எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 13 December 2021

படித்ததில் பிடித்தவை (“பட்டுத்துணியில் போர்த்திய குறுவாள்கள்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)



 *பட்டுத்துணியில் போர்த்திய குறுவாள்கள்*

 

பேச்சினூடாக என்னைக் குத்தலாக

யாராவது ஒரு வாக்கியம் சொன்னால்

அதை புரிந்துகொள்ள எனக்கு

குறைந்தது மூன்று நாட்களாகும்.

சில சமயம் மூன்று வருடங்கள்கூட ஆகியிருக்கிறது.

 

பட்டுத்துணியில் போர்த்திய குறுவாள்களை

உடனே எனக்குப் பார்க்கத் தெரியாது.

அந்தப் பட்டின் வழுவழுப்பை

ப்ரியமாய் தொட்டுக்கொண்டிருப்பேன்.

அந்த பட்டின் வேலைப்பாட்டில்

மனதை பறிகொடுத்திருப்பேன்.

 

அப்புறம் ஏதோ ஒரு பொழுதில்

நான் குளித்துக்கொண்டிருக்கையில்

சோப்பு போடும்போது

ரத்தத்தின் பிசுபிசுப்பாய்

அந்தக் குத்தல் வாக்கியம்

நினைவுக்கு வரும்.

 

ஒரு க்யூவில் நிற்கும்போதோ

யாருடைய வரவேற்பறையிலோ

காத்திருக்கும்போதோ

லிஃப்டில்  அவசரமாக

இறங்கிக்கொண்டிருக்கும்போதோ

ஏடிஎம்மில் என் கார்டை நுழைக்கும்போதோ

ஒரு முத்ததிற்காக நெருங்கும்போதோ

எனது காதோர வெள்ளை முடிக்கு

கறுப்பு மை பூசும்போதோ

நான் முயன்றும் செய்ய முடியாமல்போன உதவிகள்

நினைவுக்கு வரும்போதோ

எப்போதோ கேட்ட ஒரு குத்தல் வாக்கியம்

நினைவுக்கு வரும்.

 

நான் அதற்குப் பதில் சொல்ல முடியாது.

அந்த வாக்கியத்தை கேட்ட இடத்திலிருந்து

நான் ரொம்ப தூரம் போயிருப்பேன்.

ஆனாலும் ஒரு பதில் சொல்லத்தானே வேண்டும்.

எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

 

நேருக்கு நேர் காயப்படுத்தும் வாக்கியங்களால்

பெரிய பிரச்சினையில்லை.

கொஞ்ச நேரம் ரத்தம் கசியும்

அப்புறம் நின்றுவிடும்.

 

குத்தல் வாக்கியங்கள்

அழிவற்ற கிருமியைபோல

அவை நம் உடலில் எப்படியோ

நிரந்தரமாக தங்கிவிடுகின்றன.

 

உனக்கு ஒரு குத்தல் வாக்கியத்தை

புரிந்துகொள்ள பொதுவாக

எவ்வளவு நேரம் தேவைப்படும்..?

எனக்கு பொதுவாக மூன்று நாட்கள்..!

 

*மனுஷ்ய புத்திரன்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மனுஷ்ய புத்திரன்*
    (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
    பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது,
    திருச்சி மாவட்டம்,
    துவரங்குறிச்சியில் பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 20 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
    2. என் படுக்கையறையில் யாரோ
    ஒளிந்திருக்கிறார்கள் (1993)
    3. இடமும் இருப்பும் (1998)
    4. நீராலானது (2001)
    5. மணலின் கதை (2005)
    6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
    (2007)
    7. அதீதத்தின் ருசி (2009)
    8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
    9. பசித்த பொழுது (2011)
    10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
    11. அருந்தப்படாத கோப்பை (2013)
    12. தித்திக்காதே [2016]

    ReplyDelete
  2. சத்தியன்13 December 2021 at 10:11

    நிதர்சனம் இது.
    பலமுறை நானும் உணர்ந்தது உண்டு.
    அருமை...அருமை..!

    ReplyDelete
  3. ஸ்ரீராம்13 December 2021 at 10:12

    உணர்வுபூர்வமான உண்மை.
    மிக அருமை.

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K13 December 2021 at 11:34

    மிகவும் நன்று.

    ReplyDelete