எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 19 April 2016

சிலந்தியும், தூக்கணாங்குருவியும், நானும்...


“நேற்று அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும் போது
மின்சார ரயிலின்
மின்விசிறிக்கும்
மேல்கூரைக்கும் இடையே
அரை மணி நேரத்தில்
தான் தங்குவதற்கு
வலைப் பின்னி விட்டது
சிலந்தி..!

இன்று வாட்ஸ் ஆப்
வீடியோவில் பார்த்தேன்...
தனது இணையுடன்
தங்குவதற்கு தானே
அழகாகக் கூடு
கட்டிக் கொள்கிறது
தூக்கணாங்குருவி..!

சற்றே சங்கடப்படுத்துகிறது...
இரண்டு மாதமாக தினமும்
ஏழு, எட்டுப்பேர் வேலை
செய்துக்கொண்டிருப்பது 
எனது குடும்பத்துக்காக
நான் கட்டும் வீட்டுக்கு..!”

      -   கி. அற்புதராஜு.

Sunday 3 April 2016

உயிருடன் இரண்டு வெள்ளை ஆடுகள்..!



“ஞாயிறு காலை
கறிக்கடையில்
ஒரு ஆடு உரிக்கப்பட்டு
தொங்கிக்கொண்டிருந்தது.
கறுப்பு ஆடு
கழுத்து அறுபட்டு
இரத்த வெள்ளத்தில்
கீழே கிடந்தது.
இரண்டு வெள்ளை ஆடுகள்
கடை வாசலில்
அடைக்கப்பட்டிருந்தன.

ஞாயிறு மட்டும்
கடை போடும்
கறிக்கடைக்காரர்
வாடிக்கையாக
வாங்குபவர்களின்
வருகைக்காய்
காத்திருக்கிறார்.
ஓரிருவர் கடைக்கு வந்து
வாங்கிக் கொண்டிருந்தனர்.

வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கையே
நிர்யிக்கப் போகிறது
கடை வாசலில்
அடைக்கப்பட்டிருக்கும்
வெள்ளை ஆடுகளின்
வாழ்நாளை...
இன்று வரைக்குமா?
ஒரு வாரம் கழித்தா?
என்று..!”

     -   கி. அற்புதராஜு.