எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 30 June 2021

படித்ததில் பிடித்தவை (“கைவிடப்பட்ட குழந்தை” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*கைவிடப்பட்ட குழந்தை*

 

கைவிடப்பட்ட குழந்தை

ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது

ஒரு கதையில் இடம் தேடுகிறது

வாகனங்களை பொம்மைகளைப்போல ரசிக்கிறது

அதன் சத்தங்களை தன் வாயால் எழுப்ப முயற்சிக்கிறது

விரட்டுபவரின் நிழலை மிதித்துச் செல்கிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

ஒரு பட்டத்தை நோக்கி ஓடுகிறது

கொஞ்சம் அழுகையை நிறுத்துகிறது

சுண்டல் விற்பவனிடம் கை நீட்டுகிறது

அம்மாவின் இடுப்பில் ஆடும் குழந்தையைத் தொடுகிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

மணல் அள்ளிப் போடுகிறது

தன் பெயரைத் தேடுகிறது

பொம்மையைப்போல் கிடக்கிறது

கால் பரவும் சிறுநீரைத் துடைத்துவிடுகிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

தன் மழலை வழியே மேலேறுகிறது

கைகளால் வானவில்லை அசைக்கிறது

விழும் நிறங்களை அள்ளுகிறது

கடலில் தூக்கி எறிகிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

காணமல் போனவரின் போஸ்டர் அருகில் நிற்கிறது

அதிலிருக்கும் முகத்தைத் தடவுகிறது

மேல் ஊரும் எறும்பை மெல்ல எடுத்து விடுகிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

தாய்களைப் பார்க்கிறது

தந்தைகளைப் பார்க்கிறது

மனிதர்களைப் பார்க்கிறது

யாரும் தன்னைப் பார்க்கவில்லை எனினும்

ஆழ்ந்து உற்று அருகில்போய்

அதிகமாகப் பார்க்கிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

தான் கைவிடப்பட்டது தெரியாமல்

தேடிச்செல்கிறது இன்னொரு குழந்தையை

தன் கைபிடித்து அழைத்துச் செல்ல..!

 

*ராஜா சந்திரசேகர்*

(ஆனந்த விகடன் இதழில் (25.05.2011)

வெளியான கவிதை)



 

Tuesday 29 June 2021

படித்ததில் பிடித்தவை (“குட்டி தேவதைகள்” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*குட்டி தேவதைகள்*

 

மருத்துவர் அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்.

 

என் எண் வரவில்லை

அதனால் இன்னும் கூப்பிடவில்லை.

 

வலியை ஆறுதல்படுத்தியபடி

நினைவால் தடவிக்கொடுத்தபடி

அமர்ந்திருக்கிறேன்.

 

மருந்து நெடி கூடிய அந்த ஹாலில்

ஆடி ஓடிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி.

 

அம்மாவிடம் ஓடுவதும்

அவள் கையிலிருக்கும் குழந்தையை

முத்தமிடுவதுமாய்

 

அந்த பட்டாம் பூச்சியின் அசைவுகள்

வலியை மறக்கச் செய்கின்றன.

 

பரவும் மணம் போல

அவள் வாசனையை

எல்லாக் கண்களும் முகர்கின்றன.

 

அவள் பெயர் கேட்கத் தோன்றுகிறது.

 

குட்டி தேவதைகளுக்குப் பெயர் எதற்கு

மனம் ஒரு பதிலையும் தருகிறது.

 

ஒருவர் அவளைப் பிடித்து பெயர் கேட்கிறார்.

 

சம்பிரதாயக் கேள்விகளை நிராகரிப்பவள் போல

சொல்ல முடியாது எனச் சிரித்தபடியே ஓடுகிறாள்.

 

அந்த சிரிப்பில் சிதறி விழுகின்றன

சில பெயர்களும் கொஞ்சம் இசையும்.

 

என் கையிருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஓடி வருகிறாள்.

 

இதில் பொம்மைகள் இல்லையே என்கிறாள்.

 

உள்ளே பொம்மைக் கதைகள் இருக்கின்றன என்கிறேன்.

 

ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறாள்.

