எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 31 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பார்வை’ – பாப்பு கவிதை)



பார்வை
எதிர் இருக்கைப் பயணி
சே குவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்.

ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிடக்
கேட்டுக் கொண்டான்.

பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக் கொண்டேன்
என் சூட்கேஸையும்
எதிர் இருக்கைப் பயணியையும்.

அவனது கண்களும்
பாதி திறந்திருந்தன
என்மீதும் அவன்
சூட்கேஸ் மீதும்..!

-   பாப்பு.
(நன்றி: ஆனந்தவிகடன், 08.09.2010)

Saturday, 22 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பள்ளி வாசல்’ – கவிஞர் யுகபாரதி கவிதை)


பள்ளி வாசல்

எல்லாப் பள்ளிக் கூடத்து
வாசல்களிலும்
தட்டுக் கூடையில்
நெல்லி விற்குமொரு கிழவி
குந்தியிருக்கிறாள்.

உருக்கும் வெயிலில்
நாவறளக் கத்திக் கொண்டிருக்கிறான்
ஐஸ் வண்டிக்காரன்.

பிரேயருக்கு முன்னதாக
வராதப் பிள்ளைகளை
வெளியே விட்டுக்
கதவைப் பூட்டுகிறான்
காவலாளி.

பிரம்பைக் கையிலெடுத்து
காந்தியின் அஹிம்சையைப்
போதிக்கிறார் வாத்தியார்.

அடுத்த மாதக் கட்டணத்துக்கு
யாரேனும் ஒரு மாணவனின் தாய்
மூக்குத்தி கழற்றுகிறாள்.

  - யுகபாரதி.

Tuesday, 18 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பிறவிகள்’ – கவிஞர். தென்கரை சி.சங்கர் கவிதை)


பிறவிகள்
கதவு
ஜன்னல்
கட்டில், நாற்காலி
இன்னும்
பல பிறவிகள்
எடுத்து விடுகிறது
செத்த பின்பும்
மரம்..!
    
- தென்கரை சி.சங்கர்.

Sunday, 16 December 2018

படித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற்காடன் கவிதை)


கடைசித்துளி...
பேருந்திலிருந்து
வீசியெறியப்பட்ட
காலி தண்ணீர் பாட்டிலுக்குள்
நுழைந்து வெளியேறும்
காற்றின் பாதங்களை
நனைக்கிறது
விற்கப்பட்ட நதியின்
கடைசித்துளி..!
    
     -  நாணற்காடன்.

Friday, 7 December 2018

படித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று’ – கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை)


அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.

அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.

ஆயிரம் கிளிகளின் அந்தப்புரம்.
ஆயிரம் குயில்களின் பொன்னூஞ்சல்.
ஆயிரம் சிட்டுகளின் உப்பரிகை.
ஆயிரம் காகங்களின் நிழற்குடை.
ஆயிரம் மைனாக்களின் நடைமேடை.
ஆயிரம் எறும்புகளின் தனிநாடு.
ஆயிரம் ஈக்களின் உணவுத்தட்டு.
ஆயிரம் பூச்சிகளின் வளமாநிலம்.
ஆயிரம் மனிதர்களின் மூச்சுக்காற்று.
ஆயிரம் நீர்க்கால்களின் வேருறவு.
ஆயிரம் ஆண்டுகளின் உயிர்ச்சான்று.
ஆயிரம் ஆண்டுகளின் எதிர்காலம்.

அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.


- கவிஞர் மகுடேஸ்வரன்.

Tuesday, 4 December 2018

படித்ததில் பிடித்தவை (‘குருவிக்கூடு’ – கவிஞர் தேவதேவன் கவிதை)


குருவிக்கூடு

நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு.

இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்.

அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி.

  
 - தேவதேவன்.

Saturday, 1 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பாட்டியின் புடவை’ – கவிஞர் முகுந்த் நாகராஜன் கவிதை)


பாட்டியின் புடவை

பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத் துடைக்கிறது

எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது

பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது

டி.வி., டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது

எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது

இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை..!

-   முகுந்த் நாகராஜன்.

Monday, 26 November 2018

*ரிவெஞ்ச்*


பெரிய ஆலமரத்தை
வெட்டியவுடன்
அந்த இடத்தில்
கட்டப்பட்டது
பத்து மாடி
அரசு அலுவலகம்.

