எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 10 September 2021

படித்ததில் பிடித்தவை (“கிராமத்துப்பள்ளி ஆசிரியை” – சரஸ்வதி காயத்ரி கவிதை)


 

*கிராமத்துப்பள்ளி ஆசிரியை*

 

ஒரு கிராமத்துப்பள்ளி

ஆசிரியையாக இருப்பதென்பது…

 

மூன்றாம் வகுப்பு

பச்சையப்பனின் அரைஞாண்

கயிற்றிலாடும்

வீட்டுச்சாவியை

அவனின் அம்மா தவிர

யாரும் தொடாமல்

கவனிக்க வேண்டியிருக்கிறது.

 

அடிக்கடி வலிப்பு வருகிற

முனியப்பனின் வாயைத்துடைத்து

அவன் பெற்றோர் வரும் வரை

தவிக்க வேண்டியிருக்கிறது.

 

தத்தித்தத்தி நடந்து வந்த

ஸ்வேதாவை லீடராக்கி

அவளையும் வகுப்பிலொருத்தியாய்

மாற்றிக்காட்ட வேண்டியிருக்கிறது.

 

பேசுவதறியா வார்த்தைகளையெல்லாம்

மறக்க வைத்து

நல்லதை சொல்லப் பழக்கவேண்டியிருக்கிறது.

 

இரவுச்சண்டையில்

வாங்கின அடியில்

ஊருக்குப்போக டி.ஸி கேட்கிற

சர்மிளா அம்மாவை

தடுக்க வேண்டியிருக்கிறது.

 

அரசின் சலுகையைப்பெறுவதற்காக

கார்த்திகாவிற்கு வங்கிக்கணக்கு

தொடங்க வேண்டியிருக்கிறது.

 

படிக்க, எழுத

கற்பிக்கும் போதில்

கடிந்ததை மறந்து,

குல்மொஹர் மரத்தடி

வகுப்பறையருகே

காத்திருக்கும்

இவர்களுக்காக

தவிர்க்க இயலா காரணம்

தவிர வேறெப்போதும்

விடுப்பெடுக்க யோசிக்க

வேண்டியிருக்கிறது..!

 

*சரஸ்வதி காயத்ரி*


4 comments:

  1. ஸ்ரீராம்11 September 2021 at 23:01

    மிக அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்11 September 2021 at 23:02

    விசுவாசமான. ஆசிரியையின்
    உண்மை வெளிப்பாடு.

    ReplyDelete
  3. கெங்கையா11 September 2021 at 23:03

    அருமையான கவிதை.

    ReplyDelete
  4. சீனிவாசன்11 September 2021 at 23:04

    Excellent.
    This explains
    the role of
    dedicated teacher.

    ReplyDelete