எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 16 March 2021

படித்ததில் பிடித்தவை (“அவர்கள் வருகிறார்கள்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*அவர்கள் வருகிறார்கள்*

 

அவர்கள் உன் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்

அவர்கள் என் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்

அவர்கள் நம் வீடு நோக்கித்தான்

வந்துகொண்டிருக்கிறார்கள்

 

ஒவ்வொரு முறையும்

அதுதான் அவர்கள் கடைசி இலக்கு

என்று நம்புகிறீர்கள்

இல்லை

அவர்கள் ஒவ்வொரு அரணாக

தகர்த்துக்கொண்டு வருகிறார்கள்

கைபர் போலன் கணவாயின் வழியாக

முதல் ஊருடுவல் நிகழ்ந்தது

பிறகு அவர்கள் ஒருபோதும்

வீடு திரும்பவே இல்லை

 

அவர்கள் முதலில்

தேசத்தின் எல்லைகளை ரத்த ஆறுகளால் வரையறுத்தார்கள்

பிறகு வழிபாட்டிடங்களை இடித்தார்கள்

பிறகு ஓவியக்கூடங்களில் ஓவியங்களை எரித்து

ஓவியனை நாடு கடத்தினார்கள்

பிறகு கலவரத்தில் மற்றவர்களின்கடைகளை உடைத்து

பொருள்களை திருடினார்கள்

பிறகு மற்றபெண்களின் ஆடைகளை பலவந்தமாக களைந்தார்கள்

பிறகு சிந்தனையாளர்களை

துப்பாக்கியால்

தெருவில் வைத்து சுட்டார்கள்

பிறகு நீதிக்கு போராடுகிறவர்களை

தேசவிரோதிகள் என சிறைக்கு அனுப்பினார்கள்

பிறகு மாட்டு மாமிசம் உண்பவர்களின்

மாமிசத்தை உண்டார்கள்

இப்போது கல்விக்கூடங்களில்

முகமூடியணிந்து ஆயுதங்களுடன் நுழைகிறார்கள்

 

ரத்தம் சிந்தும் புகைப்படங்கள்

பரவலாகக் காணக்கிடைக்கின்றன

நாசிகளின் புதிய குழந்தைகள்

கடைவாயில் கோரைப் பற்களுடன்

சிரிக்கும் புகைப்படங்களும் கிடைக்கின்றன

அவர்களுக்கான எதிர்ப்பின் காணொளிகளும் கூட

கிடைக்கின்றன

கோபத்தின் முகங்கள்

அனல் போல் தகிக்கின்றன

 

அவர்கள் இலக்கு கடைசியாக

உங்கள் வீடுகளுக்குள் நுழைவது

உங்கள் வீட்டை எடுத்துக்கொள்வது

உங்கள் குழந்தைகளை

உங்களிடமிருந்து பிரித்து அகதிகளாக்குவது

நீங்கள் என்றால் யார்?

அவர்களோடு இல்லாத எல்லோரும்தான்

அப்போது மதமோ இனமோ

ஒரு பொருட்டில்லை என்றாகிவிட்டிருக்கும்

நீதியின் பக்கம் நிற்கும்

எல்லோர் கரங்களையும்

பின்புறமாகப் பிணைத்து

தெருவில் நடத்திச் செல்வார்கள்

அல்லது நீங்கள் காணாமல் போனவர்களின்

புகைப்படங்களில் ஒரு படமாகிவிடுவீர்கள்

 

நம்புங்கள்

நான் உங்களை அச்சுறுத்தவில்லை

அஞ்சுவதால் எதுவும் மாறப்போவதில்லை

 

அவர்கள் எங்கெல்லாம் வர முடியாது என

நம்புகிறீர்களோ

அங்கெல்லாம் வருகிறார்கள்

எதெல்லாம் உங்கள் பாதுகாப்பென்று நினைக்கிறீர்களோ

அது எல்லாவற்றையும் உடைக்கிறார்கள்

 

முகமூடி அணிந்து தடியுடன் நிற்கும் ஒருவர்

ஆணா பெண்ணா என்று குழப்பமாக இருக்கிறது

தலை முடியும் உடலின் நளினமும்

அது பெண்ணாக இருக்கக்கூடும் என்ற

சாத்தியத்தை அளிக்கிறது

ஆனால் ஒரு பெண் அதைச் செய்யமாட்டாள் என

என் இந்திய மனம் நம்ப விரும்புகிறது

இந்த தேசம் குறித்த எல்லா நம்பிக்கைகளும்

இப்படித்தான் உடைகின்றன

 

அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்

தெருவிளக்கின் வெளிச்சத்தில்

பட்டியலில்

உங்கள் பெயர் இருக்கிறதா என

படித்துப்

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!

 

*மனுஷ்ய புத்திரன்*


7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    மனுஷ்ய புத்திரன்
    (பிறப்பு:மார்ச் 15, 1968)
    என்ற பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது, திருச்சி
    மாவட்டம், துவரங்குறிச்சியில்
    பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 30 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    ReplyDelete
  2. திருமாவளவன்16 March 2021 at 06:28

    மிகவும் அருமையான பதிவு.
    தொடர்க தங்களது
    சிறப்பான பதிவுகள்.
    நன்றி.

    ReplyDelete
  3. மிகவும் சிறப்பு.

    ReplyDelete
  4. சத்தியன்16 March 2021 at 08:53

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  5. வெங்கடபதி16 March 2021 at 11:28

    அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்16 March 2021 at 17:38

    தீவிர வாதம்
    எல்லா மதங்களின்
    போர்வையிலும்,
    பல வித
    சித்தாந்தங்கள் மூலமும்
    உலகம் முழுதும்
    ஊடுருவி விட்டது.
    எல்லோரும்
    நம்மை போன்றே
    அமைதியாக ஆனந்தமாக
    வாழ விரும்புகிறார்கள்;
    வாழ்வது ஒருமுறை மட்டுமே
    என்பதை உணர்ந்தால்
    கருத்து திணிப்பு
    எங்கனம் நிகழும்..?

    ReplyDelete
  7. அருமை.

    ReplyDelete