எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 21 April 2022

படித்ததில் பிடித்தவை (“உணவு மேஜை” – ஞானக்கூத்தன் கவிதை)

 


*உணவு மேஜை*

 

ஓவியத்தில் தெரியும் சுடரைப் பார்த்துத்

தியானத்தில் உட்கார்ந்திருந்தார் சு.ரா

மௌனி சுசீலா உள்ளே நுழைந்தார்

சு.ரா.மனைவியைக் கூப்பிட்டு

இருவருக்கும் தோசை வார்க்கச் சொன்னார்

திருமதி சு.ரா. வியந்தார்

மௌனி ஒருவர்தான் இருந்தார்

இவரோ இருவர்க்கும் என்கிறார்

சு.ரா.வீட்டு சப்போட்டா மரத்தைப்

பார்த்துக் கொண்டே

மௌனி வெளியே போனார்

அவர் போன கையோடு

நகுலன் சுசீலாவோடு உள்ளே நுழைந்தார்

அப்போதும் தியானத்தில் இருந்தார் சு.ரா.

ஆனால் சு.ரா. மனைவியைக் கூப்பிட்டார்

இருவர்க்கும் தோசை வார்க்கச் சொன்னார்

திருமதி சு.ரா. இப்போதும் வியந்தார்

நகுலன் ஒருவர்தான் இருந்தார்

இவரோ இருவர்க்கும் என்கிறார்

தன் வீட்டில் மரத்தில் போல

சு.ரா. வீட்டு சப்போட்டா மரத்தில்

வாழும் பாம்பு இருக்குமோ என்று பார்த்தார்

பின்பு நகுலன் வெளியே போனார்

சு.ரா. எழுந்தார்

உணவு மேஜையைப் பார்த்தார்

அங்கே ஒருவரும் இல்லை..!

 

*ஞானக்கூத்தன்*



2 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *ஞானக்கூத்தன்*

    ஞானக்கூத்தன் (Gnanakoothan)
    (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016)
    ஒரு இந்திய தமிழ்க் கவிஞர்
    ஆவார்.
    இவரது இயற்பெயர்
    அரங்கநாதன்.
    இவர் பிறந்த ஊர் நாகை
    மாவட்டத்தில் மயிலாடுதுறை
    அருகே உள்ள திருஇந்தளூர்
    ஆகும்.
    “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய
    தாக்கத்தால் தனது
    புனைப்பெயராக ஞானக்கூத்தன்
    என்ற பெயரை ஏற்றார்.
    இவர் நவீன தமிழ்
    இலக்கியத்தின் கவிஞராக
    போற்றப்படுகிறார். இவரின்
    கவிதைகள், "கல்கி",
    "காலச்சுவடு" மற்றும்
    "உயிர்மெய்" போன்ற இதழ்களில்
    வெளிவந்துள்ளன.

    இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி,
    ந. கிருஷ்ணமூர்த்தி
    ஆகியோரோடு இணைந்து
    ஞானக்கூத்தன் துவங்கிய இதழ்
    'கசடதபற'. 'கவனம்' என்ற
    சிற்றிதழைத் தொடங்கினார்.
    'ழ' இதழின் ஆசிரியர்களில்
    ஆத்மநாம், மற்றும்
    ராஜகோபாலனுடன் இவரும் ஒரு
    ஆசிரியராக இருந்தார். இவர்
    'மையம்', 'விருட்சம்' (தற்போது
    நவீன விருட்சம்), மற்றும்
    'கணையாழி' பத்திரிகைகளில்
    பங்களித்திருக்கிறார். க. நா.
    சுப்பிரமணியத்தின் 'இலக்கிய
    வட்டம்', சி. மணியின் 'நடை'
    போன்ற சிற்றிதழ்களில் இவரது
    கவிதைகள் வெளியாகியுள்ளது.
    இவரது கவிதைகள் பெரும்பாலும்
    சமூகத்தை சித்தரிப்பதாக
    உள்ளது.

    தொழில்:
    இவர் 1968இல் இருந்து
    கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.
    இவர் 'பிரச்சினை' என்கிற
    கவிதையின் மூலம்
    அறிமுகமானார். 1998இல் இவரது
    கவிதைகள் "ஞானக்கூத்தன்
    கவிதைகள்" என்கிற பெயரில்
    வெளியிடப்பட்டது.

    திரைப்பட பங்களிப்பு:
    மருதநாயகம் (திரைப்படம்)
    திரைக்கதையை, புவியரசு,
    சுஜாதா(எழுத்தாளர்)
    ஆகியோருடன் இணைந்து
    எழுதியுள்ளார்.

    இயற்றிய நூல்கள்:
    #கவிதை நூல்கள்#

    1. அன்று வேறு கிழமை
    2. சூரியனுக்குப் பின்பக்கம்
    3. கடற்கரையில் சில மரங்கள்
    4. மீண்டும் அவர்கள்
    5. பென்சில் படங்கள்
    6. ஞானக்கூத்தன் கவிதைகள்
    7. என் உளம் நிற்றி நீ
    8. இம்பர் உலகம்

    கட்டுரை நூல்கள்:
    1. கவிதைக்காக
    2. கவிதைகளுடன் ஒரு சம்வாதம்

    பிற நூல்கள்:
    ஞானக்கூத்தன் நேர்காணல்கள்

    பிற படைப்புகள்:
    1. கனவு பல காட்டல்
    2. நம்மை அது தப்பாதோ?
    3. சொன்னதை கேட்ட ஜன்னல்
    கதவு
    5. அலைகள் இழுத்த பூமாலை

    விருதுகள்:
    2010இல் கவிதைக்காக சாரல்
    விருதினைப் பெற்றார்.
    விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
    வழங்கும், இலக்கிய
    பங்களிப்பிற்கான விஷ்ணுபுரம்
    விருதினை (2014)இல் பெற்றார்.

    மறைவு:
    கவிஞர் ஞானக்கூத்தன் 2016
    சூலை 27 புதன்கிழமை தனது
    77வது அகவையில்
    சென்னையில் காலமானார்.

    ReplyDelete
  2. இக் கவிதையில் நடந்த
    நிகழ்ச்சி போல் ஒரு
    சம்பவத்தைக் கற்பனை
    செய்து சொல்கிறார்.
    இதுதான் இக் கவிதையின்
    சிறப்பு.
    இதில் உள்ள எந்தக்
    கதாபாத்திரங்களும்
    இப்போது இல்லை.
    இதை எழுதிய
    ஞானக்கூத்தனும் இல்லை.
    ஆனால் அவர் எழுதிய
    கவிதை மட்டும் இருக்கிறது.

    இப்போது உள்ள வாசகனுக்கு
    இது ஒரு கற்பனை சம்பவம்
    என்று தெரியும்.
    எதிர் காலத்தில்
    இக் கவிதையை வாசிக்கும்
    வாசகனுக்கு இது நிஜமான
    சம்பவம் என்று நம்பக்கூடிய
    சாத்தியம் இருக்கிறது.

    *அழகியசிங்கர்*
    (நவீன விருட்சம்)

    ReplyDelete