எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 22 April 2017

“தவறவிடக் கூடாத சிறார் புத்தகங்கள்”

(தொகுப்பு: ஆதி)

ஏப்ரல் 23 - உலகப் புத்தக நாள்
 உலகப் புத்தக நாளையொட்டித் தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய 20 புத்தகங்களைப் பார்ப்போம்.

10 நேரடி தமிழ்ப் புத்தகங்கள்

 "ஆடும் மயில் மற்றும் மலரும் உள்ளம்", 
அழ.வள்ளியப்பா
என்.சி.பி.எச். வெளியீடு.
 புகழ்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல் தொகுதிகள் இவை. குழந்தைகளே வாசித்து, பாடி மகிழக்கூடிய பல்வேறு பாடல்களைக் கொண்ட தொகுப்புகள்.



"தரங்கம்பாடி தங்கப் புதையல்"
பெ. தூரன்
வானதி வெளியீடு.
பண்டைய துறைமுக ஊரான தரங்கம்பாடியில் இருக்கும் புதையலைச் சிறுவர்களே தேடிச் செல்லும் சாகசக் கதை.

"சந்திரகிரிக் கோட்டை"
ஆர்.வி.
கண்ணன்இதழின் ஆசிரியர் ஆர்.வி. பல்வேறு வகைக் கதைகளை எழுதுவதற்காக அறியப்பட்டவர். அவர் எழுதிய சாகசம் நிறைந்த கதை இது.

"கானகக் கன்னி", 
கல்வி கோபாலகிருஷ்ணன்
சாகித்ய அகாடமி வெளியீடு.
 குழந்தைகளுக்கான அறிவியல் நூல்களை எழுதுவதற்காகப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், தாவரங்களைப் பற்றி கதை போல அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் இந்த நூல் மத்திய அரசின் பரிசைப் பெற்றது.

"சிற்பியின் மகள்", 
பூவண்ணன்
வானதி வெளியீடு.
 குழந்தைகளுக்கான வரலாற்று கதைகளை எழுதுவதற்குப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், வரலாற்று பின்னணியில் சிற்பி ஒருவரைப் பற்றி எழுதிய கதை.
  


"தங்க மயில் தேவதை", 
முல்லை தங்கராசன்
பூங்கொடி வெளியீடு.
 ஒரு விறகு வெட்டிக்குத் தங்க முட்டையிடும் மயில் கிடைக்கிறது. அது திடீரெனத் தங்க முட்டையிடுவதை நிறுத்தி விடுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் மாயாஜாலங்களும் மர்மமும் கூடிய கதை.
  
"மர்ம மாளிகையில் பலே பாலு"
வாண்டுமாமா
வானதி வெளியீடு.
 வாண்டுமாமாவின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான பலே பாலு, சமத்து சாரு, அண்ணாசாமி போன்றவர்களின் ஜாலியான சேட்டைகள் நிறைந்த படக்கதைகள் கொண்ட நூல். படக்கதைகளை வரைந்தவர் ஓவியர் செல்லம்.  


"கொடி காட்ட வந்தவன்"
ரேவதி
தமிழ்நாடு காந்தி நினைவு நிதி.
 1934-ம் ஆண்டு குற்றாலத்தில் குளிக்க வரும் மகாத்மா காந்தி, அங்குத் தாழ்த்தப் பட்டவர்கள் குளிக்கத் தடை இருப்பதை அறிந்து திரும்பிச் சென்றது ஓர் உண்மைச் சம்பவம். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான கதை.
  
"ஆயிஷா"
இரா.நடராசன்
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 அறிவியல் மனப் பான்மை தொடர்பாக உத்வேகம் ஊட்டும் ஆயிஷா என்று பள்ளிச் சிறுமியை அடிப்படையாகக் கொண்ட புகழ்பெற்ற கதை.
  
"இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்)",    
ச. தமிழ்ச்செல்வன்
அறிவியல் வெளியீடு.
 குழந்தைகளுக்கு அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்து புதிய பார்வையுடன், எளிய முறையில் புரிதலை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட எட்டு கட்டுரைகளைக் கொண்ட நூல்.
  
10 மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்

 "அப்பா சிறுவனாக இருந்தபோது", 
அலெக்சாந்தர் ரஸ்கின் (நா. முகமது செரீபு)
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 ஒவ்வொருவரும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது செய்த சேட்டைகள், அட்டகாசங்களைச் சிரிக்கச் சிரிக்கத் திரும்பப் படிப்பதற்கு வாய்ப்பளிக்கும் நூல்.
  
