எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 25 June 2016

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)


வானமே எல்லை
“ரெண்டே ரெண்டு
றெக்கைதான்
முடிந்த மட்டும்
வானத்தை
அளந்துவிடுகின்றன
பறவைகள்..!”
-          பாரியன்பன் நாகராஜன்.



பயம்
“இடி இடித்தவுடன்
பயந்த குழந்தை
பொம்மையின் காதுகளைப்
பொத்திக்கொண்டது..!”

-          சாதிக்.

Wednesday 15 June 2016

யாருக்கும் தெரியாமல்...


“அதிகாலை நேரம்.
நகரத்தின் ஞாயிறு
உறங்கிக்கொண்டிருந்தது.
தெருவை
சுற்றும் முற்றும்
பார்த்தேன்.
யாருமில்லை.
ஒரு வாரமாக
பூட்டியிருந்த
வீட்டின்
மதில்சுவர்
ஏறிக்குதித்தேன்.
தண்ணீர் குழாயைத்
திறந்தேன்.
தண்ணீர் வந்தது.
வாடியிருந்த
தொட்டிச்செடிகளுக்கு
தண்ணீர் விட்டப்பின்
பக்கத்து வீட்டிலிருந்து
யாருக்கும் தெரியாமல்
மதில்சுவர்
ஏறிக்குதித்து
திரும்பியதை
செடியில் பூத்திருந்த
ஒற்றை ரோஜாப்பூ மட்டும்
தலையாட்டியப்படியே
சந்தோசமாக
பார்த்துக்கொண்டிருந்தது..!”

-   கி. அற்புதராஜு.

Friday 10 June 2016

படித்ததில் பிடித்தவை (நதி - கலாப்ரியா கவிதை)


நதி
“கரையில் நிற்பவரைக்
கால்களை மட்டும்
தன்னில் இறங்குபவர்களைத்
தலை வரையிலும்
மூழ்கிக்
குளிப்பவர்களை
மூளையுள்ளும்
நனைக்கும்
தண்ணீர் நதி.

மின்
தொடர்வண்டியிலோ
பார்வைத் திறன்
குறைந்தவரின்
பாடல் கையேந்தி
நெருங்கும்போது
கண்
பொத்திக்கொள்வோரின்
காதுகளையும்
நனைக்கும்
காற்று நதி.

-  கலாப்ரியா (தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி)

Tuesday 7 June 2016

படித்ததில் பிடித்தவை (வரும் வேளை - மனுஷ்யபுத்திரன் கவிதை)


வரும் வேளை...
“நாளைக்கு வரட்டுமா..?”
என்றாள்.

பிறகு
“இல்லை
இன்று மாலையே வருகிறேன்”
என்றாள்.

தாளமாட்டாமல்
“இப்போதே வந்துவிடட்டுமா..?”
என்றாள் தடுமாறிக்கொண்டே...

“இன்னும் சீக்கிரம்
இன்னும் சீக்கிரம்
இக்கணமே கிளம்பி
நீ நேற்றைக்கே வந்துவிட்டால்
என் எல்லா கவலைகளும்
தீர்ந்துவிடும்”
என்றேன்.

-  மனுஷ்யபுத்திரன் (புலரியின் முத்தங்கள்).

Friday 3 June 2016

படித்ததில் பிடித்தவை (குட்டு - கவிதை)


குட்டு
“தன் நீரில் ஒளிரும்
விளக்குகளைச்
சொந்தம் கொண்டாடும்
நகர்சூடிய
இரவு நேரக் குளத்தின் தலையில்
மெள்ளக் குட்டுவைக்கிறது
மின்வெட்டு..!”
                                   -   மகேஷ் சிபி.
                           (நன்றி: ஆனந்தவிகடன்)