எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 30 December 2020

படித்ததில் பிடித்தவை (“பறந்த ஆகாயம்” – கல்யாண்ஜி கவிதை)

 


*பறந்த ஆகாயம்* 

 

உதிர்ந்த

இறகுகளில்

பறந்த

ஆகாயம்

இருக்கும்தானே..!

 

*கல்யாண்ஜி*


Tuesday 29 December 2020

படித்ததில் பிடித்தவை (“அழகு” – கல்யாண்ஜி கவிதை)

 


*அழகு* 

 

உருண்டு விழுந்தோடும்

பென்சில்.

குனிந்து எடுத்து

அந்த சிறுமியிடம்

கொடுக்கையில்

 

பென்சில்

அழகாக இருந்தது

ஒரு உலகம் போல...

உலகம் அழகாக இருந்தது

ஒரு பென்சில் போல..!

 

*கல்யாண்ஜி*


Monday 28 December 2020

படித்ததில் பிடித்தவை (“பறந்த காலம்” – கல்யாண்ஜி கவிதை)

 


*பறந்த காலம்*

 

எனக்கு

இருக்கும்

இறந்த காலம் போல,

பறவைக்கும்

இருக்கும் அல்லவா

ஒரு பறந்த காலம்..!

 

*கல்யாண்ஜி*


Sunday 27 December 2020

*தப்பாட்டம்*

 


நகர சாலையில்

நீத்தார்

இறுதி ஊர்வலம்.

 

போக்குவரத்து நெரிசலில்

சிக்கிய பேருந்தின்

ஜன்னல் ஓரம்

உட்கார்ந்திருந்த சிறுவன்

அருகில் அமர்ந்திருந்த

அம்மாவின்

அடக்குதலையும் மீறி

தோள்களை குலுக்கி

ஆட ஆரம்பித்தான்

தப்பாட்டத்திற்கு..!”

 

*கி.அற்புதராஜு*


Saturday 26 December 2020

படித்ததில் பிடித்தவை (“நனைந்த மழை” – கல்யாண்ஜி கவிதை)

 


*நனைந்த மழை* 

 

நனைந்து

வீட்டுக்குள் நுழைந்தவள்

தலையிலிருந்து

மழை

கொட்டிக்கொண்டிருந்தது…

 

சொல்லலாம்

மழையிலிருந்து

அவள்

சொட்டிக் கொண்டே

இருந்ததாகவும்..!

 

*கல்யாண்ஜி*


Friday 25 December 2020

படித்ததில் பிடித்தவை (“தூக்கிவிடுங்க” – கல்யாண்ஜி கவிதை)

 


*தூக்கிவிடுங்க*

 

போய்க்கொண்டிருக்கும் போது

ஒரு கைப்பிடிச்சு தூக்கிவிடுங்க என்று

கனத்த கூடையுடன்

முகம் அழைக்குமே,

அப்படி அழைக்கும்படியாக

நான்

போய்க் கொண்டிருந்தால்

போதும்..!

 

*கல்யாண்ஜி*


Thursday 24 December 2020

படித்ததில் பிடித்தவை (“கடைசி வகுப்பு” – கல்யாண்ஜி கவிதை)

 


*கடைசி வகுப்பு* 

 

இந்த தினத்தின்

முதல் வகுப்பு

எடுக்க வந்த ஆசிரியர்

முந்தைய தினத்தின்

கடைசி வகுப்பு

எழுத்து மிதக்கும்

கரும்பலகையை பார்க்கிறார்.

மிகுந்த தயக்கத்துடன்

ஒரு முந்திய தினத்தை

எல்லோரிடமிருந்தும் அழிக்கிறார்..!

 

*கல்யாண்ஜி*


Wednesday 23 December 2020

படித்ததில் பிடித்தவை (“மழை நாள்” – கல்யாண்ஜி கவிதை)

 


*மழை நாள்*  

 

வீசிவிட்டு போன

தினசரி

நனைந்திருந்தது சற்று.

 

வீசிவிட்டு போன

பையன்

நனைந்திருப்பான் முற்றிலும்..!

 

  *கல்யாண்ஜி*


Tuesday 22 December 2020

படித்ததில் பிடித்தவை (“ஏழையின் சிரிப்பு” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*ஏழையின் சிரிப்பு*

 

சரக்கடிக்கும்போது

மட்டும்

கொஞ்சம் சிரிக்கிறான்

மாரி.

 

சுற்றி நின்று

சிரிக்கிறது

அவன் சுற்றம்.

 

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண்கிறது

அரசு..!

 

 *சேயோன் யாழ்வேந்தன்*


Monday 21 December 2020

படித்ததில் பிடித்தவை (“மாயக் குதிரை” – ஸ்ரீரங்கம் மாதவன் கவிதை)

 


*மாயக் குதிரை*

 

பாதாள பைரவியின் மாயக்குதிரை

என் வீட்டுக்கு வந்தது.

