எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 24 June 2017

படித்ததில் பிடித்தவை (“பணம்” - சுஜாதா கட்டுரை)


பணம்
பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து பப்பரமுட்டுவாங்கிச் சாப்பிடு  என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம். ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள்.

பாட்டிக்கு ஜனோ பகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள். லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

 எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர்,  ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின் வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம். அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன். சம்பளம்? மயங்கிவிடாதீர்கள் ரூ.400! முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.

அடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.
 என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன், சேராது. எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம். ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...


இன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும். இது இயற்கை நியதி. அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும். இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது, செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.

இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை நிலை இதுதான். இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம். நான் தரும் எளிய புள்ளி விவரம் இது. ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும். இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது. இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள்.

- சுஜாதா.
*** **** ***

Sunday, 18 June 2017

படித்ததில் பிடித்தவை (“ஒரு கணம் முன்பு” - மனுஷி கவிதை)


ஒரு கணம் முன்பு
"எப்போது நிராகரிப்பாய் என்னை ?"
எனக் கேட்டாய்.

"எப்போது வெறுப்பாய் என்னை ?"
எனக் கேட்டாய்.

சற்றும் யோசிக்காமல் சொன்னேன்,
"நீ என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு.
நீ என்னை வெறுப்பதற்கு ஒரு கணம் முன்பு."

- மனுஷி. ('முத்தங்களின் கடவுள்' கவிதை தொகுப்பிலிருந்து...)

Monday, 12 June 2017

படித்ததில் பிடித்தவை (“ஒரு சிறுமியின் வேண்டுதல்...” - கவிதை)


ஒரு சிறுமியின் வேண்டுதல்...

"நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும்
ஒரு பூவைப் பார்த்துவிட்டு
பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி
அவசர அவசரமாகக்
கண்களை மூடி
கடவுளை வேண்டுகிறாள்
ஒரு வேகமான
காற்று வேண்டி..!"

- பிரபு.

Tuesday, 6 June 2017

படித்ததில் பிடித்தவை (“வாழ்தலின் இனிமை!” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)


வாழ்தலின் இனிமை!
டேனிஷ் பழங்கதை ஒன்று வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானது என்பதைப் பற்றிப் பேசுகிறது. முன்னொரு காலத்தில் ஒரு தச்சன் இருந்தான். அவன் காட்டில் தான் வெட்டுவதற்கு விரும்புகிற மரத்திடம் சென்று உன்னை வெட்டுவதற்கு என்னை அனுமதிப்பாயா?” எனக் கேட்கக்கூடியவன். மரம் சம்மதித்தால் மட்டுமே அதை வெட்டுவான். தான் அந்த மரத்தை என்ன பொருளாக செய்ய விரும்புகிறான் என்பதையும் அந்த மரத்திடம் தெரிவிப்பான். மரம் சம்மதம் தந்த பிறகே அந்த மரத்தை வெட்டுவான். அப்படி ஒரு முறை ஒரு கருங்காலி மரத்திடம் சென்று நீ மூப்படைந்து விட்டாய்; உன்னை வெட்டி மேஜை செய்யலாம் என்றிருக்கிறேன்”  என்றான். அதைக் கேட்ட மரம் சொன்னது:

நானே இலைகளை உதிர்த்துவிட்டு நிற்கிறேன். மழைக் காலம்வேறு தொடங்கப் போகிறது. மழையின் குளுமையை உள்வாங்கி, புத்துயிர்ப்புக் கொள்ள ஆசைப்படுகிறேன். மழைக் காலம் முடிந்தவுடன், வா!என்றது.

தச்சன் மறுவார்த்தைப் பேசவில்லை. மழைக் காலம் தொடங்கி முடியும் வரை, காத்திருந்தான். மழைக்குப் பிறகு அந்தக் காட்டின் தோற்றமே உருமாறியிருந்தது. தான் வெட்டுவதற்கு விரும்பிய மரத்திடம் போய், “உன்னை நான் வெட்டிக்கொள்ளலாமா?” எனக் கேட்டான்.

