எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 21 March 2021

படித்ததில் பிடித்தவை (“மின்சாரக் கொசு மட்டை” – பிருந்தா சாரதி கவிதை)

 


*மின்சாரக் கொசு மட்டை*

 

நானும் வேட்டைக்காரனாக மாறினேன்

மின்சார கொசு மட்டை வாங்கிய பிறகு.

 

வேறெங்கும் காட்ட முடியாமல்

அடக்கி வைத்த என் கோபமெல்லாம்

பீறிட்டுக் கிளம்புகின்றன

அடங்கா வெறி கொண்டு.

 

நம் ரத்தத்தைக் குடிக்கும்

எத்தனையோ பேரின்

ஒட்டு மொத்தவடிவமாகவும்

ஒரே குறியீடாகவும்

நினைக்கத் தொடங்கினேன்

கொசுவை.

 

கொலைவெறி கொந்தளிக்க

கொசுமட்டையை

ஏ.கே.47 ஆக பாவித்து

சுட்டுத் தள்ளத் தொடங்கினேன்.

 

சட்டத்தின் சந்து பொந்துகளில்

தப்பித்துப் பிழைக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கு

சற்றும் சளைத்தவை

அல்ல இந்தக் கொசுக்கள்.

 

மட்டையின் ஓட்டைகள் சட்டத்தின்

சந்துபொந்துகள் அளவிற்கு சுலபமானவையாக

இல்லாமல் போனாலும்

குற்றம் புரிந்துவிட்டு தப்பித்து வாழும்

மனிதர்கள் அளவுக்கு

சாமார்தியசாலிகளாக இல்லை கொசுக்கள்.

 

மட்டையில் மாட்டி

படபடவென்ற வெடியோசையோடு

மடிந்து விழுகின்றன.

 

வீழ்ந்தான் எதிரி

என்ற எக்களிப்பைத்

தருகின்றன

அவ்வோசைகள்.

 

ஆழ்மனதில்

நெடுங்கால ரகசிய இச்சையை

தீர்க்கின்றன பிணவாடைகள்.

 

இறகுப்பந்து ஆடுவது போல்

விளையாட்டாக நடந்து முடிகின்றன

கொத்துக் கொத்தாய் கொலைகள்.

 

இம்மட்டையை

வடிவமைத்தவன்

ஒரு மனோதத்துவ நிபுணன்.

 

உள்ளுக்குள் புதைந்து கிடக்கும்

ஆதிமனிதனின்

அடங்காத

வேட்டை வெறிக்கு

தீனிபோடும்

நவீன ஆயுதம் ஒன்றைக்

கண்டு பிடித்து விட்டான்.

 

என் போன்ற

எளியமனிதர்கள் கையிலும்

தண்டிக்கும் அதிகாரம் இருப்பதாய்

எண்ண வைக்கிறது அது.

 

அது கொசுக்களை மட்டும் அழிக்கவில்லை

அநியாயங்களைக்

கண்டும் காணாமல் இருக்கிறேன் என்ற

என் குற்ற உணர்ச்சியையும் சேர்த்தே அழிக்கிறது ஒருவகையில்.

 

அதைவிட முக்கியமானது

கொலைகூட செய்துவிட்டு

மனிதன் எப்படி உறுத்தல் எதுவும் இன்றி

வாழமுடியும் என்கிற

என் சரித்திர சந்தேகத்தைத்

தீர்த்து வைக்கிறது..!

 

*பிருந்தா சாரதி*




7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *பிருந்தா சாரதி*
    என்றழைக்கப்படுகின்ற
    நா. சுப்பிரமணியன்
    ஓர் இந்திய திரைப்பட
    இயக்குனரும்,
    வசனகர்த்தாவும் ஆவார்.
    லிங்குசாமி இயக்கத்தில்
    வெளிவந்த "ஆனந்தம்"
    திரைப்படத்தில் வசனம் எழுதி
    தன்னுடைய திரைப்பட
    வாழ்க்கையை தொடங்கினார்.
    லிங்குசாமியுடன் இணைந்து
    "பையா", "வேட்டை" படங்களில்
    பணியாற்றிவர் பின்பு சுயமாக
    "தித்திக்குதே" படத்தை
    இயக்கினார்.

    1965 - ல் கும்பகோணத்தில்
    பிறந்தவர்.
    இவருடைய பெற்றோர்
    சுப.நாராயணன்-ருக்மணி ஆவர்.
    இவர் கும்பகோணம் அரசு
    ஆண்கள் கல்லூரியில்
    இயற்பியலில் இளங்கலைப்
    பட்டமும், மதுரைக் காமராஜர்
    பல்கலைக் கழகத்தில் தமிழில்
    முதுகலைப் பட்டமும்
    பெற்றிருக்கிறார்.

    கீழ்க்கண்ட கவிதை நூல்கள்
    உள்ளிட்ட பல நூல்களை
    எழுதியுள்ளார்.

    பறவையின் நிழல்
    (கவிதைத் தொகுப்பு),
    டிஸ்கவரி புக் பேலஸ்,
    சென்னை, ஏப்ரல்-2015.

    ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்
    (கவிதைத் தொகுப்பு),
    டிஸ்கவரி புக் பேலஸ்,
    சென்னை, ஏப்ரல்-2016.

    எண்ணும் எழுத்தும்
    (கவிதைத் தொகுப்பு),
    படி வெளியீடு,
    கே கே நகர் மேற்கு,
    சென்னை-600 078, ஜனவரி-2017.

    மீன்கள் உறங்கும் குளம்
    (ஹைகூ கவிதைகள் தொகுப்பு),
    டிஸ்கவரி புக் பேலஸ்,
    கே.கே.நகர், சென்னை-600 078,
    செப்டெம்பர்-2017.

    ReplyDelete
  2. சத்தியன்21 March 2021 at 06:57

    அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. 21, மார்ச் - இன்று
    உலக கவிதைகள் தினம்.

    ReplyDelete
  4. கெங்கையா21 March 2021 at 10:45

    கவிதை மிக அருமை
    உலக கவிதைகள்
    தினத்தில்.
    கவிஞருக்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  5. ஸ்ரீராம்21 March 2021 at 16:52

    ஆஹா
    அற்புதமாக இருந்தது.
    மின்சாரக் கொசு மட்டையை
    வைத்து எவரும் யோசிக்காத
    பரிமாணத்தில் கவிதையை
    இழைத்திருக்கிறார்.

    ReplyDelete
  6. Feeling of Relief.

    ReplyDelete