 

பேசும் திறனுள்ள

நினைக்குமிடம் பறந்து செல்லும் குதிரை.

 

 நீ விரும்புமிடத்தில் விட்டுவரக் கட்டளை

வா போகலாம் என்றது.

 

மழைக்காலமாயிற்றே ஸ்வெட்டரெல்லாம்

அணிந்துகொண்டு

மகிழ்ச்சியாக ஏறிக்கொண்டேன்.

 

எங்கேயென கேட்டபடி பறந்தது வானத்தில்.

 

காசா பணமா

இந்திரலோகம் போகச் சொன்னேன்.

 

அடுத்த நிமிடத்தில் அடைந்துவிட்டோம்.

 

ரம்பை ஊர்வசி நடனமெல்லாம்

இரண்டாம் நொடியில் போரடித்தது.

கிளம்பிவிட்டோம்.

 

செவ்வாய்க்கு செல்வோமென்றேன்.

சென்று சேர்ந்ததும்

திரும்பச்சொன்னேன்.

தண்ணீரில்லை.

 

பிரபஞ்சத்தின் பல இடங்களுக்குச்

சென்று பார்வையிட்டோம்.

எங்கும் மனிதர்களில்லை.

புறப்பட்டோம்.

 

கைலாச சிவனும்

பாற்கடல் பெருமாளும்

பெருந்தியானத்தில் கரைந்திருக்க

காத்திருக்கப் பொறுமையின்றி

புறப்பட்டுவிட்டோம்.

 

சலிக்காமல் சுமந்தது குதிரை.

 

எதற்கும் பூமியிலேயே தேடுவோமென்று

பிரான்ஸுக்கு போகச் சொன்னேன்.

 

பழைய ஆட்கள் யாருமில்லை.

 

ரோமாபுரி நகரத்தில்

போப்பும் பிஸியாயிருந்தார்.

 

நாகூர் தர்க்காவில்

நொடிகள் சில நின்றுவிட்டுக்

குதிரையிடம் சொன்னேன்

காலத்தைக் கடந்திடுவோம் என்று.

 

சரியென்று அழைத்துச் சென்றது

அலெக்ஸாண்டரின் போர்முகாமிற்கு.

 

கடுங்காய்ச்சலில் சுரணையற்றுப் படுத்திருந்த

அவன் வாள் தொட்டுப்பார்த்தேன்.

அத்தனையொன்றும் கூர்மையாயில்லை.

 

போதகர் புத்தரின்

ஆசையறுக்கும் தம்மபதம்

அத்தனை சுவாரஸ்யாமாயில்லை.

 

ராஜராஜ சோழனை அரண்மனையில் சந்தித்தோம்.

மணிமுடி பாரமென்று புலம்பினான்.

 

சாணக்கியனை சந்தித்தபோது

சபதத்தில் தீவிரமாயிருந்தான்.

 

அந்நிய மண்ணில்

காந்தியிடம் சொன்னேன்

நீங்கள்தான்

பின்னாளில் எங்கள் தேசத்தந்தையென.

 

ரயிலிலிருந்து இறக்கிவிட்டார்களென்று

சோகமாகச் சொன்னார்.

 

சுஜாதாவைப் பார்க்க

ஸ்ரீரங்கம் சென்றோம்.

சிறுவனாக நண்பர்களோடு

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

குதிரை இப்போது பேச்சை நிறுத்தி

பைத்தியம்போல பார்க்கத் தொடங்கியது என்னை.

 

இலங்கைக்குச் சென்றோம்.

போர்நிறுத்தும் உத்தேசத்தில்

பயனின்றிக் கிளம்பிவிட்டோம்.

 

எதிர்காலம் போவென்றேன்.

எங்கும் மரமில்லை. நீரில்லை உணவில்லை.

ஆக்ஸிஜன் மாஸ்க்குகளோடு

அலைந்து கொண்டிருந்தார்கள் அனைவரும்.

 

வேண்டாம் செல் நிகழ்காலமென்றேன்.

 

குதிரை சொன்னது

மூடிக்கொள் உனது கண்களை.

நான் அழைத்துச் செல்கின்றேன் உன்னை.

விருப்பிடம் வந்ததும் சொல்

விட்டுவிடுகின்றேன் என்று.

 

எங்கெங்கோ அழைத்துச்சென்றது

இது ஓகேவா..? இது ஓகேவா..? எனக்கேட்டது.

 

 இதுவேண்டாம் இது வேண்டாமென்று

மறுத்துக் கொண்டிருந்தேன்.

 

இறுதியாக அது நின்ற இடம்

நிரம்பப் பிடித்திருந்தது.

பரவசத்தில் கண்திறந்தேன்.

என் வீடிருந்தது

குதிரையைக் காணவில்லை..!

 

*ஸ்ரீரங்கம் மாதவன்*