 

என் பொய்கள் ஏதோ ஒரு கதையை

அழைத்து வரத் தொடங்கினேன்.

 

ஒரு தேசத்துல ஒரு குட்டி இளவரசி இருந்தா

அவ பேருபேரும்….சின்ட்ரலா

 

அம்மா இந்த மாமா என் பேரச் சொல்றாரு

எனச் சொல்லியபடியே ஓடினாள்.

 

உண்மையான என் பொய்க்கு

நன்றி சொல்லியபடியே

கண் துளியைத் துடைக்க

என் எண்ணை சொல்லிக் கூப்பிட்டார்கள்.

 

முழுதுமாய் நீங்கிய வலியுடன்

நுழைந்தேன் மருத்துவர் அறைக்குள்..!

 

*ராஜா சந்திரசேகர்*

{தினகரன் தீபாவளி (2011) மலரில் வெளியானது.}



 

Monday 28 June 2021

படித்ததில் பிடித்தவை (“பெருமழை” – ஷான் கவிதை)

 


*பெருமழை*

 

கைப்பேசியை பத்திரப்படுத்தவா

கவிதையொன்றை யோசிக்கவா

கைக்குட்டையைத் தலையிருத்தவா

குனிந்து ஒளியவா நிமிர்ந்து நனையவா

கடையடைக்கவா குடை விரிக்கவா

ஒரு கையறு நிலையிலேயே

எப்போதும் எதிர்கொள்கிறோம்

திடீரென்று ஒரு பெருமழையை..!

 

*ஷான்*

Sunday 27 June 2021

படித்ததில் பிடித்தவை (“அப்பாவும் குழந்தையும்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*அப்பாவும் குழந்தையும்*

 

இருப்பது ஒரு பழம்

மூன்று பேர்

சாப்பிட முடியுமா..?

உரித்தபடியே

அப்பா கேட்டார்.

 

இருக்கிறது ஆறு சுளை

ஆறு பேர் சாப்பிடலாம்

குழந்தை சொன்னது..!

 

*ராஜா சந்திரசேகர்*

Saturday 26 June 2021

படித்ததில் பிடித்தவை (“நண்பர்கள்” – தவசி கவிதை)

 

*நண்பர்கள்*

 

கடவுளும் சாத்தானும்

சந்தித்துக்கொண்ட ஒரு மாலை வேளை

 

கடவுள் கையில் பால் டம்ளர்

சாத்தானிடம் சாராய பாட்டில்

 

ஆரம்பித்தது சாத்தான்

என்ன சாமி...எப்படி இருக்கீங்க...

எங்கப் பாத்தாலும் உங்க பேருதான்...

திருப்பதி, திருத்தணி, பழநின்னு வசூலை

அள்ளிக்கொட்றீங்களே...

 

அட போப்பா...

அலுத்துக்கொண்டார் கடவுள்,

என்ன இருந்தாலும்

டாஸ்மாக் வருமானத்துக்கு

ஈடாகுமா நம்ப வருமானம்…

 

சாத்தான் விடுவதாயில்லை

என்ன குருவே...அப்படிச் சொல்லிட்டீங்க...

தேர், திருவிழா, தெப்பம்னு உங்களுக்குத்தானே

எல்லாக் கொண்டாட்டமும்...

 

நீதானே மெச்சிக்கணும்…எந்தப் பேப்பரை பாரு...

உன்னோட ராஜ்ஜியம்தான்...

கள்ளக்காதல், கற்பழிப்பு,

கொலை, குண்டுவெடிப்புன்னு

பூந்து விளையாடுறியே தம்பி...

 

சாத்தானுக்குக் கூச்சமாகப் போய்விட்டது

அதற்குள்

பாலை காலி செய்துவிட்டிருந்தார் கடவுள்

 

 என்ன பிரதர்...அதுக்குள்ள முடிச்சிட்டீங்க...

வேணும்னா இதைக் கொஞ்சம் டேஸ்ட்

பண்ணிப் பாக்கறீங்களா..?”

 

ஒன்னும் பண்ணாதில்ல...ஒன்னும்

பண்ணாதுன்னா கொஞ்சூண்டு ஊத்து பாப்போம்..!

 

*தவசி*