எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 20 December 2020

படித்ததில் பிடித்தவை (“பெண்” – மனுஷ்யபுத்திரன் கவிதை)

 


*பெண்*

 

பெண்

தன் ப்ரியத்தை

ஒரு சிலந்தி வலை போல

பின்னுகிறாள்.

 

பல்வேறு நுட்பமான

இழைகளின் வழியே

ஒர் ஆணை

ஆட்கொள்கிறாள்.

 

இந்த உலகத்தில்

ஒர் ஆண் அடையும்

அத்தனை துன்பங்களுக்கும்

தான் மட்டுமே மருந்து என

நம்ப வைத்து விடுகிறாள்.

 

அவளுக்கு

ஒர் ஆணின் மனதை

எடுத்துக்கொள்வதில்

எந்தத் தடையும் இல்லை.

 

பல சமயங்களில்,

ஒர் ஆணை

ஒரு பெண்

நேசிப்பதற்கான காரணங்கள்

எளிதில் அறிய முடியாதவை.

 

உண்மையில்

ஒரு பெண்,

தான் பாதுகாக்கக் கூடிய,

தன்னைச் சார்ந்திருக்கக் கூடிய,

தன் நிழலுக்காக பரிதவிக்கிற

ஒர் ஆணைத்தான் விரும்புகிறாள்.

 

அவளிடம்

அடைக்கலம் தேடிவருகிற

ஒர் ஆணிடம்தான்

அவள் சகஜமாகவும்

இணக்கமாகவும் இருக்கிறாள்.

 

*மனுஷ்யபுத்திரன்*


2 comments:

  1. ஸ்ரீராம்20 December 2020 at 19:21

    கவிஞரின் கருத்து மிக நுட்பமானது, நூறு சதம் ஏற்புடையது.

    ReplyDelete
  2. ஒரு பெண்ணின்
    அன்பு எனும் இதழ்கள்
    எவ்வளவு சீக்கிரம்
    மலரக்கூடியதோ,
    அதே வேகத்தில்
    மூடிக் கொள்ளவும்
    கூடியவை.

    ஒரு பெண்
    விலகிச் செல்லும் போது
    ஒரு ஆண்
    பதட்டம் அடைகிறான்.
    அது தனக்கு
    இழைக்கப்பட்ட அநீதி
    எனக் கருதுகிறான்.

    ஆனால்
    ஒரு பெண்ணின்
    வாழ்க்கை என்பது
    சதுரங்கக் கட்டங்களில்
    நகரும் ஒரு ராணியுடையது.
    அவள் தன்னைப்
    பாதுகாத்துக் கொள்வது
    அவ்வளவு எளிதல்ல.
    சில சமயங்களில்,
    ஒரு பெண்
    தன் வாழ்க்கையின்
    மிகச் சிறந்த ஒன்றை
    ஏன் விட்டுக் கொடுத்து விடுகிறாள்
    என்பதை தன் முனைப்பு உள்ள
    ஒரு ஆண் மனதால்
    புரிந்து கொள்ள இயலாது.
    அதை 'துரோகம்' என்றோ
    'நாடகம்' என்றோ
    நம்ப விரும்புகிறான்.
    ஆனால், வாழ்வின் குரூரமான
    நாடகங்களில்
    பெண் எப்போதும்
    ஒரு பாத்திரமாக இருக்கிறாள்.
    அவள் பெரும் கருணையின்
    வடிவமாக இருக்கும் அதே சமயத்தில்,
    ஒரு சிறிய கருணைக்காக
    வாழ்க்கையிடம் எப்போதும்
    மன்றாடிய வண்ணம் இருக்கிறாள்.

    - மனுஷ்யபுத்திரன்.

    ReplyDelete