எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 22 June 2018

படித்ததில் பிடித்தவை (“பயணம்” – அநிருத் ஆகாஷ் கவிதை)



பயணம்

நான்
பேருந்தை விட்டு
இறங்கிய பின்னும்
பயணம்
செய்துகொண்டிருக்கிறது
எனது
மீதி சில்லறை..!

-   அநிருத் ஆகாஷ்.

Tuesday, 12 June 2018

படித்ததில் பிடித்தவை (“பாவம்” – திருமலை சோமு கவிதை)


பாவம்
எல்லா
பாவங்களையும் தொலைக்க
நதியில் நீராடச் சொன்னார்கள்..!

நதிகளைத் தொலைத்த
பாவத்தை
எப்படித் தீர்ப்பது..?

 திருமலை  சோமு.
(மனசுக்குள் பெய்யும் மழை – கவிதை தொகுப்பு)

Tuesday, 5 June 2018

தனி ஒருவன்



கிராமத்திலிருந்து
இரவு முழுவதும்
சொகுசுப் பேருந்தில்
பயணம்
மனைவியுடன்
மாநகரத்திற்கு...


அதிகாலை
மாநகரத்தின்
பெரியப் பேருந்து நிலையத்தில்
இறங்கியவுடன்
புறநகர் செல்ல
மாநகரப் பேருந்தைப் பிடிக்க
பெரிய கூட்டம்.


எனது கைப் பையை
வாங்கிக் கொண்ட
மனைவி
எப்படியாவது பிடிங்க
இரண்டு இடங்களை! என்றாள்.


எப்போதுமே
கூட்டமாக உள்ள
பேருந்தில் ஏறாத நான்
மனைவியின் கட்டளையை ஏற்று
பேருந்து வந்தவுடன்
முண்டியடித்த கூட்டத்தில்
தட்டு தடுமாறி
எப்படியோ பிடித்து விட்டேன்
மனைவிக்கான இடத்தை
மட்டும்!
நான் நின்றுக் கொண்டே
பயணித்தேன்
மனைவியின்
பார்வையை தவிர்த்தபடி.


சென்ற மாதம்
கிராமத்திலிருந்து
மாநகரம் திரும்பியப் போதும்
இப்படிதான் பயணித்தேன்.
அப்போது முண்டியடித்து
பேருந்து ஏற முயற்சிக்கவே இல்லை.
இரண்டு பேருந்துகள்
கூட்டங்களை சுமந்து
சென்ற பின்
மூன்றாவது பேருந்தில்
உட்கார்ந்தே பயணித்தேன்
மனைவி இல்லாத
பயணத்தில்
தனி ஒருவனாக..!

-     கி. அற்புதராஜு.

Sunday, 20 May 2018

கான்க்ரிட் கனவுகள்...


"கண்ணாடிக்கு வெளியே
காற்றில்
அசைந்து ஆடும்
மரங்களும் செடிகளும்
இயற்கையை
தவறவிட்ட என்னை
வருத்தப்பட வைக்கின்றன...

குளீரூட்டப்பட்ட
அலுவலகத்தின்
கண்ணாடி அறையில்
நான்..!"
             
-  கி. அற்புதராஜு.

Wednesday, 2 May 2018

பூங்காவில் ஒரு மஞ்சள் பூ மரம்


அதிகாலை பூங்காவில்
நடைப் பாதையெங்கும்
இயல் வாகை மரத்தின்
மஞ்சள் பூக்கள்.

இயல்பாகவே
பூக்களை மிதிக்காமல்
நடக்கும் என்னை,
வழக்கமான நடையை
மாற்றி சற்றே
தாண்டி தாண்டி
நடக்க வைத்து
அழகு பார்க்கிறது
அந்த வாகை மரம்.

அடுத்த சுற்றில்
நடக்கும் என்னை
அதிக பூக்களை
விழ வைத்து
சற்றே காய்ந்த
பழைய பூக்களை
மிதிக்கும் நிலைமைக்கு
என்னை தள்ளி விட்டது
அந்த மரம்.

ஒரு வழியாக
அந்த சுற்றில்
மரத்தை கடந்த பின்
சற்றே அதிகமாக
வீசிய காற்றில்
இன்னும் அதிகமாக
பூக்களை உதிர்த்தது
வாகை மரம்.

