எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 23 October 2016

படித்ததில் பிடித்தவை (“சாலையோரத் தையல்காரர்” – மகுடேசுவரன் கவிதை)


சாலையோரத் தையல்காரர்
“சாலையோரத் தையல்காரர் அவர்.
நரைகூடிய முதியவர்.

வாகனப் பெருக்கமுள்ள
சாலையோரம் அமர்ந்திருக்கின்றார்.

சாலையில் விரைவோர் யாரும்
அவரை ஒரு பொருட்டாகவே
கருதியதில்லை.

நாள் தவறாமல்
அந்தச் சிறுமர நிழலில்
கருமமே கண்ணாய்க் காணப்படுவார்.

தயாரிப்பு நிறுத்தப்பட்ட
ஒரு தையல் எந்திரத்தில்
சிறு சக்கரங்கள் பொருத்தி
தள்ளுவண்டி ஆக்கியிருக்கிறார்.

புதுத் துணியொன்றைத் தைக்கும்
பேறற்றதுதான் அந்த எந்திரம்.
பழையவற்றையும் கிழிந்தவற்றையுமே
எப்போதும் தைப்பது அது.

பகட்டுக்கு உடுத்துவோரை
அவரும் அறியார்.

பழைய துணியை
நேர்த்திசெய்து அணியும்
நம் போன்ற எளிய மனத்தினரே
அவருக்கு வாடிக்கையாளர்.

நம் மனமறிந்து
கடைவிரித்திருக்கிறார்.

தாம் செய்யவேண்டிய பணி
இந்நாளில் இவ்வூரில்
யாருக்கோ தேவையென்ற நம்பிக்கைதான்
அவரை நாள்தோறும்
அங்கே அழைத்துவருகிறது.
அந்நம்பிக்கை பொய்த்ததில்லை.

வண்டியை ஓட்டிவந்து
வாகாக நிறுத்தியதும்
அதில் தொற்றியிருக்கும் நாற்காலியை
எடுத்துப்போட்டு அமர்கிறார்.

எந்திரப் பலகையின்
வலது கீழாய்ப் பொருத்தியுள்ள
சிறிய இழுப்பறையில்
இளைத்த நூல்கண்டுகள்
வண்ணத்துக்கு ஒன்றாய்
ஏழெட்டு இருக்கின்றன.

கைப்பட்டுக் களிம்பேறிய
தண்ணீர்ப் புட்டியும்
மதியச் சோற்றுப் பாத்திரமும் உள்ளன.

எந்திரத்தைத் துடைத்துக்கொண்டிருக்கையில்
தன் கறுப்பு இரவிக்கையைப்
பிரித்து அடித்துத் தரும்படி
ஒருத்தி துணி கொணர்கிறாள்.

தையல் பிரித்துத்
தையலடித்துத்
தையலிடம் தருகிறார்
தையல்காரர்.

கூலியாய்க் கிடைத்த பத்தை
கண்ணொற்றி வைத்துக்கொள்கிறார்.

அடுத்து வருமொருவர்
தாம் அப்போதுதான் வாங்கிவந்த
புதுக் கைலியை மூட்டித் தரசொல்கிறார்.

மலர்ந்த முகத்தோடு
வாங்கிக்கொள்ளும் தையல்காரர்
அந்தப் புதுத்துணியை
அளப்பரிய விருப்போடு
மடிபிரித்து விசிறுகிறார்.

இச்சிறுநாளில்
இது கிடைத்தற்கரிய பேறுபோல்
மனமொன்றி
அந்தக் கைலியை மூட்டுகிறார்.

எந்திரத்தை மிதிக்கையில்
மெல்லிய நடன அடவுபோன்ற ஒன்றால்
அவருடல் அசைகிறது.

தையல் எந்திரத்தின் ஒலிப்பில்கூட
மகிழ்ச்சியின் உற்சாகச் சுவடு.

பழைமைக்கென்றே
ஒதுக்கப்பட்ட நொடிகளில்கூட
இதுபோல் புதிது வாய்ப்பதும்
வாழ்வின் தீராப்புதிர்களில் ஒன்றுதான்.

மதியமாகிவிட
சோற்றுப் பாத்திரத்தை எடுத்து
உண்கிறார்.

மேலும் சில தையல் பணிப்புகள் வர
மாலை ஆகிறது.

மீண்டும் தையல் எந்திரம்
ஏறக்கட்டப்படுகிறது.

சிறு சக்கரங்கள் ஒலிக்க
சாலையின் ஆயிரம் வண்டிகளோடு
அந்தத் தையல்வண்டியும்
நகர்ந்து மறைகிறது.

மரத்தடியில்
அந்திவானச் சிதறலைப்போல்
சில துணித்துண்டுகள் கிடந்தன.”

-          மகுடேசுவரன்.

Wednesday 12 October 2016

மாப்பிள்ளை அழைப்பும்... 1000 வாலா வெடியும்..!


“நகரத்தின்
தேர் ஓடும் வீதியில்
பெரிய மண்டபத்தில்தான்
திருமணம்...

முந்தைய நாள் இரவில்
மாப்பிள்ளை அழைப்பில்
பெண்ணையும் சேர்த்தே
அழைத்தார்கள்
இரண்டு குதிரை பூட்டிய
சாரட் வண்டியில்...

