எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 6 November 2018

படித்ததில் பிடித்தவை (வாழ்க்கைப் பிரச்சனை – கவிஞர் தாமரை கவிதை)



வாழ்க்கைப் பிரச்சனை

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை

 கோடை மழையல்ல அது
கொட்டும் மழை!

நானும் குட்டித் தம்பியும்
கடைசித் தங்கையும்...
எனக்குதான் வயது அதிகம்
எட்டு!

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோம்
தெருவெல்லாம் ஆறாக நீர்...
மின்னலும் இடியுமாய்
வானத்திலே வன்ம யுத்தம்!

எதிர் சாரியிலிருந்த குடிசைகளெல்லாம்
முழ்கிக் கொண்டிருந்தன
கூச்சலும் குழப்பமும் எங்கெங்கும்...

உயிர்ப் பிரச்சனையும் வாழ்க்கைப்
பிரச்சனையுமாக
ஊரே ரெண்டுபட்டது!

வேடிக்கைப் பார்த்த என்னை
எட்டி இழுத்தாள் குட்டித் தங்கை
உள்ளே வா அண்ணா...

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!

-   தாமரை (கணையாழி, நவம்பர்-1995).

1 comment:

  1. தாமரையின் இரு கவிதைகளும் அருமை. அழகான சித்தரிப்பும் முத்தாய்ப்பும்.

    ReplyDelete