எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 28 February 2022

படித்ததில் பிடித்தவை (“பாத்ரூம் குழாய் கசிந்து கொண்டிருக்கிறது” – இசை கவிதை)

 


*பாத்ரூம் குழாய் கசிந்து கொண்டிருக்கிறது*

 

கடைசியில்

வீட்டைவிட்டுத் தொலைந்துவிடுவது

என்கிற முடிவுக்கு வந்தேன்.

 

தேட வேண்டாம்

தீர்க்கமாக ஒரு கடிதம் எழுதிவைத்தேன்.

 

பிறகு

தெருமுக்கில் இருக்கும்

பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்துகொண்டு

உற்றுப் பார்த்தபடி நிற்கிறேன்..!

 

*இசை () ஆ.சத்தியமூர்த்தி*

{‘உடைந்து எழும் நறுமணம்கவிதை நூலிலிருந்து.}



Sunday 27 February 2022

படித்ததில் பிடித்தவை (“சொந்த வீட்டுக் கதை” – கவிஞர் ச. ராச் கவிதை)

 


*சொந்த வீட்டுக் கதை*

 

உங்க அப்பாருக்கிட்ட மூனு வீடு இருந்துது

அதுல ஒன்னு என் பேர்ல எழுதி வச்சிருந்தாரு

 

உங்க அத்தைய கட்டிக்கொடுக்க ஒன்னு

தொழில்ல நஷ்டம்னு ஒன்னு

பஞ்சம் பொழைக்க இந்த ஊருக்கே வந்துட முடிவெடுத்ததால

கடைசியா என் பேர்ல இருந்த வீடுன்னு

மூனுத்தயும் வித்துட்டாரு

இப்ப அந்த இடமெல்லாம்

லட்சக்கணக்குல போகுதாம்

 

பாசமா பழகிய மூனாவது வீட்டு

பத்மினியம்மா

பழகனத மறந்து

வாடகை வீட்டுக்காரி அவ என்று

தன் புருஷனிடம் காதில் முணுமுணுத்தபடி

பத்திரிகை வைக்காமல் அடுத்த வீட்டுக்கு

தாண்டிக்காலிட்ட  வாதையில்

 

தூங்கிக்கொண்டிருக்கும்

நாளாவதாக பிறந்த ஒரு வயது 

குழந்தை என்னிடம்

விசனப்பட்டுக்கொண்டிருந்த

வழக்கமான அதே சொந்த

வீட்டுக்கதைதான் என்றாலும்

இப்போது கண்ணீர் வராமல்

சொல்லப்பழகியிருந்தாள் அம்மா

என் மகளிடம்..!

 

*கவிஞர் ச. ராச்*

{வாதை துன்பம்}


Saturday 26 February 2022

படித்ததில் பிடித்தவை (“வாடகை வீடு” – ப்ரியன் கவிதை)

 


*வாடகை வீடு*

 

ஆணி அடித்த ஒரு சந்தர்ப்பத்தில்

சொல்லால் அறைந்து

அவ்வாணியிலேயே

தொங்க விட்டுச்செல்கிறாய்

என்னை..!

 

கொஞ்சம்

வேகமாக பாதம் பதித்தால்

விரிசல் காண்பதாய்

வாதம் செய்ய ஓடோடி

வருகிறாய்..!

 

உன் செல்ல பிள்ளை

பிசாசுகளின்

காட்டுக் கத்தலில்

கழிக்கப்படுகின்றன

என் அமைதி..!

 

மொட்டை மாடிக்கான

வழியைக் கூட

உன் வீட்டுக்குள்தான்

ஒளித்து வைத்திருக்கிறாய்..!

 

யோசித்துப் பார்த்தால்,

வாடகை மட்டுமல்ல

என் சுதந்திரத்தின்

பெரும் பகுதியை

அடகு வைத்துத்தான்

குடிபுகுந்திருக்கிறேன்..!

 

எலி வங்குக்கு ஒப்பான

உன் வீட்டில்..!

 

*ப்ரியன்*

{வங்கு – வளை}

Friday 25 February 2022

படித்ததில் பிடித்தவை (“தன் வரலாறு” – கல்யாண்ஜி கவிதை)

 


*தன் வரலாறு*

 

“சுள்ளி பொறுக்க வந்த முதியவர்

மழை பெய்த ஈரத்தரையில் 

குச்சியால் கீறிக்கொண்டே போகிறார்


இதைவிடச் சரியாக 

அவருடைய தன் வரலாற்றை

அவரால் எழுதமுடியாது..!

