எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 26 November 2018

*ரிவெஞ்ச்*


பெரிய ஆலமரத்தை
வெட்டியவுடன்
அந்த இடத்தில்
கட்டப்பட்டது
பத்து மாடி
அரசு அலுவலகம்.

வெட்டும் போது
மண்ணில் விழுந்த
ஆலம்பழமொன்றின்
விதையை
சில வருடம் கழித்து
தின்றது
அந்த மரத்தில் வசித்த
பறவை ஒன்று.

பறக்கும் போதே
எச்சமிட்டது அந்த பறவை.
எச்சத்தில் வந்த விதையை
வாங்கிக் கொண்டது
பத்து மாடி கட்டிடம்.

சரியாக கட்டிட வெடிப்பில்
விழுந்த விதைக்கு
குளிர் சாதனப் பெட்டி
தண்ணீர் கொடுக்க
அட்டகாசமாக வளர்ந்தது
ஆலமர வாரிசு.

பராமரிப்பு இல்லா
அரசு அலுவலகத்தில்
அரக்கனாக வளர்ந்து
உயர்ந்தது ஆலமரம்.

மேலே கிளைகளையும்
சுவரில் வேர்களையும்
நாளுக்கு நாள்
வளர வைத்த
அந்த வாரிசு மரம்
அந்த கட்டிடத்தையே
சில வருடங்களில்
சிதைய வைத்த காட்சியை
வெட்டப்பட்ட ஆலமரத்தில் வசித்த
அத்தனைப் பறவைகளும்
பார்த்துக் கொண்டிருந்தன...

- கி. அற்புதராஜு.

2 comments: