எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 28 December 2017

படித்ததில் பிடித்தவை (“மற்றும் சில ஆடுகள்” - தேவதச்சன் கவிதை)


மற்றும் சில ஆடுகள்

"காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை.
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன.
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

- தேவதச்சன்.


(வண்ணத்துப் பூச்சிகள் இயற்கையின் மிகப் பெரிய வரங்கள் அவைகளால் காடுகள் மரங்கள் உருவாகும் ஆதாரமான மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. இயற்கையுடன் ஒன்றிய ஒருவனாக இருக்கும் இடையன் ஆடுகளை மட்டும் மேய்க்கும் காட்சியாக அவனைக் குறுக்க முடியாது. அவன் அந்தச் சூழலையே மேய்ப்பவனாகிறான். 
- சத்யானந்தன்)

Sunday 24 December 2017

படித்ததில் பிடித்தவை (“கடைசி இலை” - வீரன்குட்டி கவிதை)


கடைசி இலை

மரத்தில்
எஞ்சியிருக்கும்
கடைசி இலைக்கு
பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?
வாய்க்கும்.

உச்சிவெயிலில்
தரையில் ஒரு சிற்றெறும்பு
நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.
காற்றில் ஆடியபடி
தொடர்ச்சியாக
எறும்பின் பாதையில்
நிழலிட
அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.

ஆட்டத்தின் உச்சத்தில்
இலை
மரத்தை விட்டு அகலலாம்.
அப்போதும்,
ர் குடையாய்
எறும்பின் மேலேயே
விழ வாய்த்தால்,
தாய் வந்து
குட்டியை ஒளித்ததற்காக
கண் சிவக்க கோபிக்கும் வரை
அந்த இருப்பு தொடருமானால்,
அதுவே
பெருமகிழ்ச்சி..!”

- வீரன்குட்டி (மலையாளம்)

  தமிழில் : சித்தார்த்.

Saturday 25 November 2017

படித்ததில் பிடித்தவை (“பரிசு” - தேவதச்சன் கவிதை)


பரிசு
என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை.
பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான்.
பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்.
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்..!”
 - தேவதச்சன்.

(ஒரு பரிசுக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் வாங்குபவன் கொடுப்பவன் இருபக்கமும். ஒரு சொட்டில் ஆயிரம் சொட்டுக்கள் என்பது கவித்துவம் ததும்பும் பதிவு)

Sunday 12 November 2017

படித்ததில் பிடித்தவை (“உறவுகள்...” - கலாப்ரியா கவிதை)


உறவுகள்...
அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்.
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸுக்காய்
அம்மாவும்
அப்பாவும்..!

   -    கலாப்ரியா.

Sunday 10 September 2017

சட்டென்று மாறுது வானிலை..!


"கிராமத்து வீட்டில்
மதிய உணவு சாப்பிடுகையில்
பறிமாறும் அம்மாவின் கைப்பட்டு
உறவினர் சாப்பிடும் 
வாழையிலை அருகே வைத்திருந்த
தண்ணீர் தம்ளர்
சாய்ந்து வழிந்தோடுகையில்
'என்ன பார்த்து பறிமாறக் கூடாதா..?'
என்ற அப்பாவின் சூடான கேள்வி
உறவினர்கள் முன்னே
அம்மாவை விசனப்பட வைத்ததை...

வழிந்தோடும் நீருக்கு
வளைந்து நெளிந்தப் பாதை உண்டாக்கி,
பாம்பாக்கி முற்றத்தில் விழச்செய்து 
அப்பா, அம்மா மற்றும் 
உறவினர் அனைவரையும்
தனது மழலைச் செயலால்
மகிழ்ச்சியாக்கி
குளிர வைக்கிறாள்
குட்டிப் பாப்பா..!"

-      கி. அற்புதராஜு.

Monday 28 August 2017

எனது கட்டுரை: நிறம் மாறும் பூக்கள்...


நிம் மாறும் பூக்ள்...
-    கி. அற்புதராஜு.

ஜூலை மாத 4-வது சனிக்கிழமை மாலை அமைந்தகரை லஷ்மி தியேட்டர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 15 B பேருந்தில் சென்ட்ரல் செல்ல நானும், மனைவியும் ஏறினோம். மகளிர் இருக்கைகள் மட்டும் காலியாக இருக்க இருவரும் அதில் உட்கார்ந்தோம். 

அடுத்த நிறுத்தத்தில் நிறைய பெண்கள் ஏற நான் மட்டும் எழுந்து நின்றுக் கொண்டேன்.  தலையில் மல்லிகைப் பூவுடன் பேருந்தில் ஏறிய ஒரு நடு வயது பெண், சற்றே காலை வெளியே வைத்தப்படி உட்கார்ந்திருந்த பெண்ணிடம், "ஏன் காலை வெளியே நிட்டி உட்கார்ந்திருக்கிறாய்..? உன்  கால் தடுக்கி நான் கீழே விழுந்திருந்தால் எனக்கு அடிப்பட்டிருக்கும்..." என நின்றபடி சண்டை பிடித்தார். காலை உள்ளே நேராக வைத்த அந்தப் பெண் எதுவும் பேசாமல் இருக்க, எதிர்வினையின்றி சண்டைப்பேச்சு தொடரவில்லை.

அடுத்த நிறுத்தத்தில் கணவன், மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ஏறியவர்கள் உட்கார இடமின்றி எங்கள் அருகில் நின்றுக் கொண்டனர். 

ஒருவர் இறங்குவதற்கு இறுக்கையிலிருந்து  எழுந்தவுடன் தாவி சென்று உட்கார்ந்தார் சண்டை போட்ட அந்தப் பெண். பக்கத்தில் ஒரு வட இந்திய நபர் உறங்கிக் கொண்டிருந்தார். நிற்பவர்கள் பக்கமாக ஒய்யாரமாக பக்கவாட்டில் காலை நீட்டி உட்கார்ந்த அந்தப் பெண் கைப்பேசியில் பாடல் கேட்க ஹெட்செட்டை மாட்டினார். நிற்பவர்களுக்கும், நடப்பவர்களுக்கும் இடைஞ்சலாக இருந்தாலும் மெளனமாகவே பயணித்தார்கள். நானும்  பொங்கி எழுந்த கோபத்தை தலையில் தட்டி உட்கார வைத்தேன். 

அடுத்த நிறுத்தத்தில் கைக்குழந்தையுடன் அப்பா இறங்கும் போது பின்னால் சென்ற குழந்தையின் அம்மா காலை குறுக்கே வைத்து உட்கார்ந்து பாடல் கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண்ணின் காலை மிதித்து விட்டார். அவ்வளவுதான் அந்த பெண்ணுக்கு கோபம் வந்து, "அய்யோ காலை செருப்பு காலால் மிதித்து விட்டு போறா பாரு... இவளுக்கெல்லாம் கண் இருக்கா... இல்ல பொட்டையா..." என கத்த, பேருந்தே அவரைப் பார்த்தது. மிதித்து சென்றவர் சொன்ன "சாரிம்மா" வை ஏற்றுக் கொள்ளாமல் சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தார். பேருந்து கிளம்பியப் பிறகும் வசைப் பாடல் தொடர்ந்தது...

"ஏம்மா நீங்க பேருந்து ஏறியவுடன் காலை நீட்டியிருந்த பெண்ணிடம் சண்டைப் போட்டீர்கள்... நீங்க மட்டும் காலை குறுக்கே வைத்திருந்தது நியாயமா? காலை குறுக்கே வைத்தால் போறவங்களுக்கு இடைஞ்சலாதான் இருக்கும்... மிதிக்கதான் செய்வாங்க... உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?" என மீண்டும் பொங்கி விட்டேன்.

"இந்த ஆள் இப்படி உட்கார்ந்தால் நான் காலை வெளியேதான் நீட்டி உட்கார முடியும்" என பக்கத்து இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வட இந்தியரிடம் தனது தவறை தள்ளி விட்டார். சத்தம் கேட்டு விழித்த அவர் ஒன்றும் புரியாமல் முழித்தார். பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தவுடன் சற்றே இடம் விட்டு நகர்ந்து அமர்ந்தார். காலை மிதித்த பெண்ணை வசைப் பாடியவர் இப்போது அந்த வட இந்திய நபரை வசைப் பாடி எதிர்வினை அற்ற ஆட்டம் ஆடினார். 

சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடன் பேருந்திலிருந்து அந்தப் பெண் இறங்கும் போது நாங்களும் இறங்கினோம். அந்தப் பெண்ணின் தலையில் இருந்த மல்லிகைப் பூ சற்றே நிறம் மாறி வெண்மையிலிருந்து பழுப்பாகியிருந்தது மாலை வெயிலில்..!
*** *** ***

Wednesday 9 August 2017

படித்ததில் பிடித்தவை (“பூக்காடு” - ஜான் சுந்தர் கவிதை)


பூக்காடு

'யோசித்து யோசித்து
மகளுக்கொரு பேர்
வைத்தேன் ரோஜா”.

என் மனைவி
ரோஜாம்மா ஆனாள்.

ரோஜா அப்பா
என் பெயரானது.

மகனும் ஆனான்
ரோஜாண்ணா”.

ரோஜா வீடு...
ரோஜா பென்சில்...
ரோஜா ரப்பர்...'
        
-      இளைய நிலா ஜான் சுந்தர்,
    ("சொந்த ரயில்காரி" - கவிதை தொகுப்பு).

Saturday 22 July 2017

எனது கட்டுரை: "சுத்தம் என்பது நமக்கு…"


சுத்தம் என்பது நமக்கு…
-         கி. அற்புதராஜு.

மாற்றத்தை எப்போதுமே நாம் ஏற்றுக் கொள்வதில்லை. எந்த ஒரு புதிய பழக்கத்தையும் 3 வாரங்கள் அதாவது 21 நாட்கள் தொடர்ந்தால் மட்டுமே நம் மனமும் உடலும் ஒரு சேர அதை ஏற்றுக் கொள்கிறது.

தினமும் காலை எழுந்தவுடன் பற்களை துலக்குவது தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். தூங்குவதற்கு முன்னும் பற்களை துலக்குதல் மிகவும் நல்ல பழக்கம். பற்சொத்தை மற்றும் பிற நோய்கள்  பற்களுக்கும் ஈறுகளுக்கும் வராமல் தடுக்கின்றன.

வைரமுத்து தனது 'கேள்வி ஞானம்' கவிதையில் இப்படி சொல்லியிருப்பார்:

"வாய் நீராடும்
வாய்ப்புள்ள
போதெல்லாம்
சுட்டு விரல் கொண்டு
தொட்டழுத்து ஈறுகளை

பரவும் ரத்தம் பலம்

ஈறு கெட்டால்
சொல் எஞ்சும்

ஈறு கெட்டால்
பல் எஞ்சுமா ?"

இக் கவிதை பற்களை தன்னுள் வைத்திருக்கும் ஈறுகளையும் பாதுகாக்க அறிவுறுத்துகிறது.

காலை மாலை இரு வேளையும் பல் துலக்குவது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று படிப்பதோடு சரி. நடைமுறைப்படுத்த முடிவதில்லை. இரவு சாப்பிட்டு, டி.வி. பார்த்து தூக்கம் வரும் போது நேராக படுக்கைக்கு செல்ல தோன்றுமே தவிர பல் துலக்க தோன்றாது.

உறவு பெண் பல் டாக்டராக உள்ளார். அவரிடம் நீங்கள் தினமும் இரவிலும் பல் துலக்குவீர்களா?  என்ற போது நல்ல பழக்கம்தான்... ஆனால்  எப்போதுதாவதுதான் என்று சிரித்தார். அவராலும் பழக முடியவில்லை போலும்.

இந்த பழக்கம் அலுவலக நண்பர்களிடமும் இல்லையென்பது இதைப் பற்றி பேசும் போது தெரியவந்தது.

'காலை எழுந்தவுடன் வாயில் ஊரிய எச்சில், கோழையில் கொஞ்சம் அரிசியை சேர்த்து கோழிக்கோ, காகத்துக்கோ வைத்தால் அதை சாப்பிட்டவுடன் அவை இறந்துவிடும்' என கிராமத்து பாட்டி 'கதை' சொல்லியதை சொன்னார் அலுவலக நண்பர் ஒருவர்.

