எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 31 December 2021

படித்ததில் பிடித்தவை (“ஒரு மூதாட்டி” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*ஒரு மூதாட்டி*

 

வெளியேற்றப்பட்ட ஒரு மூதாட்டி

நகரத்தின் வீதிகளில்

நடந்து கொண்டிருக்கிறாள்.

 

அவள் பையில் இருக்கிறது

கிழிந்த புடவைகளும் மீதிக் கனவுகளும்.

 

புறக்கணிப்பின் துயரம்

அவள் கண்களில் பெருகுகிறது.

 

ரத்த உறவுகளின் முகவரிகளை

கிழித்து போட்டபடிச் செல்கிறாள்.

 

யாரும் வாய் திறந்து சொல்லவில்லை.

அவள் வெளியேற்றப்பட்டிருக்கிறாள்.

 

சிறு தூறல் அவள் புழுக்கங்களை நனைத்து

ஒத்தடம் கொடுக்கிறது.

 

சாலையோரத் தேநீர் ஒரு சில நிமிடங்களுக்கு

சூடான நட்பாகிறது.

 

சீக்கிரம் போய் சேர்ந்துவிட்ட

தன் கிழவனைத் திட்டியபடி நடக்கிறாள்.

 

 இந்த ஒத்தைச் சுமை

அவள் முதுமையை இன்னும்

பாரமாக்குகிறது.

 

நிராகரிப்பின் கசப்பை

உணர்ந்தபடி நடக்கிறாள்.

 

அவளுக்கான இடம் இல்லையெனினும்

உலகத்தை நிரப்பியபடி

நடந்து கொண்டிருக்கிறாள் அந்த மூதாட்டி..!

 


 *ராஜா சந்திரசேகர்*












Thursday 30 December 2021

படித்ததில் பிடித்தவை (“பட்டினி” – வீ.கதிரவன் கவிதை)

 


*பட்டினி*

 

நிலம் ஒட்டித்தான் இருந்தது

என் வீடு.

வயிற்றுப் பிழைப்பிற்கு

பட்டணத்தில் இருக்கிறேன்.

பாவம்

நிலம் பட்டினியாகக் கிடக்கிறது..!

 

*வீ.கதிரவன்*


Wednesday 29 December 2021

படித்ததில் பிடித்தவை (“ஈடேது” – வீ.கதிரவன் கவிதை)

 


*ஈடேது*

 

என் வருத்தமெல்லாம்

அம்மாவின்

முந்திக்காசும்,

ஊழல்வாதியின்

ஊழல் காசும்

உண்டியலில்

ஒன்றாகக் கிடப்பதுதான்..!

 

*வீ.கதிரவன்*


Tuesday 28 December 2021

படித்ததில் பிடித்தவை (“கடவுள் டூரிஸ்ட் கைடாகிறார்” – வழிப்போக்கன் கவிதை)

 


*கடவுள் டூரிஸ்ட் கைடாகிறார்*

 

பக்தியின் பரவசத்தில்

எல்லோரும் பிராகாரத்தைச் சுற்றி

ஆலயத்தில் இறைவனைக் காண

அடித்துப் பிடித்து

மூலஸ்தானத்தின் முன்நின்றபடி

இருகைக் கூப்பி பிரார்த்தனை

செய்து கொண்டிருக்க

 

அந்தக் கோவிலில்

குழந்தையொன்று

பெற்றோர்களின்

கையை விட்டுவிட்டு

கடவுளின் தோள்மீது

கைபோட்டபடி

சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது

பஞ்சுமிட்டாய்க்காரனையும்,

பலூன்காரனையும்

 

கடவுள் அங்கே

தன் அவதாரம் மறந்து

குழந்தைக்கு டூரிஸ்ட் கைடாகிறார்..!

 

*வழிப்போக்கன்*




Monday 27 December 2021

படித்ததில் பிடித்தவை (“பேரம்” – வீ.கதிரவன் கவிதை)

 


*பேரம்*

 

பானை செய்தேன்.

தட்டி பார்த்து

பேரம் பேசினார்கள்..!

 

சிலை செய்தேன்.

வணங்கி

வாங்கி போனார்கள்..!

 

*வீ.கதிரவன்*


Sunday 26 December 2021

படித்ததில் பிடித்தவை (“இடது கை” – கலாப்ரியா கவிதை)

 


*இடது கை*

 

கைகளிரண்டில்

இடது கையை எனக்குப் பிடிக்கிறது.

ஏனெனில்

இதற்கே உடலின் அந்தரங்கங்கள்

நன்கு அறிமுகம்.

 

விளையாட்டு மும்முரத்தில்

சாக்கடையில் விழும் பமபரங்கள்

கோலிக்காய், குச்சிக் கம்பு

எதுவானாலும் யோசியாமல்

துழாவி எடுத்துத் தரும்.

 

இடது கை ஏரை பிடிக்கும்.

வலது கை சாட்டையைப் பிடிக்கும்.

சாமி படக்காலண்டர் மாட்ட

சுவரில் ஆணி அடிக்கையில்

அதைப் பிடித்துக்கொள்ளும்.

வலது கை தப்புச்செய்தால்

வலுவாய்ச் சுத்தியலடி வாங்கிக் கொள்ளும்..!

 

*கலாப்ரியா*



Saturday 25 December 2021

படித்ததில் பிடித்தவை (“பணிநீக்க உத்தரவு” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*பணிநீக்க உத்தரவு*

 

எப்போதும்போல்

வீட்டிற்குக் கிளம்பும்போது

அவளது பணிநீக்க உத்தரவு

தரப்பட்டது.

