந்த தாய்
ஆட்டோவில் ஏறிக்கொண்டிருந்தாள்
மூத்த பெண் குழந்தையுடன்
கருஞ்சிவப்பில் பிஞ்சுக்கால்கள் தெரிய.

வலது பக்கத்தில் ஏழிலைக்கிழங்குப்
பையோடு முதியவள் கிளிஜோஸ்யம்
கேட்டபடி கண்கள் சுருக்கி.

விசிறின சோழிகளில் ஒரு சோழி
நடுக்கத்திலிருந்து விடுபட்டு
அமைதியடைய வெகு நேரமாயிற்று.

நான் சிகப்புச் செங்கல் கட்டிடத்திற்கு
நன்றி சொல்லவேண்டும்...

என் குற்றங்களுக்கு
சுங்கிடித்துணிக்குள் பிஞ்சுப்பாதங்களையும்
ஏழிலைக்கிழங்கின் முறிந்த குறுக்குவெட்டையும்
ஒரு சோழியின் நடுக்கத்தையும்
தண்டனையாகத் தந்ததற்கு..!

    *கல்யாண்ஜி*

No comments:

Post a Comment