அதன் பிறகு அந்த நினைவே இல்லாது நானும் மறந்துப் போனேன்.

என்னால் செய்யவே முடியாது என்ற இந்த பழக்கத்தை... சொன்னால் நம்ப மாட்டீர்கள்...
ஒரு பத்திரிக்கையில் படித்த இரண்டு வரி செய்தியால் இப்போது காலை இரவு என இருவேளையும் பல் துலக்கத் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆகியும் தொடர்கிறது...

என்னை மாற்றிய அந்த வாசகம்:

"நீங்கள் காலையில் பல் துலக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கண்டிப்பாக இரவில் பல் துலக்கவும்..!"

உங்களையும் மாற்றுமா?

*** *** ***

Tuesday 11 July 2017

படித்ததில் பிடித்தவை (“மனிதன் நல்லவனா? ” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)


மனிதன் நல்லவனா?

எனது கிராமத்தில் மாடு மேய்க்கும் ஒரு வயதானவர் சிறுவர்களுக்கு நிறையக் கதைகள் சொல்வார். ஒரு முறை அவரிடம் அற்புதமான கதை ஒன்றைக் கேட்டேன். இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.

முன்னொரு காலத்தில் காட்டுக்குள் ஒரு மனிதன் புலியிடம் மாட்டிக்கொண்டான். புலி அவனை கொல்ல முயன்றபோது, அந்த மனிதன் ‘‘நான் நல்லவன், என்னை கொன்றுவிடாதே!’’ எனக் கெஞ்சினான்.

அதைக் கேட்ட புலி ‘‘அப்படியா! நீ நல்லவன் என்று யாராவது சொன்னால், உன்னை விட்டு விடுகிறேன்’’ என்றது.

அவன் ஒரு கிளிடம் போய் ‘‘கிளியேகிளியே! நான் நல்லவன் என்பதை சொல்!’’ என்றான்.

அதற்குக் கிளி ‘‘மனுசங்க ரொம்ப மோசமானவங்க. சுதந்திரமாத் திரியுற என்னைப் பிடிச்சு என் றெக்கையை வெட்டிக் கூண்டுல அடைக்கிறது நீங்கதானே. பின்னே எப்படி நீ நல்லவனா இருப்பே?’’ என்று கேட்டது.

உடனே புலி அந்த மனிதனைப் பார்த்து ‘‘நான் உன்னைக் கொல்லப் போகிறேன்!என சத்தமிட்டது.

அவன், ‘எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு’’ எனக் கேட்டு அனுமதிப் பெற்றான். காற்றிடம் சென்று ‘‘காற்றே... காற்றே! நான் நல்லவன் என நீயாவது சொல்லக் கூடாதா?’’ எனக் கேட்டான்.

அதற்குக் காற்று ‘‘மனுசங்க உயிர் வாழுறதுக்கு நான்தான் காரணம். என்னையே நாசமாக்கிட்டீங்க. அதோட, ஒரு மரமில்லாம வெட்டிட்டே வர்றீங்க. பிறகு, எப்படி நீ நல்லவனா இருக்க முடியும்?’’ என்றது.

உடனே அவன் நிலத்திடம் சென்று ‘‘பூமித் தாயே! நான் நல்லவன் என்று நீயாவது சொல்லேன்…’’ என்றான்.

அதற்கு நிலம் ‘‘நான் எவ்வளவுதான் விளைச்சல் கொடுத்தாலும், என்னோட அருமை மனுஷங்களுக்குப் புரியறதே இல்ல. நிலத்தை நாசமாக்கிட்டே வர்றாங்க. நீயும் அந்தக் கூட்டத்துல ஓர் ஆள்தானே, பிறகு நீ எப்படி நல்லவனாக இருப்பே?’’ எனக் கேட்டது.

உடனே புலி அவனைக் கொல்லப் போவதாக உறுமியது.

கடைசிமுறையாக அவன் ஆற்றிடம் சென்று, ‘‘நான் நல்லவன் என நீயாவது சொல்லக் கூடாதா?’’ எனக் கெஞ்சி கேட்டுக்கொண்டான்.