"குட்டி இளவரசன்", 
அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம் - ச. மதனகல்யாணி
க்ரியா வெளியீடு.
 உலகப் புகழ்பெற்ற, கோடிக்கணக்கானோரால் வாசிக்கப்பட்ட இந்த நூல் குழந்தைகளுக்கான நூலாகப் போற்றப்படுகிறது. குழந்தைகளின் உலகுக்கே உரிய அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிரம்பிய நூல்.
  
"நீச்சல் பயிற்சி", 
ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள் (தமிழில்: சு.ந. சொக்கலிங்கம்)
என்.சி.பி.எச். வெளியீடு.
 பல்வேறு ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய குழந்தைகளுக்கான இந்தக் கதைகள் இன்றைக்கும் சிறிதளவுகூடச் சுவாரசியம் குன்றாமல் உள்ளன.



"ஆலிஸின் அற்புத உலகம்"
லூயி கரோல் (எஸ். ராமகிருஷ்ணன்)
வம்சி வெளியீடு.
 முயலின் வளைக்குள் சென்று ஒரு திரவத்தைக் குடித்துச் சிறிய உருவைப் பெறும் ஆலிஸ், பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த உலகுக்குள் உலவுகிறாள். மாயாஜாலக் கதைகளில் உச்சம் தொட்ட புத்தகம் இது.
  
"வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்", 
எஸ்.சிவதாஸ் (ப. ஜெயகிருஷ்ணன்)
அறிவியல் வெளியீடு.
 உயிரினங்களைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை பற்றியும் நாம் அறிந்ததும் புரிந்துகொண்டதும் குறைவு. இந்தப் புத்தகத்துக்குள் புகுந்து வெளிவரும்போது, எல்லா உயிரினங்களையும் நாம் நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்.
  


"சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்"
ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் (தமிழில் குமரேசன்)
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 ஸாய் விட்டேகர், கீதா ஹரிஹரன், ஷாமா ஃபதேஅலி, போலி சென் குப்தா போன்ற புகழ்பெற்ற ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளின் தொகுப்பு.
  
"கானகத்துக் கீதங்கள்", 
ஜித் ராய் (கு.ராஜாராம்)
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.
 காடுகள், உயிரினங்களைப் பற்றி மிக எளிமையாகவும், அறிவியல்பூர்வமாகவும் விளக்கி இயற்கையின் உன்னதத்தைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் நூல்.
  
"பெனி எனும் சிறுவன்", 
கிகோ புளூஷி, (யூமா வாசுகி)
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 புறஉலகைப் பற்றி பெரிதாக அறியாத நகரத்துச் சிறுவனாக இருக்கும் பெனி, தன் மாமாவின் கிராமத்துக்குச் சென்று திரும்பும்போது, முற்றிலும் மாறுபட்ட ஒருவனாக இருக்கிறான். குழந்தைகளின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் நாவல்.
  
"புத்தகப் பரிசுப் பெட்டி", 
15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், தமிழில்: உதயசங்கர்
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 காலம் காலமாக நம்மிடையே புழங்கி வரும் கதைகளும் நம்மைச் சுற்றியுள்ள காக்கா, அணில், பூனை, நாய், குரங்கு, யானை போன்றவற்றைப் பற்றியும் கருத்தைக் கவரும் ஓவியங்களைக் கொண்ட 15 புத்தகங்களின் தொகுப்பு.
  
"கனவினைப் பின்தொடர்ந்து", 
த.வெ.பத்மா (ஜெ. ஷாஜகான்)
எதிர் வெளியீடு.
நம் மறந்துவிட்ட, அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு வரலாற்று செய்திகளைக் கதைபோலச் சுவாரசியமாகத் தரும் நூல்.

(நன்றி: தி இந்து)
*** *** *** *** ***

Sunday 16 April 2017

படித்ததில் பிடித்தவை (“பறவையின் நிழல்” - பிருந்தா சாரதி கவிதை)


பறவையின் நிழல்

வானில் பறந்தாலும்

பறவையில் நிழல் மண்ணில்தான்

நிழலைப் பின் தொடர்கிறேன் நான்

என் தோளில் வந்து அமரும்

என்ற நம்பிக்கையோடு..!’




















-          பிருந்தா சாரதி.

Sunday 9 April 2017

படித்ததில் பிடித்தவை (“பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான்” - சுஜாதா கட்டுரை)


பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான்.
 "திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.


நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.

அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.

காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.

'சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!'

'திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்' என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."
-       சுஜாதா (தினமணி, ரம்ஜான் மலர் - 2003)

*** *** *** ***