எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 11 August 2019

படித்ததில் பிடித்தவை (“குழந்தையாக நாம்” – சிவநேசன் கவிதை)


குழந்தையாக நாம்...

நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்...

நம்முடைய                
செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்...

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்...

நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை..!

அதை ரசிக்கும்
பொழுதுகளில்...
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!

                -  ந. சிவநேசன்.

Tuesday, 6 August 2019

படித்ததில் பிடித்தவை (“பூனைக்குட்டி” – லீனா மணிமேகலை கவிதை)


பூனைக்குட்டி

ஊஞ்சலின் நடுவில்
அமர்த்தலாக சாய்ந்திருந்தது பூனைக்குட்டி
குரலுயர்த்தி விரட்டினேன்
ஒரு சிறுகுச்சியைத் தரையில் தட்டி அச்சுறுத்தினேன்
முறைத்துப் பார்த்தேன் எதற்கும் மசியவில்லை
எனக்கு ஊஞ்சலாட வேண்டும் ஓரமாக அமர்ந்துகொண்டேன்
பூனை அசையாமல் கிடந்தது
அதன் கண்களைத் தவிர்த்தேன்
அதன் இருப்பையும் தவிர்த்தேன்
கிர்ரிக்க்
கிர்ரிக்க்
கிர்ரிக்க்
ஊஞ்சலாடும் சத்தம் மட்டும்தான்
பிரபஞ்சத்தின் சத்தமாக இருந்தது
தவழ்ந்து வந்து மெல்ல
என் மடியில் படுத்துக்கொண்டது பூனைக்குட்டி
வெள்ளையும் பழுப்புமாய்
அதன் ரோமத் தீண்டலில்
திக்கித்துப்போய்
வெடித்து அழுதுவிட்டேன்.

- லீனா மணிமேகலை.

Tuesday, 30 July 2019

படித்ததில் பிடித்தவை (“உங்கள் மழை” – கவிஞர். ஏகாதேசி கவிதை)


உங்கள் மழை

உங்கள் பணம்
உங்கள் இடம்
உங்கள் வீடு
உங்கள் குடும்பம்
உங்கள் ஊர்
உங்களை விட்டுப் போக
பொறுப்பீர்களா..?

பின் எப்படி முடிகிறது
உங்கள் மழையை மட்டும்
வாய்க்கால் வெட்டி
வழியனுப்பி வைக்க..!

க. ஏகாதேசி.

Monday, 1 July 2019

படித்ததில் பிடித்தவை (“ஈரமாக மழை” – மீள் கவிதை)


ஈரமாக மழை

தட்டாம்பூச்சிகள்
தாழப் பறந்தால்
தவறாது மழை என்பாள்
எங்கள் பாட்டி..!

இப்போது
தட்டாம்பூச்சியும்
எங்கள் பாட்டியும்
இருக்கிறார்கள் படமாய்..!

மழை
நினைவில்தான்
இருக்கிறது
ஈரமாக..!

(மீள்).

Wednesday, 19 June 2019

*வணக்கம்*


திருமண வரவேற்பில்
மைத்துனர் கைப்பிடித்து
மேடையேறினார் மணமகன்...

பெரியவரின் சொல்படி
அரங்கத்தில் அமர்ந்திருந்த
உறவினர்களையும்
நண்பர்களையும்
பார்த்து கைக்கூப்பியவர்...

இடையில் புகுந்து
கூட்டத்தினரை மறைத்து
வீடியோ கவரேஜ்
செய்தவரின் சொல்படி
தனது வணக்கத்தை
முடித்துக் கொண்டார்
வீடியோவுக்குள்..!


- கி. அற்புதராஜு.
    (13.06.2019)

Monday, 6 May 2019

படித்ததில் பிடித்தவை (‘தீயான ஒரு பொறி’ – எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரை)


தீயான ஒரு பொறி

ஒரு முறை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னையில் இருந்து வந்திருந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு கம்பார்ட்மென்டில் இருந்தார்கள். அவர்கள் திடீரென ஆளுக்கு ஒரு பையோடு எழுந்து ரயில் பெட்டிகளுக்குள் நடக்கத் தொடங்கினார்கள். அந்த பையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி புத்தககங்கள் இருந்தன.

யார் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் படிக்க எடுத்துக் கொள்ளலாம். படித்து முடித்தவுடன், அங்கேயே வைத்துவிடவும். சென்னை வந்தவுடன் நாங்கள் சேகரித்துக் கொள்கிறோம் என்றார்கள்.

ஆச்சர்யமாக இருந்தது. 32 மணி நேரப் பயணத்தில் பயணிகள் தாங்கள் விரும்பிய புத்தகங்களைத் தேர்வு செய்து படித்துக் கொண்டு வந்தார்கள். சிலர் படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகங்களைப் பெற்று வந்தார்கள்.
சென்னையை நெருங்கும் போது நான் அந்த இளைஞர்களிடம் சென்று பாராட்டுத் தெரிவித்தபடியே, இந்த யோசனை எப்படி உருவானது? எனக் கேட்டேன்.

பத்திரிகையில் ஒரு கட்டுரை படிச்சோம். அதுல ஒருத்தர் இப்படி எழுதியிருந்தார். அதை நாங்க ட்ரை பண்றோம் என்றார்கள்.