1௦௦௦ வாலா தரையிலும்,
1௦௦ ஷாட்ஸ் வானிலும்
வெடித்து சிலருக்கு
வேடிக்கையும்,
பலருக்கு பயத்தையும்
காட்டின...

கேரளா செண்டை மேளம்,
பேண்ட் கிளாரிநெட் என
காதுகளை துளைத்தன
பெரும் சத்தம்.
அந்த சத்தத்தில்
கரைந்துப்போயின
நம் பாரம்பரிய
மேளமும், நாதஸ்வரமும்...

இசைக்கு ஏற்ப ஆடும்
குதிரையும்,
அலங்கரிக்கப்பட்ட
யானையும்
பங்கேற்றன ஊர்வலத்தில்...

பிள்ளையார் கோவிலில்
தொடங்கி
மெதுவாக மண்டபத்தை
நெருங்கிய ஊர்வலம்
போக்குவரத்து நெரிசலை
உண்டாக்கியது பாதை நெடுக

வாகனங்களின் ஒலியும்,
ஊர்வலத்தின் ஒலியும்
மோதிக்கொண்டன...

வாழ்த்த வந்த எங்களின்
வாழ்த்துகளை எல்லாம்
அடித்து, துவைத்து,
வெளுத்து, கிழித்து
துவம்சம் பண்ணியது
நெரிசலில் சிக்கி
பாதிக்கப்பட்டவர்களின்
கோபப்பார்வையும்,
செயல்களும்..!”
         
        -    கி. அற்புதராஜு.

Sunday 9 October 2016

படித்ததில் பிடித்தவை (“ஆற்றாமை” – எம்.விக்னேஷ் கவிதை)


ஆற்றாமை
“ஆற்றின்
பெயர் தாங்கிய பலகை
சுடுமணல் பாலைவனத்தை
கை காட்டுகிறது.

ஆற்றின் ஆயுளை விட
மீன்களின் ஆயுள் அதிகம்
கருவாடாய் மிச்சமிருக்கிறது.

ஆழமான பகுதி
எச்சரிக்கை காட்டிய பகுதியில்
மணல் வீடு கட்டி விளையாடுகிறார்கள்.

கடலின் விலாசத்தை
நதிகள் மறந்துவிட்டதோ
கடல் அலைமோதிக்கொண்டிருக்கிறது.

மணல் லாரியிலிருந்து
சொட்டும் தண்ணீர்
ஆற்றின் ஆற்றாமையை கூறுகிறது.

நதி மூலம் கண்டவர்கள்
நிர்மூலம் ஆவதை தவிர்த்திருக்கலாம்.
தீண்டாமையை ஆற்றிடம் காட்டியிருக்கலாம்.

வரலாற்றில் வரையறுக்கப்படாத
ஆற்றின் எல்லைக்கோடு
வரைபடத்திலும் வேண்டாமே...
ஆற்றுக்கு மொழிகள் சொல்லித் தந்தது போதும்...
உயிர் நாடி அடங்கும் முன்
சுவாசம் தந்து உயிர்ப்பிப்போம்..!”

-          எம். விக்னேஷ். (நன்றி: தி இந்து, தேநீர் கவிதை)

Thursday 6 October 2016

படித்ததில் பிடித்தவை (“உடன்படுக்கை விதிகள்” - சுகுமாரன் கவிதை)


உடன்படுக்கை விதிகள்

“இரட்டைக் கட்டிலில் கிடக்கும்
ஒற்றை நுரைமெத்தை நடுவில்
வரையப்பட்டிருக்கும் எல்லைக்கோடு
கண்ணுக்கு ஒருபோதும் புலப்படுவதில்லை.
எனினும்
படுக்கையின் எல்லை விதிகள்
நாமறியாமல் நம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன.

உறக்கக் கடலின் இருளாழத்தில் துளாவிக்
கைகால்களோ உடலோ பெயர்ந்து
எல்லை தாண்டுகிறோம்.
உடனே
கடலோடியின் நீரியல் எச்சரிக்கையுடன்
அவரவர் எல்லைக்குப் புரண்டு துயில்கிறோம்.

கடலோடிக்கு
நீர்வெளியின் எல்லைகள் தெரிவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் புலப்படுகின்றன.

காமத்தின் வானில் வேட்கையுடன் பறந்து
உடல்களைப் பகிர்ந்து
எல்லையைத் தாண்டுகிறோம்.
உடனே
விமானியின் சாதுரியத்துடன்
அவரவர் எல்லையைப் புறக்கணித்துக் கூடுகிறோம்.

விமானிக்கு
ஆகாய சுதந்திரத்தில் எல்லைகள் இயல்பாவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் மறக்கின்றன.

எனினும்
உடன்படுக்கை எல்லைகளில்
மீற முடியாத விதியொன்று -
ஈருடல் ஓருயிர் என்று பீற்றிக்கொண்டாலும்
ஒரே சிதையில் எரிக்கப்படவோ
ஒரே சவப்பெட்டியில் அடக்கப்படவோ முடியாது..!”

-         சுகுமாரன்.