எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 27 April 2019

*எதிர்வினை*


ரயிலில் உட்கார்ந்து
பிரயாணிக்கையில்
எனக்கு எதிரே
உட்கார்ந்தவன்
காலை நீட்டினான்
எனக்கான இடத்தில்..!

மனதில் தோன்றிய
எதிர்வினையால்
மூளை கட்டளையிட
பெருக்கல் குறியீட்டில்
இளைப்பாறிய
என்னுடைய கால்கள்
இருக்கையின்
அடியிலிருந்து
வெளிப்பட்டது விட்ட
இடத்தைப் பிடிக்க..!

- கி. அற்புதராஜு.

Wednesday 17 April 2019

படித்ததில் பிடித்தவை (*சுஜாதாவின் பதில்*)


*சுஜாதாவின் பதில்*


கேள்வி: கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?



பதில்: உண்டு. நினைத்தாலே இனிக்கும் கம்போசிங்கின்போது. சில பொதுக்கூட்ட மேடைகளில்.
எங்கேயும் எப்போதும் சங்கீதம்…… சந்தோஷம்..!
...
எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.


விசு, என்ன ட்யூன்?

அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!

வாசி!

விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், தன்னானே தன்னானே தன்னானே தன்னானே என்று பாடினார். உடனேயே கவிஞர், எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் என்றார். பாடிப் பாரு!

கச்சிதமாக இருக்கு, கவிஞரே! அடுத்த அடி.?  தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…! தன்னானேக்கு பதில் தானனன்னேயா? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா? என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.

பாலசந்தர், தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே!

ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…! சரியா?

Perfect !

விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (காலை ஜப்பானில் காபி….  மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல?) உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.

இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது?



தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள்?

சீதா நேர் நேர்;
ஜானகி நேர்நிரை;
ஜனகா நிரைநேர்;
வைதேகி நேர் நேர் நேர்….

இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும்!
...

ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார்எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார். உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.

- சுஜாதா.


YOUTUBE - ல் பாடலை பார்க்க...
https://www.youtube.com/watch?v=gEoeMnPYzqg

Thursday 4 April 2019

பேசாத எருமைகள்...



அலுவலகம் செல்லும் நான்
கூட்டத்தில் நின்று கொண்டே
ரயிலில் பயணிக்கையில்...

நிற்பவர்களிடையே புகுந்து
முதுகில் பையுடன்
எல்லோரையும் உரசிக் கொண்டே
நகரும் இளைஞன்
யாரையும் நகர சொல்லவில்லை.
காதில் ஹெட்செட்டுடன்
பாடல் கேட்டுக் கொண்டே
செல்கிறான் அவன்..!

சற்று நேரம் கழித்து
யாரோ முதுகில்
கை வைப்பது போல
உணர்கையில்
பின்னால் ஒருவன்
முண்டிக் கொண்டிருந்தான்
முன்னே செல்ல.
அவனும் பேசவில்லை.
வளைந்து நெளிந்து
இடம் கொடுத்தால்
என் இடத்தில் சரியாக
இடம் பிடித்தவன்
கைப்பேசியை
பையிலிருந்து எடுத்துப்
படம் பார்க்க தொடங்கினான்..!

இறங்கும் இடம்
நெறுங்கியதும்
சார் கொஞ்சம் வழி விடுங்க...
என நான் மட்டும்
பேசியப்படியே சென்றது
எனக்கே விநோதமாக
இருந்தது.

ரயில் நிலைய வாயிலை
கடக்கும் போது
வழி மறைத்து நின்ற
இரண்டு எருமை மாடுகள்
இறங்கி வருபவர்களைப்
பார்த்ததும் அம்மா.. ம்மா... என
குரல் எழுப்பி
பாதையை விட்டு
விலகி நடந்தன..!

- கி. அற்புதராஜு.