எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 21 July 2018

படித்ததில் பிடித்தவை (“ஒவ்வொரு முறையும்” – பிரபு சங்கர் கவிதை)



ஒவ்வொரு முறையும்

உன் ஆடைகளைத்
துவைக்கும் போது
வேறோர் உலகத்திற்குச்
சென்றுவிடுகிறேன் நான்...

யாருமற்ற அப்பொழுதுகளில்
உன்னாடைகளில் உள்ள
வியர்வை நெடியும்
சிகரெட் துகள்களும்
மது வாசனையும்
போதுமானதாக இருக்கின்றன
உன் இருப்பைக் காட்டிக்கொள்ள...

நீ வைத்த சூடுகள்
நீ பேசிய கடுங்சொற்கள்
நீ செய்த உதாசீனங்கள்
நீ பார்த்த ஏளனப்பார்வைகள்
நீ அடித்த அடிகள்
என ஓவ்வொன்றும்
ஒவ்வோர் ஆடையாக
உருமாறுகிறது...

உன்னை நீரில் பிழிந்து
அமிலக்கட்டியில் கரைத்து
கல்லில் அடித்துத்
துவைத்தெடுப்பதாய்
கற்பனை செய்து
உன்னாடைகளைத் துவைக்கிறேன்
அகம் நிறைந்த சந்தோஷத்தில்...

துவைத்து முடித்துக்
கொடியில் காயவைக்கும்போது
லேசாகி வெளுத்துவிடுகிறது
உன் ஆடைகளும்
என் மனசும்..!

-      பிரபு சங்கர்.