 

வருத்தமோ

கோபமோ இல்லாமல்

வழக்கமாகத் தரப்படும்

எதையோ ஒன்றைப்போல.

 

அவள் இனி

அங்கே ஒருபோதும்

வரவேண்டியதில்லை என்பது

அவளுக்குச் சொல்லப்பட்டது.

 

தான் இதற்கு ஆயத்தமாக இருக்கவில்லை

என்பதை அவள் சொல்லவிரும்பினாள்.

 

உடனடியாக ஒரு நாளின்

அத்தனை பழக்கங்களையும் மாற்றிக்கொள்வது

சிரமம் என்று சொல்ல விரும்பினாள்.

 

இந்த வேலை தனக்குப் பிடித்திருந்தது என்றும்

இங்கே எளிமையான பல உறவுகள் இருக்கின்றன

என்றும் சொல்ல விரும்பினாள்.

 

ஆனால் அவள் எதையுமே

சொல்லவில்லை.

அதை விவாதிக்கக் கூடாத

புனித ரகசியமாக மாற்றிவிடவேண்டும்

என்று அவளுக்குத் தோன்றியது.

 

ஒரு காதல் கடிதத்தைப்

படிப்பதுபோலவே

அவள் தனது பணிநீக்க உத்தரவைத்

திரும்பத் திரும்பப் படிக்கிறாள்.

தெளிவான வாக்கியங்களில்

புலப்படாத ஒன்று மிச்சமிருப்பதாகவே

அவளுக்குத் தோன்றியது.

 

காமிராவின் லென்சிலிருந்து ஒரு காட்சி

தொலைதூரத்திற்கு விலக்கப்படுவதுபோல

தன்னைச் சுற்றியிருக்கிற

ஒவ்வொன்றும் எவ்வளவு விரைவாக

விலகுகிறது என்பதை

வியப்புடன் பார்க்கிறாள்.

 

சக பணியாளர்கள்

அவள் கண்களைச் சந்திப்பதை

தவிர்க்கின்றனர்.

அவளை

ஆறுதல்படுத்தும் பொருட்டு

கோபமாக எதையோ முணுமுணுக்கின்றனர்.

அது அவர்களுக்குக்கூட

கேட்டதா என்பது சந்தேகம்.

 

பணிநீக்க உத்தரவை

அப்போதுதான் பிடுங்கப்பட்ட

ஒரு தாவரத்தைப் பார்ப்பதுபோல

பார்க்கிறாள்.

அது ஈரமாக இருந்தது.

வெப்பமாக இருந்தது.

வாசனையோடு இருந்தது.

அது உறுதியான

மௌனத்தோடு இருந்தது.

 

ஆனால் அது

உண்மையில்

ஒரு பிடுங்கப்பட்ட தாவரம் அல்ல.

அது தன் கைகளில்

கொஞ்சம் கொஞ்சமாக

வளர்வதை அவள் உணர்கிறாள்.

வீட்டிற்குப் போய் சேர்வதற்குள்

அது உண்மையில் பெரிய மரமாகிவிடும்

என அவளுக்கு மிகவும் அச்சமாகவே இருந்தது.

 

முதல் முதலாக

அந்தியின் மஞ்சள் வெயில்

எவ்வளவு அடர்த்தியானது

என்பதைக் கவனிக்கிறாள்.

 

நாளைக் காலையில்

எவ்வளவு தாமதமாக

எழுந்துகொள்ள முடியுமோ

எழுந்துகொள்ளலாம்.

 

நாளை மதியம்

ஆறிப்போன எதையும்

சாப்பிட வேண்டியதில்லை.

 

செய்யவேண்டியவையோ

செய்யத்தவறியவையோ

ஒன்றுமே இல்லை.

 

துணி துவைப்பதற்காக

விடுமுறை நாட்களுக்குக்

காத்திருக்க வேண்டியதில்லை.

 

திடீரெனெ

அவ்வளவு பிரமாண்டமாகிவிட்ட உலகம்

அவ்வளவு நிறைய கிடைத்த நேரம்

அவ்வளவு பொறுப்பற்ற தன்மை

அவளைக் கிளர்ச்சியடைய வைக்கிறது.

 

வீடுகளை நோக்கி ஆவேசமாக நகரும்

இந்த சாயங்கால மனித வெள்ளத்தினூடே

எத்தனை பேர்

ஒரு பணிநீக்க உத்தரவுடன்

வீடு திரும்புவார்கள்

என்று நினைக்கத் தொடங்கினாள்.

 

தன்னைப்போல

யாரவது ஒருவர்

நாளைக் காலை

இதே பாதையில் வரத் தேவையற்றவர்கள்

இருக்கிறார்களா

என ஒவ்வொரு முகமாக உற்றுப் பார்க்கிறாள்.

 

இது ஒரு சிறிய பிரச்சினை.

ஒரு காபி குடித்தால்

எல்லாம் சரியாகிவிடும் என்று

அவளுக்குத் தோன்றியது.

 

ஒரு நல்ல காபி மட்டுமே

கடவுள்கள், மனிதர்கள் உருவாக்கிய

எல்லாப் பிரச்சினைகளையும்

தீர்க்கக்கூடியது

என்று நினைத்தபடியே

மீண்டும் ஒருமுறை

தனது பணிநீக்க உத்தரவைப்

படிக்கத் தொடங்குகிறாள்..!

 

*மனுஷ்ய புத்திரன்*