வெட்டும் போது
மண்ணில் விழுந்த
ஆலம்பழமொன்றின்
விதையை
சில வருடம் கழித்து
தின்றது
அந்த மரத்தில் வசித்த
பறவை ஒன்று.

பறக்கும் போதே
எச்சமிட்டது அந்த பறவை.
எச்சத்தில் வந்த விதையை
வாங்கிக் கொண்டது
பத்து மாடி கட்டிடம்.

சரியாக கட்டிட வெடிப்பில்
விழுந்த விதைக்கு
குளிர் சாதனப் பெட்டி
தண்ணீர் கொடுக்க
அட்டகாசமாக வளர்ந்தது
ஆலமர வாரிசு.

பராமரிப்பு இல்லா
அரசு அலுவலகத்தில்
அரக்கனாக வளர்ந்து
உயர்ந்தது ஆலமரம்.

மேலே கிளைகளையும்
சுவரில் வேர்களையும்
நாளுக்கு நாள்
வளர வைத்த
அந்த வாரிசு மரம்
அந்த கட்டிடத்தையே
சில வருடங்களில்
சிதைய வைத்த காட்சியை
வெட்டப்பட்ட ஆலமரத்தில் வசித்த
அத்தனைப் பறவைகளும்
பார்த்துக் கொண்டிருந்தன...

- கி. அற்புதராஜு.

Monday, 19 November 2018

படித்ததில் பிடித்தவை (‘தீக்குச்சி’ – கவிக்கோ. அப்துல் ரகுமான் கவிதை)



தீக்குச்சி


தீக்குச்சி   
விளக்கை ஏற்றியது. 

எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் 
கீழே எறியப்பட்ட 
தீக்குச்சியை  வணங்கினான்.

ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?
என்று கேட்டேன்.  

ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா என்றான்.

-   கவிக்கோ அப்துல் ரகுமான்.
(ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)

Friday, 16 November 2018

அமர காவியம்



கிராமத்து தோட்டத்தில்
உயர்ந்து வளர்ந்த
இரண்டு தேக்கு மரங்களை
நகரத்தில் வீடு
கட்டப் போகும்
மகனுக்காக
வளர்த்து வந்தார்
தந்தை

நகரத்தில் மகனுக்கு
வங்கி கடன் கிடைப்பதில்
தாமதமாகி மரத்தின்
ஆயுள் நீண்டுக் கொண்டிருந்தது…

மகன் கிராமத்துக்கு
வரும் போதெல்லாம்
தேக்கு மரத்தை
வெட்டுவதைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கும்
தந்தையிடம்,
வங்கி கடன் தாமதமாவதால்
சற்றே பொறுத்து
வெட்டலாம் என
சாக்கு சொல்லி
அழகான அந்த மரங்கள்
வெட்டப்பட போவதை தவிர்த்து
மரத்தின்
ஆயுளை மேலும்
நீட்டிக்க செய்வான் மகன்…

மகனின் கருணையில்
குளிர்ந்துப் போனாலும்,
வங்கி கடன்
தனது ஆயுளை தீர்மானிப்பது
பிடிக்காத அந்த மரங்கள்
வெட்டுவதற்கு ஏதுவாக
சரித்துக் கொண்டன
இப்போது வீசிய

கஜா புயலில்..!

-     கி. அற்புதராஜு.

Monday, 12 November 2018

பார்வைகள் பலவிதம்...



மாநகரத்தை நோக்கிய
பயணத்தில்
அந்த புறநகர்
ரயில் நிலையத்தில்
வந்து நின்ற மின்சார ரயிலின்
சன்னல் வழியே
பார்த்தப் போது
புதரின் மீது அபூர்வமாக
ஒரு கொக்கு தெரிந்தது.

கழுத்தை வளைத்து நெளித்து
ரயிலையே பார்த்துக் கொண்டிருந்தது.
நடைமேடை இருக்கையில்
இரு பெண்கள்
உட்காரும் வரை
கொக்குக்குள் நான்.

அதற்குப் பிறகு
இரண்டு பெண்களுக்குமான
இடைவெளியில்தான்
கொக்கு தெரிந்தது...

அந்த நொடிப் பொழுதில்...
அதுவரை கைபேசியை
பார்த்துக் கொண்டிருந்த
எதிர் இருக்கைக்காரர்
என்னைப் பார்த்ததும்,
அந்த பெண்கள்
என்னைப் பார்த்ததும்,
கொக்கு பறந்ததும்,
ரயில் புறப்பட்டதும்
ஒரே நேரத்தில் நிகழ்ந்தது..!

-   கி. அற்புதராஜு.