எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 28 February 2016

படித்ததில் பிடித்தவை (புறாக்கள் வசிக்கும் வீடு - கவிதை)


புறாக்கள் வசிக்கும் வீடு
“நகரில்
புறாக்கூண்டு வீட்டில்
அவர் வசிக்கிறார்.

கிராமத்தில்
பூட்டிக்கிடக்கும்
அவரது
விஸ்தாரமான வீட்டில்
புறாக்கள்
சந்தோசமாக
வாழ்கின்றன..!”

-          ச. சத்தியமூர்த்தி.

Wednesday, 24 February 2016

ரசனை


நகரத்தை அடுத்து
கிராமத்துக்குள்
நுழைந்தது ரயில்...

கான்கிரீட் உலகத்தை
உதறிவிட்டு
கரிசல் பூமிக்குள் நான்.

பச்சை வயல்களில்
நெல் பயிர்களை
காற்று தாலாட்டியது.

அழகான குளம்
சிறுவர்களை
குளிப்பாட்டிக்
கொண்டிருந்தது.

ஆடு, மாடுகள்
தோலுரித்து
கொக்கியில்
தொங்கவில்லை...
புல்வெளியில்
சுதந்திரமாக
அமர்ந்து
அசைப்போட்டுக்
கொண்டிருந்தன.

பச்சை விளக்குக்காக
ரயில் காத்திருக்கையில்
மரக்கிளைகளில்
குருவிகளும்
பறவைகளும்
இளையராஜாவாக
இசைத்துக்கொண்டிருந்தன.

எங்கள் பெட்டியில்
உட்கார்ந்திருந்த
எட்டுப்பேரில்
ஒருவர் தூங்கிக்
கொண்டிருந்தார்.
ஆறுப்பேர்
கைப்பேசியில்
மூழ்கி இருந்தனர்.
நானும் ரயிலும்
ரசித்துக்கொண்டிருந்தோம்..!”

-   K. அற்புதராஜு.

Friday, 12 February 2016

போதை...


“பத்தாவது படிக்கும்போது
சொந்தக்கார சீனியர் மாணவர்
யாருக்கும் தெரியாமல்
தனிமையில் புகைப்பிடிப்பதை
பார்த்துவிட்டேன்.
நான் பார்த்ததை
அவர் பார்த்து
கொஞ்சம் வேர்த்து
என்னையும்
கட்டாயப்படுத்தி
இருமிக்கொண்டே
அங்கிருந்து ஓடிவிட்டேன்.
ஏனோ தெரியவில்லை
அப்போதிலிருந்தே
புகை எனக்கு பகையானது.

படிப்பை முடித்து
வேலைக்கு வந்தவுடன்
எப்போதாவது நடக்கும்
நண்பர்களின் ட்ரீட்
பீரில் தொடங்கி
மதுவில் முடியும்.
அதிலும் மூழ்காமல்
கரையேறிவிட்டேன்.

அதற்கு பிறகு
விஞ்ஞான வளர்ச்சியில்
என்னை போதைக்குள்
தள்ளியது
தொலைக்காட்சியும்,
கணினியும்,
கைப்பேசியும்தான்...

ஏனோ இன்னும்
கரையேறவே முடியவில்லை
முகநூலிலிருந்தும்,
வாட்ஸ் ஆப்-பிலிருந்தும்..!”

-   K. அற்புதராஜு.

Wednesday, 10 February 2016

கடவுளும்... குழந்தையும்...



“கடவுள்
குழந்தைகளாக
பிறக்கிறார்.

குழந்தைகள்
மனிதர்களாக
வளர்கிறார்கள்.

மனிதர்கள்
நல்லவனாகவும்
கெட்டவனாகவும்
ஆகிறார்கள்.

நல்லவனை
கெட்டவன்
கொன்று விடுகிறான்.

கெட்டவன்
தண்டனை
பெறுகிறான்.

ஒரு கடவுள்
கொல்லப் படுகிறார்.

ஒரு கடவுள்
தண்டனைப் பெறுகிறார்.

பின்குறிப்பு:

எந்தக் கடவுளும்
நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே...

பின்
நல்லவன் ஆவதும்
கெட்டவன் ஆவதும்
அவர்கள் வளரும்
சூழ்நிலையால்தான்..!”

-   K. அற்புதராஜு.

Friday, 5 February 2016

அங்கு வந்ததும் அதே நிலா...


“அம்மாவின் அன்பு
அப்பாவின் பாசம்
நண்பர்களின் நேசம்
தாத்தா, பாட்டியின்
அக்கறை
பக்கத்துக்கு வீட்டு
பார்வதியின் பார்வை
என எல்லாவற்றையும்
இழந்து விட்டு
வெளிநாட்டுக்கு
முதல் முதலாக
பொருள் தேடி
வந்தவனுக்கு...

சற்றே ஆறுதலாக
இரவு நேரத்தில்
தனது கிராமத்தை
நினைவுப்படுத்தும்
அதே நிலவு..!”

-    K. அற்புதராஜு.