எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 7 November 2018

படித்ததில் பிடித்தவை (‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ – கவிஞர் தாமரை கவிதை)



ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...


கசப்பாக இருந்தது
அம்மா அப்பாவையும்
ஆற்றோர கிராமத்தையும்
நூறுமைல் தூரத்தில்
விட்டுவந்து
அப்படியென்ன படிப்பு?

விடுதி
சென்ம விரோதியாயிற்று...
காற்றடித்து என்
பிறந்தமண்ணை அள்ளி
வந்து போட்டதால்
சன்னல் மட்டும்
சிநேகிதியாயிற்று...

வாரம் இருமுறை நானும்
மும்முறை பெற்றோரும்
வந்து போனோம்...
ஆனாலும்
இதென்ன படிப்பு
இதென்ன வாழ்க்கை...?

குறைந்தது நூறுமுறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்த காலத்தையும்,
வந்து அழைத்துப் போங்களையும்...

திடீரென்று எனக்குள் ஒருகதவு
அறைந்து திறந்தது
என் அறைக் கதவு
திறந்தது போலவே...

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது.
யாழ்ப்பாணத்துக் காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...

என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்

அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்...
முடிந்தால் அவளையும்

மகளே என்று விளி...

- தாமரை.

No comments:

Post a Comment