எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 25 February 2024

படித்ததில் பிடித்தவை (“விளையாட்டுக்காக..!” – கல்யாண்ஜி கவிதை)

 

*விளையாட்டுக்காக..!*

 

வண்ணத்துப்பூச்சியைப்

பிடிப்பதற்கு

வண்ணத்துப்பூச்சியின்

பின்னாலேயே அலைவது

பிடிப்பதற்காக அல்ல

பிடிப்பது போன்ற

விளையாட்டுக்காக..!

 

*கல்யாண்ஜி*



Saturday 24 February 2024

படித்ததில் பிடித்தவை (“எவ்வளவு நன்றாக இருக்கும்..!” – கல்யாண்ஜி கவிதை)

 


*எவ்வளவு நன்றாக இருக்கும்..!*

 

உங்களுக்குச் சேர வேண்டியதை               

என்னிடமும்,

எனக்குச் சேர வேண்டியதை

அவர்களிடமும்,

அவர்களுக்குரியதை

இவளிடமுமாக மாற்றி மாற்றிக் கொடுத்துக்

கொண்டே செல்கிற

இந்த வாழ்க்கையில்

அவரவர்களுக்குரியதை

அவரவர்களிடம் சேர்த்து விட முடிந்தால்

எவ்வளவு நன்றாக இருக்கும்..!

 

*கல்யாண்ஜி*



Monday 13 November 2023

படித்ததில் பிடித்தவை (“பூவரச மரம்” – கல்யாண்ஜி கவிதை)

 

*பூவரச மரம்*

 

இப்படி இரு சிறார்கள்

என் கீழ் சிரிப்பார் எனில்

நான் பூவரச மரமாகவே

இருந்திருப்பேன்..!

 

இப்படி ஒரு பூவரச மரம்

எங்களுக்கு மேல் 

இலையசைக்குமெனில்

நான் ஓட்டைப் பல் சிறுமியாகவே

இருந்திருப்பேன்..!

 


*
கல்யாண்ஜி*



Saturday 11 November 2023

*அவரோகணம்*


 அலுவலகம் செல்ல

ரயிலில் இடம் பிடித்து

சற்றே ஆசுவாசமாக

உட்காரலாமென்றால்...

 

கிடைக்கும் ஒற்றை சீட்டில்

செருப்பு காலை வைத்து

இளைப்பாறுகிறார்

எதிர் இருக்கைக்காரர்.

 

என்னைப் பார்த்தவுடன்

வேண்டா வெறுப்புடன்

காலை எடுக்கிறார்.

 

உட்கார மறுக்கிறது

மனசு..!


*கி. அற்புதராஜு*

Monday 6 November 2023

*முதல் வாசகர்*

 


ரயில் பயணத்தில்

சட்டென தோன்றிய கவிதையை

கைப்பேசியில் எழுதுகிறேன்...

 

பக்கத்து இருக்கைப் பெரியவர்

எட்டி எட்டிப் பார்த்து

படிக்க முயற்சிக்கிறார்...

 

அவர் பார்வையில் படாமல்

மறைத்துக்கொள்கிறேன்

அக்கவிதையை...

 

ஒரு கவிதையை

எழுதும் போது

அது கவிஞருக்கும்

கவிதைக்குமான

ரகசியம்.

 

கவிதை

பிரசவிக்கும் போதே படிப்பது

கவிஞரையும் கவிதையையும்

நிர்வாணமாக்குகிறது.

 

சற்றேப் பொறுத்தால்

அந்த கவிதையின்

முதல் வாசகராகலாம் அவர்..!



*
கி. அற்புதராஜு*

Wednesday 1 November 2023

*சாரி சார்...*

 


பிற மனிதர்களிடம்

தவறி இழைக்கும்

தொந்தரவுகளுக்கு

இப்போதெல்லாம்

அபூர்வமாகதான்

கேட்க முடிகிறது

'சாரி சார்...'

என்ற வார்த்தையை..!

 

தவறுகளுக்கு

ஆத்மார்த்தமாக

மன்னிப்பு கேட்கையில்

ஏற்றுக் கொள்பவரின்

சிறு மன அசைவு கூட

கேட்பவரின் மனதை

நிறைவிக்கும்.

 

இருவருக்குள்ளும்

மனிதம் துளிர்க்கும்

ஆனந்த செயலது..!



*
கி. அற்புதராஜு*

Saturday 28 October 2023

படித்ததில் பிடித்தவை (“அவள் நைட்டி அணிந்ததில்லை...” – சாம்ராஜ் கவிதை)

 


*அவள் நைட்டி அணிந்ததில்லை...*

 

ஷேம் ஷேம் பப்பி ஷேம்என்று

சின்ன வயதில் ஓடியவள்....

எட்டு வயதில்

முழங்காலுக்கு மேலான காயத்தை

அப்பாவுக்கு காட்ட மறுத்தவள்...

உடை மாற்றும் அறைக்குள்

அம்மாவைக் கூட‍ அனுமதியாதவள்...

எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடிவந்தவள்...

அருவிகளில் ஒருபொழுதும் குளிக்காதவள்...

வெளிச்சத்தில் கணவனுடன் கூட சம்மதியாதவள்...

மரித்தலுக்கு பின்

அம்மணமாய்க் கிடக்கிறாள் மார்ச்சுவரியில்..!

ஈக்களும், கண்களும் அங்கேயேமொய்க்க

இப்படியாகுமெனில்

அன்புலட்சுமி தற்கொலையே

செய்திருக்க மாட்டாள்..!

 

*சாம்ராஜ்*

"என்றுதானே சொன்னார்கள்" கவிதை நூல்.




Wednesday 25 October 2023

படித்ததில் பிடித்தவை (“சமன்” – கல்யாண்ஜி கவிதை)


*சமன்*

 

பறிக்க முடியாத

பட்டாம்பூச்சியை

மறக்க

 

பறக்கமுடியாத பூக்களை

வெடுக்கெனக் கிள்ளி

வீசின

விரல்கள்..!

 

*கல்யாண்ஜி*



Monday 16 October 2023

*குடைக்குள் மழை*


 சிறு தூரலான மழை நாளில்

மடக்கிய குடையுடன்

ரயிலின் வருகைக்காக

நடைப்பாதை கூரையின் கீழே

காத்திருக்கிறேன் நான்.

 

எதிர் திசையில்

ரயிலிலிருந்து இறங்கி

மழையில் நனைந்தபடி

கையில் பெரிய பையுடன்

சிறு சிறு அடிகளாக

நடக்கும் முதியவர்.

 

மழையிலேயே

அவ்வப்போது நின்று

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

மெதுவாக நடக்கிறார்.

 

எனது குடையை விரித்து

அந்த முதியவரிடம்

பையை வாங்கிக் கொண்டு

நடைப்பாதை முடியும் வரை

அவரின் கைப்பிடித்து

அழைத்து செல்கிறது மனசு.

 

மனசு திரும்பும் வரை

எனக்கான ரயில்

சிக்னலில் காத்திருக்கிறது..!

 

*கி. அற்புதராஜு*