அதற்கு ஆறு ‘‘காலம் காலமாக மனுசங்க குடிப்பதற்கும், குளிப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் உதவி செய்திருக்கிறேன். ஆனால், நீங்கள் என்னைப் பாழடித்துவிட்டீர்கள். தண்ணீரோட மதிப்பை உணரவே இல்லை நீங்கள். நீ மட்டும் எப்படி நல்லவனாக இருப்பாய்?’’ எனக் கேட்டது.

இதற்கு மேலும் பொறுமை இல்லாத புலி அவன் மீது கொல்லப் பாய்ந்தபோது, மரக் கிளையில் இருந்த ஒரு காகம் புலியைப் பார்த்துச் சொன்னது: ‘‘பாவம், நல்ல மனுஷன்!’’

உடனே புலி, ‘‘இவன் நல்லவன் என்று உனக்குத் தெரியுமா?’’ என காகத்தைப் பார்த்து கேட்டது.

‘‘என்னைப் போன்ற காகங்களுக்கு மனுஷங்கதான் சாப்பாடு போடுறாங்க. எத்தனையோ வீட்டுல அவங்கல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடியே எங்களுக்கு சோறு படைக்கிறாங்க. மனுஷங்க எல்லாரும் நல்லவங்க. ஆகவே, இவனும் நல்லவன்தான்!’’ என்றது காகம்.

உடனே புலி அவனை உயிரோடு விட்டுவிட்டது. அந்த நன்றிக் கடனுக்காகவே இன்றைக்கும் காகங்களுக்கு சோறு போடும் பழக்கம் இருந்து வருகிறது எனக் கதையை முடித்தார் கிழவர்.

எளிமையான கதை. ஆனால், நம் மண்ணையும், தண்ணீரையும், காற்றையும் நாசமாக்கி வருவதைக் கண்டிப்பதற்காக சொல்லப்பட்ட கதை. கிராமத்து மனிதர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து கதையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இக்கதையில் உயிருக்கு மன்றாடும் மனிதன் இயற்கையிடம், ‘நான் நல்லவனா?’ எனக் கேட்கும்போது இயற்கை இல்லை!என்றே பதில் தருகிறது. அது நிதர்சனமான உண்மை.

அதே நேரம் காகம் மனிதனை உயர்வாக சொல்கிறது. இன்றைக்கும் காகங்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்து வருகிறது. உயிரை காப்பாற்றிய நன்றிக்காகத்தான் மனிதன் காகங்களுக்கு உணவிடுகிறான் என்பது புதிய பார்வை!

அடைத்து சாத்தப்பட்ட ஜன்னல்கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வளரும் பிள்ளைகள், பறவைகள் எதையும் காண்பதே இல்லை. வானமே அவர்களுக்குத் தெரியாது. திறந்தவெளியில் படுத்தபடி ஆகாசத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை எண்ணி விளையாடும் விளையாட்டுத் தெரியாது. உதிர்ந்து கிடக்கும் நாவல்பழத்தின் ருசி தெரியாது. புளியம் பிஞ்சின் சுவை தெரியாது. பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் பழங்களைப் போல பிள்ளைகள் பத்திரமாக வளருகிறார்கள். அது, ஆரோக்கியமானது இல்லை.

பள்ளிப் பாடங்களுடன் அவர்களுக்கு இயற்கையும் நேரடியாக அறிமுகம் ஆக வேண்டும். பூக்களின் பெயர் தெரியாமல், விதைகளைக் காணாமல், அருவியையும் நீரோடையையும் மலைகளையும் அறியாமல் பிள்ளைகள் வளருவது சரியானது இல்லை.

கரிசலில் பிறந்த குழந்தைகளுக்கு மண்ணை கரைத்து நாக்கில் வைத்துவிடுவார்கள், முதலில் மண் ருசி அறிமுகமாகட்டும் என்று. மண், கையால் தொடக்கூடாத ஒரு பொருள் எனத் தொலைக்காட்சியில் இன்று கற்றுக் கொடுக்கிறார்கள். நாம் தண்ணீரை, நிலத்தை, காற்றை நேசிப்பதற்கு பழக வேண்டும். அதற்கு இதுபோன்ற கதைகள் உதவக்கூடும்.
 
