எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 14 June 2021

படித்ததில் பிடித்தவை (“பட்டாம்பூச்சி விற்பவன்” – நா.முத்துக்குமார் கவிதை)


*பட்டாம்பூச்சி விற்பவன்*

 

பதின்மூன்று வயதிருக்கும்

பாலத்தின் அருகே

பார்த்தேன் அவனை.

 

நேற்று பூக்கடை,

போனவாரம் பஜார்வீதி,

என

இடம் மாறுதலே குறிக்கோளாய்

இருக்கிறது அவன் வாழ்வு.

 

குடையை மல்லாத்தி

அதில் பரப்பியிருந்தான் சரக்கை.

 

எடுப்பவர் கையில்

வண்ணம் தொலைக்காமலும்

சிறகின் இயல்பை

மறந்த நிலையிலும்

இருந்தன பட்டாம்பூச்சிகள்

அடிவயிற்றில் மெழுகுபூசி.

 

கூவி

விற்றும் விடுகிறான்

அவ்வப்போது ஒன்றிரண்டை.

 

சின்னவயதில்

பிடிக்குத் தப்பியதை

இப்போது பிடித்ததாய்

எல்லோருக்கும் கர்வம்.

 

அலமாரியோ, சுவரோ

இனி

ஆவலோடு வந்து

ஏமாறப் போகின்றன‌

வீட்டு பல்லிகள்..!

 

*நா.முத்துக்குமார்*




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *நா.முத்துக்குமார்*
    (12 சூலை 1975-14 ஆகஸ்ட் 2016),
    தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்
    திரைப்படப் பாடலாசிரியரும்
    கவிஞரும் ஆவார்.
    'பல்லேலக்கா',
    'என் காதல் சொல்ல',
    'ஒரு கல் ஒரு கண்ணாடி'
    ஆகியவை இவரின்
    திரையிசை பாடல்களுள் சில.
    தங்க மீன்கள், சைவம்
    திரைப்படப் பாடல்களுக்காக
    தேசிய விருது வாங்கினார்.

    *வாழ்க்கை*

    காஞ்சிபுரம் மாவட்டத்தில்
    உள்ள கன்னிகாபுரத்தைச்
    சேர்ந்தவர் இவர்.
    நான்கு வயதில் தாயை
    இழந்தவர்.
    சிறு வயதில் இருந்தே
    புத்தகங்களை உலகமாகக்
    கொண்டார்.
    தொடக்கத்தில் இயக்குனராகப்
    பணியாற்ற விரும்பி இயக்குனர்
    பாலுமகேந்திராவிடம் நான்கு
    ஆண்டுகள் பணி செய்தார்.
    இயக்குனர் சீமானின் வீர நடை
    என்ற படத்தில் பாடல் எழுதினார்.
    கிரீடம் (2007) மற்றும் வாரணம்
    ஆயிரம் (2008) போன்ற சில
    படங்களுக்கு வசனம் எழுதினார்.
    இதுவரை கிட்டதட்ட 1500
    பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள
    இவர், 2016 வரை தமிழ்த்
    திரையுலகின் முன்னணி
    பாடலாசிரியராக இருந்தார்.
    “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற
    பெயரில் பதிப்பகம் தொடங்கி
    நடத்தினார்.

    இவர் 2006 ஆண்டு ஆணி மாதம்
    14 ஆம் தேதி, வடபழனியிலுள்ள
    தீபலஷ்மி என்பவரை திருமணம்
    செய்தார்.
    இவர்களுக்கு ஆதவன் என்ற
    மகனும் யோகலக்சுமி என்ற
    மகளும் உள்ளார்.

    *மறைவு*

    ஆகஸ்ட் 14, 2016 காலையில்
    தனது 41வது வயதில்
    காலமானார்.
    மஞ்சள்காமாலையால்
    பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய
    நிலையில் இறந்தார்.

    *இவரது நூல்கள்*

    1. நியூட்டனின் மூன்றாம் விதி
    (கவிதைத் தொகுப்பு)
    2. கிராமம் நகரம் மாநகரம்
    3. பட்டாம்பூச்சி விற்பவன்
    (கவிதைத் தொகுப்பு)
    4. ஆணா ஆவண்ணா
    (கட்டுரைகள்)
    5. என்னை சந்திக்க கனவில்
    வராதே
    6. சில்க் சிட்டி (நாவல்)
    7. பால காண்டம் (கட்டுரைகள்)
    8. குழந்தைகள் நிறைந்த வீடு
    (ஹைக்கூ)
    9. வேடிக்கை பார்ப்பவன்
    (கட்டுரைகள்)
    10. தூசிகள் (கவிதைகள்)
    11. அணிலாடும் முன்றில்… l
    (உறவுகள் குறித்து ஆனந்த
    விகடனில் வெளிவந்த தொடர்)

    *விருதுகள்*

    2005: கஜினி திரைப்படத்திற்காக
    தமிழக அரசின் சிறந்த
    பாடலாசிரியர் விருது.

    2006: வெயில் திரைப்படத்திகாக
    பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர்
    விருது.

    2009: அயன் திரைப்படத்திற்காக
    பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர்
    விருது.

    2013: தங்க மீன்கள் படத்தில்
    "ஆனந்த யாழை மீட்டுகிறாய்"
    பாடலுக்கு, சிறந்த பாடல்
    வரிகளுக்கான தேசிய விருது.

    2014: சைவம் திரைப்படத்தில்
    "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த
    பாடல் வரிகளுக்கான தேசிய
    விருது.

    ReplyDelete
  2. சத்தியன்14 June 2021 at 07:53

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்14 June 2021 at 07:54

    மிக அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை14 June 2021 at 09:19

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்14 June 2021 at 11:25

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. கருணாகரன்15 June 2021 at 11:22

    கவிதை அருமை.

    ReplyDelete