எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 13 July 2021

படித்ததில் பிடித்தவை (“அழு... அதன் ஆழம் வரை அழு...” – ரகு கவிதை)

 


*அழு... அதன் ஆழம் வரை அழு...*

 

அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை,

முழுமையான அழுகையை

நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.

 

மனம் மகிழ்வதைப் போல

மனம் வருந்தல் எளிதில்

நிகழ்த்திவிட முடிவதில்லை

 

இடம் பொருள் ஏவல் என எல்லாம்

பார்க்கவேண்டியதாயிருக்கிறது

 

இழந்ததை நினைத்து அழவோ,

இருப்பதை நினைத்து அழவோ,

இனிவருவது நினைத்து அழவோ,

என ஒரு பெரும் காரணம்,

கொடும் வலி, நெடும் நேரம்,

ஒற்றைத் தனிமை எல்லாம்

ஒருசேரத் தேவைப்படுகிறது இதற்கு

 

இவையெல்லாம் மொத்தமாய்க் கிடைக்கும்

அரிய நிகழ்வுக்கு காத்திருக்கையில்,

அழுகைக்கான அத்தனை காரணங்களும்

நமத்துப் போய்விடுகின்றன

உள்மன ஈரங்களில்

 

அன்றாடம் அழும் இச்சமூகம் இன்னும்

அழுகையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள

முயல்வதே இல்லை

 

யாரேனும் அழுதாலோ, அழுக முற்பட்டாலோ,

அதீத கேள்விகள் ஏதுமின்றி முழுவதுமாக

அழ உதவிடுங்கள்.

அழுது முடித்ததும்

அணைத்துத் தேற்றிக் கொள்ளலாம்,

அதுவரை நிம்மதியாக

அவர்கள் ஆழ அழுது மீளட்டும்..!

 

*ரகு*


2 comments:

  1. ஸ்ரீராம்13 July 2021 at 09:40

    அழுகை குறித்த
    இக்கவிதை ஒரு
    ஆராய்ச்சிக் கட்டுரைக்கு
    நிகராக உள்ளது.
    மிக அருமை.

    ReplyDelete
  2. லதா இளங்கோ14 July 2021 at 17:14

    Sad but Relieved.

    ReplyDelete