என்ன எழுதியிருந்தார்? எனக் கேட்டேன்.

ராஜஸ்தான்ல ஒட்டகத்துல கொண்டு போய் புக்ஸ் தர்ற மொபைல் லைப்ரரி இருக்கு. தாய்லாந்துல குக்கிராமங்களுக்கு யானையில கொண்டுபோய் புக்ஸ் கொடுக்கிறாங்க. நம்ம ஊர்ல லாங் ஜர்னி போற ட்ரெயின்ல தனியா ஒரு கம்பார்ட்மென்ட்ல ஏன் லைப்ரரி வைக்கக் கூடாதுனு எழுதியிருந்தார். அதைத்தான் நாங்க ட்ரை பண்ணிப் பார்த்தோம் என்றார்கள்.

அந்தக் கட்டுரையை நான்தான் எழுதினேன் என அவர்களிடம் சொன்னேன்.

சந்தோஷத்தில் சிரித்தபடியே, சாரி சார், உங்க பெயரை மறந்துட்டோம் என்றார்கள்.

எழுத்தில் உருவான ஒரு பொறி என் கண் முன்னே செயலாக மாறியிருந்தது சந்தோஷம் அளித்தது.


- எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் இந்திய வானம் என்னும் புத்தகத்திலிருந்து.

Saturday, 27 April 2019

*எதிர்வினை*


ரயிலில் உட்கார்ந்து
பிரயாணிக்கையில்
எனக்கு எதிரே
உட்கார்ந்தவன்
காலை நீட்டினான்
எனக்கான இடத்தில்..!

மனதில் தோன்றிய
எதிர்வினையால்
மூளை கட்டளையிட
பெருக்கல் குறியீட்டில்
இளைப்பாறிய
என்னுடைய கால்கள்
இருக்கையின்
அடியிலிருந்து
வெளிப்பட்டது விட்ட
இடத்தைப் பிடிக்க..!

- கி. அற்புதராஜு.

Wednesday, 17 April 2019

படித்ததில் பிடித்தவை (*சுஜாதாவின் பதில்*)


*சுஜாதாவின் பதில்*


கேள்வி: கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?



பதில்: உண்டு. நினைத்தாலே இனிக்கும் கம்போசிங்கின்போது. சில பொதுக்கூட்ட மேடைகளில்.
எங்கேயும் எப்போதும் சங்கீதம்…… சந்தோஷம்..!
...
எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.


விசு, என்ன ட்யூன்?

அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!

வாசி!

விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், தன்னானே தன்னானே தன்னானே தன்னானே என்று பாடினார். உடனேயே கவிஞர், எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் என்றார். பாடிப் பாரு!

கச்சிதமாக இருக்கு, கவிஞரே! அடுத்த அடி.?  தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…! தன்னானேக்கு பதில் தானனன்னேயா? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா? என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.

பாலசந்தர், தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே!

ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…! சரியா?

Perfect !

விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (காலை ஜப்பானில் காபி….  மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல?) உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.

இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது?



தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள்?

சீதா நேர் நேர்;
ஜானகி நேர்நிரை;
ஜனகா நிரைநேர்;
வைதேகி நேர் நேர் நேர்….

இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும்!
...

ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார்எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார். உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.

- சுஜாதா.


YOUTUBE - ல் பாடலை பார்க்க...
https://www.youtube.com/watch?v=gEoeMnPYzqg

Thursday, 4 April 2019

பேசாத எருமைகள்...



அலுவலகம் செல்லும் நான்
கூட்டத்தில் நின்று கொண்டே
ரயிலில் பயணிக்கையில்...

நிற்பவர்களிடையே புகுந்து
முதுகில் பையுடன்
எல்லோரையும் உரசிக் கொண்டே
நகரும் இளைஞன்
யாரையும் நகர சொல்லவில்லை.
காதில் ஹெட்செட்டுடன்
பாடல் கேட்டுக் கொண்டே
செல்கிறான் அவன்..!

சற்று நேரம் கழித்து
யாரோ முதுகில்
கை வைப்பது போல
உணர்கையில்
பின்னால் ஒருவன்
முண்டிக் கொண்டிருந்தான்
முன்னே செல்ல.
அவனும் பேசவில்லை.
வளைந்து நெளிந்து
இடம் கொடுத்தால்
என் இடத்தில் சரியாக
இடம் பிடித்தவன்
கைப்பேசியை
பையிலிருந்து எடுத்துப்
படம் பார்க்க தொடங்கினான்..!

இறங்கும் இடம்
நெறுங்கியதும்
சார் கொஞ்சம் வழி விடுங்க...
என நான் மட்டும்
பேசியப்படியே சென்றது
எனக்கே விநோதமாக
இருந்தது.

ரயில் நிலைய வாயிலை
கடக்கும் போது
வழி மறைத்து நின்ற
இரண்டு எருமை மாடுகள்
இறங்கி வருபவர்களைப்
பார்த்ததும் அம்மா.. ம்மா... என
குரல் எழுப்பி
பாதையை விட்டு
விலகி நடந்தன..!

- கி. அற்புதராஜு.