எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 10 November 2016

படித்ததில் பிடித்தவை (நாம் ஏன் இப்படி இருக்கிறோம்..? - மனுஷ்யபுத்திரன் கவிதை)


நாம் ஏன் இப்படி இருக்கிறோம்..?
“நாம் ஏன் இப்படி
இருக்கிறோம்
சதா முணுமுணுத்துக்கொண்டு
எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு
எதையாவது சுத்தம் செய்துகொண்டு
யாரையாவது சபித்துக்கொண்டு
எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு
எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு
எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு
ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு
தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு
யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு
ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு
கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு
நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு
நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு
கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு
மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு
பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு
புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு
சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு
எப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு
சிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு
அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு
யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு
நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு
முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு
குடிக்கும்போது அழுதுகொண்டு
புணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு
அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு
சிறுவர்களையும் சிறுமிகளையும் ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு
பௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு
எதையாவது தொலைத்துக்கொண்டு
எதையாவது தேடிக்கொண்டு
தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு
தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு
யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு
யாரையாவது இணங்கச் செய்துகொண்டு
கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு
சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு
பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு
தன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு
கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு
போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு
எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு
தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு
மற்றவர்களின் கடமைகளை நினைவூட்டிக்கொண்டு
நமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு
பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு
யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு
உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு
மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு
யாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு
பொது அறிவை வளர்த்துக்கொண்டு
எதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு
சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு
நிழல்களுக்குப் பயந்துகொண்டு
எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு
உடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு
எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு
தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு
அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு
புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு
திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு
வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு
நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு
ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு
வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு
யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு
எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு
எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன்
இப்படி இருக்கிறோம்..?”

-   மனுஷ்ய புத்திரன்.   

1 comment:

  1. முஸ்லீமான இவர் யாரை,எந்தக்கடவுளை போலிக்கடவுள் என்கிறார்...??அல்லாவையா...????

    ReplyDelete