எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 27 December 2024

படித்ததில் பிடித்தவை (“பள்ளத்து வீடுகள்” – காளிங்கராயன் கவிதை)


*பள்ளத்து வீடுகள்*


“எனக்கெட்டு வயசிருக்கும்

எங்களை விட்டு அப்பா 

ஓடிப்போன பொழுது.


பத்து வயதில் படிப்பை 

நிறுத்திவிட்டுப்

பள்ளத்து வீடுகளுக்குப் 

பலகாரம் விற்றுவர 

அம்மா அனுப்பினாள்.


ஊரை விட்டொதுங்கிய

சரவணா டாக்கீஸின்

பின்புறத்துக் குடிசைகளைத்தான் 

பள்ளத்து வீடுகளென்போம்.


அந்த வீடுகளில்

எப்போதும் பெண்களின் 

ராஜ்ஜியந்தான்.


பகல் முழுக்க

பூவரச மர நிழலில்

வெற்றிலைச் சாறு தெறிக்க 

வம்பு பேசிச் சிரித்திருப்பார்கள்.


ஆண்கள் அவ்வப்போது

அவசர அவசரமாக

வந்து போவார்கள்...


பல வருசங்கழிந்து

பம்பாய்க்குப் பக்கத்திலிருந்து 

அப்பாவின் கடிதம் -

உடனே ஊருக்கு வருவதாக.


அப்பா வந்ததும்

அதட்டிக் கேட்கணும் -

பள்ளிக்குப் போகாமல்

பரத்தையர் வீடுகளில்

நான் பலகாரம் விற்றதற்கு 

நீ தானே காரணமென்று.


கூடவே -

பல நாள் பட்டினி கிடந்தும்

பிள்ளைகள் வளர்க்க வென்று

பள்ளத்தில் குடியேறாத 

அம்மாவின் பெருமை சொல்லி

ஆங்காரமாய்ச் சிரிக்கவும் 

வேணும்..!”

 

*காளிங்கராயன்*

(கணையாழி  ஏப்ரல் - 1994)



Monday, 9 December 2024

படித்ததில் பிடித்தவை (“நான் அழவில்லை” – கல்யாண்ஜி கவிதை)


 நான் அழவில்லை

“ஒரே திருமண அழைப்பிதழை

நூறு முகவரிகளுக்குச் 

தட்டச்சுகிறாள்

கூரியர் அலுவலகத்துப் பெண்.


வேகமாகக் காலியாகிறது 

அவளுடைய 

நீல நிற தண்ணீர் பாட்டில்.

ஒவ்வொரு மிடறு 

அருந்தும் போதும்

’நான் அழவில்லை’ என்று

குப்பியின் திருகு வரைகளிடம் 

அவள் சொல்ல முயல்கிறாள்.


தானாகவே உடையப் போகும் 

ஒரு குமிழி இப்போது 

தண்ணீர் பாட்டிலுக்குள்..!”

 

*கல்யாண்ஜி*



Sunday, 1 December 2024

படித்ததில் பிடித்தவை (“ஒரே ஒரு மழைத்துளி” – கல்யாண்ஜி கவிதை)


ஒரே ஒரு மழைத்துளி


“நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? 

மழையின் ஒரே ஒரு துளி,

சுமக்க முடியாத 

மிகப் பெரும் பாரம் போல, 

ஒரு ஈர இலை தன்னைத் தாழ்த்தி, 

மிகுந்த பிரயாசையுடன் 

அதன் நுனியில் ஏந்திக்கொண்டு, 

பாவலா பண்ணுவதை..!”

 

*கல்யாண்ஜி*



Sunday, 17 November 2024

படித்ததில் பிடித்தவை (“நவ்வாப் பழம்” – கல்யாண்ஜி கவிதை)

 

*நவ்வாப் பழம்*

 

பேருந்துக்குக் காத்திருக்கையில்

எனக்கு பக்கத்து நபரிடம் பேசும்

கெட்ட பழக்கம்.

வெளுத்த சட்டை பூராவும்

ஒரே கறையா இருக்கே..?’

என் கேள்விக்குக் கீழே குனிந்து பார்த்தவர்

கருநீலக் கறைகளைத் தொட்டுச் சிரித்தார்.

காத்துக் காலம் லா…

நவ்வாப் பழம் உதுந்தது அது

சட்டையை மறுபடி நீவிக்கொண்டார்.

நாவல் பழம் உதிர்கிற

காற்றுக் காலத்திற்கு

எந்தப் பேருந்தில் ஏறினால்

உடனே போகலாம்..?