அதற்கு மேல்
பூங்காவில் நடக்க
விருப்பமின்றி
வெளியேறிய என்னை
தடுக்க முடியாமல்
எனது ஊடலை
அந்த மரம்
ரசித்திருக்கும் போல...

அடுத்த நாள் காலையில்
நான் நடக்கும் பாதையை
அத்தனை சுத்தமாக்கி...
பூக்களை ஓரத்தில் மட்டும்
விழ வைத்து...
சற்றே தென்றலை
வீச வைத்து...
என்னை சமரசம்
செய்தது அந்த
மஞ்சள் பூ மரம்..!

- கி. அற்புதராஜு.

Sunday, 22 April 2018

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்-2)



அலையும் கடலும்
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை..!

- நகுலன்.



மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம் 
சொல்லக் கூடாத பொழுதொன்றில்
தொடங்கினேன்
எனக்குப் பத்துப் பெண் குழந்தைகள் வேண்டும்
முன்னாள் காதலிகள் பெயர்களை
வைக்கவென
மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.

எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்
அதுவும் ஐந்து என அவள் சொல்கையில்
மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம்

- லதாமகன்.

Saturday, 24 March 2018

படித்ததில் பிடித்தவை (“என் ஒற்றைக் கவிதை” – அ. வெண்ணிலா கவிதை)



என் ஒற்றைக் கவிதை
சில நூறு விநாடிகளைப்
பார்த்திருக்கின்றன பூக்கள்.

சில நூறு மாதங்களைக்
கடந்திருக்கின்றன செடிகள்.

சில நூறு ஆண்டுகளை
சுவாசித்திருக்கின்றன மரங்கள்.

பல நூறு தலைமுறைகளை
வாசித்துக் கொண்டிருக்கும் மலைகள்.

பூ, செடி, மரம், மலை
அத்தனையும் புரட்டிப் பார்த்துவிடும்
என் ஒற்றைக் கவிதை.

-    அ. வெண்ணிலா (ஆதியில் சொற்கள் இருந்தன... கவிதை தொகுப்பிலிருந்து.)

Friday, 16 March 2018

படித்ததில் பிடித்தவை (“பெயரெச்சம்” – தமிழ்ப்பறவை கவிதை)



பெயரெச்சம்
நதியில் உன் பெயர்
எழுதிமுடிக்கும் முன்பே
நகர்ந்து விட்டிருந்தது
நதியும் பெயரும்.
விரல்களில் உன்
பெயரெச்சம்
- தமிழ்ப்பறவை.

Tuesday, 6 March 2018

தூக்கணாங்குருவி கூடு



தூக்கணாங்குருவி கூடு
பார்க்க வீட்டுக்கு வரீங்களா?
ஞாயிறு காலை
நண்பரிடமிருந்து கைப்பேசி
அழைப்பு.

சிறு வயதில்
கிராமத்தில் பார்த்தது
நகர வாழ்க்கையில்
அபூர்வமான நிகழ்வு என
குளித்து விட்டு உடனே
கிளம்பினேன்
அடுத்த தெருவிலிருக்கும்
நண்பர் வீட்டுக்கு.

சொந்த வீட்டில்
கீழ்தளத்தில்
குடியிருக்கும் நண்பர்
வாடகைக்கு விட்டிருக்கும்
முதல் தளம்
இரண்டாம் தளம் கடந்து
மொட்டை மாடிக்கு
அழைத்துச் சென்றார்.

மூன்றாம் தளம் வரை
உயர்ந்து வளர்ந்து
சூரியனை தரிசிக்கும்
மாமரத்தில் கட்டியிருந்த
தூக்கணாங்குருவி
கூட்டை மிக அருகில்
பார்த்தோம்.

எங்களது குரல் கேட்டு
தூக்கணாங்குருவி
வெளியே வந்தது.
சுற்றும் முற்றும் பார்த்து
கீச் கீச்சென்று சத்தமிட்டு
பறந்து சென்றது.
அதன் துணைக் குருவியும்
அதனை பின் தொடர்ந்தது.
பறவைகளுக்கு 
வார விடுமுறை 
கிடையாது போல.

தனக்கும் துணைக்குமென
இரண்டு அடுக்கு கூடு.
அவ்வளவு அழகான கூட்டில்
காதல் தெரிந்தது.
முக்கியமாக மற்ற குருவிகளுக்கு
வாடகைக்கு விடவில்லை..!”

-    கி. அற்புதராஜு.