எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 12 April 2022

படித்ததில் பிடித்தவை (“பொருள்வயின் பிரிவு” – விக்ரமாதித்யன் கவிதை)


 

*பொருள்வயின் பிரிவு*

 

அன்றைக்கு

அதிகாலை இருள்  பிரிந்திருக்கவில்லை

நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது

சாரல் மழைபெய்து

சுகமான குளிர் வியாபித்திருந்தது

 

அயர்ந்து

தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்

அரவம் கேட்டு விழித்த சின்னவன்

சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

 

இவள்

வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்

வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்

வாசல்வரை வந்து

வழியனுப்பி வைத்தாள் தாய்போல

 

முதல் பேருந்து

ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்

பிழைப்புக்காக

பிரிந்து வந்துகொண்டிருந்தேன்

மனசு கிடந்து அடித்துக்கொள்ள..!

 

*விக்கிரமாதித்யன்*



1 comment:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *விக்கிரமாதித்யன்*

    விக்ரமாதித்யன் (பிறப்பு:
    செப்டம்பர் 25, 1947) ஒரு
    தமிழ்நாட்டுக் கவிஞர்.
    இவரது இயற்பெயர் நம்பிராஜன்.
    திருநெல்வேலி நகரப் பகுதியில்
    கல்லத்தி முடுக்கு தெருவில்
    வளர்ந்தவர்.
    பின்னர் குற்றாலம், தென்காசி,
    சென்னை மேற்கு மாம்பலம்,
    கலைஞர் கருணாநிதி நகர்,
    அசோக் நகர் ஆகிய இடங்களிலும்
    வாழ்ந்துள்ளார்.

    தன் வாழ்நாளில் பல்வேறு
    தொழில்களைப் பார்த்துள்ள
    இவர் முதன் முதலில் கவியரசு
    நா.காமராசன் அவர்கள் நடத்திய
    இலக்கிய பத்திரிகையான
    "சோதனை"என்னும்
    பத்திரிக்கையில் பணிபுரிந்தார்
    பின்னர் விசிட்டர், அஸ்வினி,
    மயன், இதயம் பேசுகிறது, தாய்,
    தராசு, நக்கீரன் ஆகிய
    பத்திரிகைகளிலும்
    பணிபுரிந்துள்ளார்.
    இவருக்கு திருமணமாகி இரு
    மகன்கள் உள்ளனர்.

    "நான் கடவுள்" திரைப்படத்தில்
    பிச்சைகாரர் வேடத்தில்
    நடித்துள்ளார்.

    இவர் எழுதிய புகழ் பெற்ற
    வரிகள்:

    "விரும்பியது நதிக்கரை நாகரீகம்
    விதிச்சது நகர நாகரீகம்"

    கவிதைத் தொகுப்புகள்:

    ஆகாசம் நீலநிறம் (1982)
    ஊரும் காலம் (1984)
    உள்வாங்கும் உலகம் (1987)
    எழுத்து சொல் பொருள் (1988)
    திருஉத்தரகோசமங்கை (1991)
    கிரகயுத்தம் (1993)
    ஆதி (1997)
    கல் தூங்கும் நேரம் (2001)
    நூறு எண்ணுவதற்குள் (2001)
    வீடுதிரும்புதல் (2001)
    விக்ரமாதித்யன் கவிதைகள்
    (2001)
    பாதி இருட்டு பாதி வெளிச்சம்
    (2002)
    சுடலைமாடன் வரை (2003)
    தேவதைகள்-பெருந்தேவி-
    மோகினிப்பிசாசு (2004)
    சேகர் சைக்கிள் ஷாப் (2007)
    விக்ரமாதித்யன் கவிதைகள் - II

    சிறுகதைத் தொகுப்பு:

    திரிபு (1993)
    அவன்-அவள் (2003)

    கட்டுரைத் தொகுப்பு:

    கவிமூலம் (1999)
    கவிதைரசனை (2001)
    இருவேறு உலகம் (2001)
    தமிழ்கவிதை- மரபும் நவீனமும்
    (2004)
    தன்மை-முன்னிலை-படர்க்கை
    (2005)
    எனக்கும் என்
    தெய்வத்துக்குமிடையேயான
    வழக்கு (2007)
    எல்லாச் சொல்லும் (2008)
    தற்காலச் சிறந்த கவிதைகள்
    .கங்கோத்ரி
    சொல்லிடில் எல்லை இல்லை
    சாயல் எனப்படுவது யாதெனின்
    சும்மா இருக்கவிடாத காற்று
    கவிதையும் கத்தரிக்காயும்
    ஊழ்
    மஹாகவிகள் ரதோற்சவம்

    விருதுகள் :

    2008 ஆண்டிற்கான விளக்கு
    விருது
    2014 ஆம் ஆண்டிற்கான சாரல்
    விருது
    2021 ஆண்டிற்கான விஷ்ணுபுரம்
    விருது.

    ReplyDelete