தமிழ் இலக்கியத்தின் பீஷ்மர் என அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கிராமப்புறங்களில் சொல்லப்பட்டு வந்த கதைகளைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக்கிறார். முல்லை முத்தையா, அ.லெ.நடராஜன், நெ.சி.தெய்வசிகாமணி போன்றவர்களும் வாய்மொழிக் கதைகளைச் சேகரித்து தொகுத்திருக்கிறார்கள்.

தற்போது கழனியூரன், பாரததேவி, எஸ்.எஸ்.போத்தையா. எஸ்.ஏ.பெருமாள், கம்பீரன் என பலரும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி பதிப்பித்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இதாலோ கால்வினோ, ஹெர்மன்ஹெஸ்ஸே மற்றும் கவிஞர்களான யேட்ஸ், தாகூர் போன்றவர்களும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக்கிறார்கள். தங்களின் கதை மரபைக் காப்பாற்ற வேண்டியது இலக்கியவாதிகளின் கடமை தானே!

மக்கள் மத்தியில் வழங்கிவரும் வாய்மொழிக் கதைகளைத் தேடி சேகரிப்பது அரும்பணி. கதைகள் மக்களின் ஆதிநினைவுகளின் வடிவம். கேட்டவுடன் யாரும் கதை சொல்லிவிட மாட்டார்கள். அதற்கு கிராமத்து மக்களிடம் நட்பாக பழக வேண்டும். கூச்சம் போன பிறகுதான் கதை சொல்ல ஆரம்பிப்பார்கள்.

ஆண்களை விடவும் பெண்களே அதிகம் கதை சொல்லக்கூடியவர்கள். அதிசயமான இந்தக் கதைகளை அவர்கள் யாரிடம் கேட்டார்கள்? எப்படி நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கும்.

பல்கலைக்கழகங்களில் உள்ள நாட்டுப்புறத் துறை மாணவர்களும் தமிழ் இலக்கியம் படிக்கிற ஆய்வு மாணவர்களும்கூட நாட்டுப்புறக் கதைகள், பாடல்களைத் தேடிச் சென்று, சேகரம் செய்து காப்பாற்றி வருகிறார்கள். நம் கையில் கிடைத்திருக்கும் கதைகள் குறைவு. காற்றில் அழிந்துபோனதுதான் அதிகம்.

கிராமப்புறக் கதைகளைப் போல நகரம்சார் கதைகளையும் தேடித் தேடி சேகரிக்க வேண்டும் என கி.ரா. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள மீனவ சமுதாயத் திடம் நிறைய வாய்மொழிக் கதைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வுசெய்து சேகரிக்க வேண்டும்.

பள்ளி ஆண்டு விழாவுக்கு என்றே எழுதப்பட்டதோ எனக் கருதப்படும் சின்ட்ரெல்லா கதை தொடங்கி ஸ்நோ வொயிட், ப்யூட்டி அண்ட் ஃபீஸ்ட், ஹான்சல் அண்ட் கிரேட்டல், ராபுன்ஸேல் போன்ற பல முக்கியமான தேவதை கதைகளைத் தேடி சேகரித்துக் கொடுத்தவர்கள் கிரிம் சகோதரர்கள். ஒருவர் ஜேக்கப் கார்ல் கிரிம். மற்றவர் வில்ஹெம் கார்ல் கிரிம்.

கிரிம் சகோதரர்கள் ஜெர்மானிய நாட்டுப்புறக் கதைகளையும் தொன்மங்களையும் தொகுத்து கிரிம்மின் தேவதைக் கதைகள்என்ற பெயரில் வெளியிட்டார்கள். அவை பெரும் புகழ் பெற்றன. இக்கதைகள் சிறார்களுக்கான கார்ட்டூன் படங்களாகவும் நாடகமாகவும் படக் கதைகளாகவும் வெளியாகி, இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

உங்கள் பகுதிகளில் சொல்லப்பட்டு வரும் கதைகளைத் தேடி, சேகரித்து காப்பாற்றுங்கள். அது விதைநெல்லை காப்பதைப் போன்று மிகவும் அவசியமானது.

- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 05.07.2016)

*** *** ***