 

*கல்யாண்ஜி*

{அந்தரப்பூ கவிதை நூலிலிருந்து.}




Thursday 24 February 2022

படித்ததில் பிடித்தவை (“பறவையாய் பற” – செ.புனிதஜோதி கவிதை)

 


*பறவையாய் பற*

 

அன்பால் சாமரம்

வீசும் வேளையில்

இலையாய் தலையசைத்திரு…

 

சிறகு தர

எத்தனிக்கையில்

பறவையாய் பற...

 

காரண காரியங்களை

சற்றுநேரம்

ஒதுக்கி வை...

கவிதைப் பாடுவோம்

வானளந்து..!

 

*செ.புனிதஜோதி*

Wednesday 23 February 2022

படித்ததில் பிடித்தவை (“தொலைந்து போதல்” – மகேஷ் சிபி கவிதை)

 


*தொலைந்து போதல்*

              

அடையாளம் தொலைத்து விட்டு

அறிமுகமில்லாத ஊரில்

தொலைந்து போதல்தான்

எத்தனை சுகமாயிருக்கிறது

சுதந்திரமாகவுமிருக்கிறது..!

 

இந்த கூட்டத்தில்

யாரேனும் என்னைக் கண்டால்

நேரில் வந்து

எனக்கு என்னை

அடையாளப்படுத்திவிடாதீர்கள்..!”

 

*மகேஷ் சிபி*

Tuesday 22 February 2022

படித்ததில் பிடித்தவை (“இன்னும் கொஞ்சம்..!” – செல்வராஜ் ஜெகதீசன் கவிதை)

 


*இன்னும் கொஞ்சம்..!*

              

இன்னும் கொஞ்சம்

அன்போடு

இருந்திருக்கலாம்

இவள்.

 

இன்னும் கொஞ்சம்

இயல்போடு

இருந்திருக்கலாம்

இந்த உறவுகள்.

 

இன்னும் கொஞ்சம்

இசைவாய்

இருந்திருக்கலாம்

இந்த நண்பர்கள்.

 

இன்னும் கொஞ்சம்

இலவம்பஞ்சாய்

இருந்திருக்கலாம்

இந்த மனசு.

 

இதுபோல் இன்னும்

இன்னும் கொஞ்சங்களில்

இந்த வாழ்வு..!”

 

*செல்வராஜ் ஜெகதீசன்*



Monday 21 February 2022

படித்ததில் பிடித்தவை {“ஐந்தாம் வகுப்பு-C (இட ஒதுக்கீடு)” – வீ.கதிரவன் கவிதை}

 


*ஐந்தாம் வகுப்பு - C (இட ஒதுக்கீடு)*

 

எட்டு மணிக்குத் துவங்கும்

பள்ளிக்கூடத்துக்கு

ஆறுமணிக்கே பெருக்கத் துவங்குவா

முருகாயி ஆச்சி.

 

மத்த இடத்த விட

ஐந்தாம் வகுப்பு C க்கு

அதிகம் ஈடுபாடு காட்டுவா.

 

பாத்து பாத்து வளத்த மவன்

சாராயத்துக்கு விருந்தாக

 

மண்ணெண்ணெய்

மேல அங்க இங்க ஊத்தி 

எரிஞ்சி போன மருமவளும்

 

பத்துவயசுல

விட்டுப்போன

பொறவு

கடன் வாங்கி

தான் வேல செய்யுற

இடத்திலேயே

தலம ஆசிரியர் காலத்தொட்டு

வாங்குன

ஐஞ்சாப்பு C

அப்பப்ப வேலைக்கு நடுவுல

பேரனக்

கண்டு ரசிப்பா

நெஞ்சு நனைய.

 

வாத்தியார எதுத்து பேசுனான்னு

தலம ஆசிரியர் சொல்ல

வெளக்கமாத்தால வீசுனா பேரன.

அப்பன் புத்தியா

ஆத்தா புத்தியா

ஏண்டா அப்படி செஞ்சேன்னு..?’

தலையிலடிச்சு அழும் ஆத்தாவக்

கேக்குறான் பேரன்

ஏன் ஆத்தா,

நா கக்கூஸ கழுவத்தான் பொறந்தேன்னு

வாத்தியார் சொன்னது

உண்மையான்னு..!

 

 *வீ.கதிரவன்*