 

*கல்யாண்ஜி*



Monday, 4 November 2024

படித்ததில் பிடித்தவை (“இலவசமாய்க் கிடைக்கிறது” – ஷான் கவிதை)

 

*இலவசமாய்க் கிடைக்கிறது*

 

பாறையாய்க் கிடக்கும்

மனங்களை

மெல்லிய குச்சி ஒன்றால்

தட்டித் தட்டி

திறக்க முயன்றபடி

ரயிலாடி நடக்கிறாள்

அவள்.

 

சிலர் வாங்குகிறார்கள்.

சிலர் பேரம் பேசுகிறார்கள்.

சிலர் இரக்கப் படுகிறார்கள்.

சிலர் பயணம் மட்டும் செய்கிறார்கள்.

 

பேனா, கீசெயின்,

பொம்மை, டார்ச்லைட்

எது வாங்கினாலும்

இலவசமாய்க் கிடைக்கிறது

வாழ்க்கைக்கான பாடமொன்று

பார்வையற்ற சிறுமியிடம்..!

 

*ஷான்*

Saturday, 26 October 2024

படித்ததில் பிடித்தவை (“தயவுசெய்து என்னை அவசரப்படுத்தாதீர்கள்” – பார்பரா வான்ஸ் கவிதை)

 

*தயவுசெய்து என்னை அவசரப்படுத்தாதீர்கள்*

 

நானொரு நத்தை.

தயவுசெய்து என்னை

அவசரப்படுத்தாதீர்கள்.

அதோ அந்த

செர்ரி மரங்களை நோக்கி

நான் மெல்ல நகர்கிறேன்.

நான் சென்றடையவேண்டிய

இடம் ஒன்றுமில்லை.

செய்தே தீரவேண்டிய

வேலைகளும் கிடையாது.

இந்த வேகமே

எனக்கு உவப்பு.

நான் மெதுவாகப் போகவே

விரும்புகிறேன்.

இது எனக்கு

நான் கடந்து செல்லும்

பூக்கள் அனைத்தையும்,

புல்லின் இதழ்கள்

ஒவ்வொன்றையும்

அறிந்துகொள்வதற்கு,

வேண்டிய நேரத்தைத் தருகிறது.

 

நான் ஒரு நத்தை.

இது என் பாதை.

தயவு காட்டுங்கள்..!

என்னை அவசரப்படுத்தாதீர்கள்

எனக்கு

இந்நாள் முழுவதும்

இன்னும் மீதமிருக்கிறது..!”

 

*பார்பரா வான்ஸ்*








(அமெரிக்கப் பெண் கவிஞர்)

𝐃𝐨𝐧'𝐭 𝐑𝐮𝐬𝐡 𝐌𝐞 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞

I am a snail—
Don’t rush me, please.
I’m heading for
Those cherry trees.

I have no place
I have to be,
No pressing thing
I have to see.

I like this speed;
I like being slow;
It gives me time
To get to know

All the flowers
That I pass,
Every blade
Of every grass.

I am a snail;
This is my way.
Don’t rush me, please.
We’ve got all day.


*Barbara Vance*

தமிழ் மொழிபெயர்ப்பு: 

க.மோகனரங்கன்.




Sunday, 20 October 2024

படித்ததில் பிடித்தவை (“நெகிழ்ச்சி” – ஆனந்த்குமார் கவிதை)


*நெகிழ்ச்சி*

 

மலர்த் தொட்டியை

கொஞ்சம்

சுவற்றிற்கு அருகிலேயே

வைத்துவிட்டேன்.

 

பூப்பதற்கு முந்தைய நாள்

சுவற்றை கொஞ்சம்

சீண்டிப் பார்க்கிறது

மொட்டு.

 

அம்மாடி,

அத்தனை உறுதி ஒன்றுமில்லை.

சிறுமகள் தொட்ட

தந்தையின் உடலென

கொஞ்சம்

நெகிழ்ந்துதான் போனதென்

வீடு..!

 

*ஆனந்த்குமார்* 



Friday, 11 October 2024

படித்ததில் பிடித்தவை (“கற்றுத் தருகிறாள்...” – கண்மணி ராசா கவிதை)

 

*கற்றுத் தருகிறாள்...*

 

பக்கத்து இருக்கை

பயணியிடம்

புன்னகை கூட

செய்யாமல்

நீள்கிறது பயணம்...

 

தூரத்து

வயல்வெளிச் சிறுமி

கையசைத்து

கற்றுத் தருகிறாள்

அன்பை..!

 

*கண்மணி ராசா*