அவசரப்படுகிறாயே, குளிர்காலப் பனி என்னைத் தழுவிக்கொள்வதை அனுபவிக்க வேண்டாமா? நான் வாழ ஆசைப்படுகிறேன். குளிர்காலம் முடியும் வரை காத்திரு…” என்றது மரம்.

தச்சன் இன்னும் மூன்று மாதங்கள்தானே எனக் காத்திருந்தான். அந்த ஆண்டு குளிர் அதிகமாகவே இருந்தது. காட்டில் பனிமூட்டம் அடர்ந்திருந்தது. குளிர்காலம் முடிந்து கோடரியோடு காட்டுக்குப் போனான்.

மரம் சொன்னது: அதிக குளிரில் வாடிப் போயிருக்கிறேன். கோடை சூரியனில் என்னை சூடுபடுத்திக்கொள்கிறேன். கோடையைக் காணாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!என்றான். தச்சனுக்கு சலிப்பாக இருந்தது. ஆனாலும், தன் அறத்தை மீறி நடந்துகொள்ள முடியாதே என அவன் வெறுங்கையோடு வீடு திரும்பினான்.

கோடையின் முரட்டு சூரியன் காட்டின் மீது தன் எரிகொம்புகளை ஊன்றி கடந்துபோனது. வெயிலின் உக்கிரம் காடெங்கும் பரவியது. மரம் வெயிலில் உலர்ந்து போனது. தச்சன் மீண்டும் காட்டுக்குத் திரும்பிப் போனான்.

இப்போது மரம் சொன்னது:

வெட்டுண்டுப் போகப் போகிறோம் என உணர்ந்த பிறகு மழை, பனி, வெய்யிலை அனுபவிப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! வாழ்வதுதானே இனிமை! என்னை வெட்டி ஒரு மேஜையாக்கிவிட்டால், இந்த சுகங்களை நான் இழந்துவிடுவேனே. நான் வாழ ஆசைப்படுகிறேன். என்னை வாழ அனுமதிப்பதும் வெட்டிக் கொண்டுபோவதும் உன் விருப்பம்!

அதைக் கேட்ட தச்சன் சொன்னான்:

வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானதே. உன்னை வெட்டிக் கொண்டுபோக எனக்கு மனமில்லை. உண்மையில் நீ எனக்கொரு பாடம் புகட்டியிருக்கிறாய். உனக்காகக் காத்திருந்த பொழுதுகளில் நானும் மழைக் காலத்தில் மழையை, குளிர்காலத்தில் பனியை, கோடையில் வெய்யிலை, வசந்த காலத்தை முழுமையாக அனுபவித்தேன். வாழ்வின் இனிமையை இப்போதுதான் நான் முழுமையாக அறிந்துகொண்டேன். நாங்கள் எதற்கும் பயப்படாதவர்கள்என்பதைப் போல மரங்கள் வான்நோக்கி நிமிர்ந்து நிற்பதன் அர்த்தம் இன்றுதான் நான் புரிந்துகொண்டேன். இனி, இந்தக் காட்டில் கிடைப்பதை உண்டு, நானும் உன்னைப் போலவே வாழப் போகிறேன்என அவன் கோடரியை வீசி எறிந்துவிட்டு, காட்டிலேயே வாழத் தொடங்கினான் என முடிகிறது அந்தக் கதை.


மரம் என்றில்லை. சிறுபுல் கூட தன்னளவில் முழுமையாகவே வாழ்கிறது. மழையை, வெய்யிலை, பனியை நேரடியாக எதிர்கொள்கிறது. வாழ்தலை முழுமையாக அனுபவிக்கிறது. மனிதர்கள்தான் வாழ்க்கையைத் துண்டு துண்டுகளாக்கி எதையும் அனுபவிக்காமல் சலித்துக்கொண்டே இருக்கிறார்கள். மழை, வெயில், பனி, காற்று எதுவும் பிடிப்பதில்லை அவர்களுக்கு. உண்ணும் உணவைக் கூட சலிப்புடன் சாப்பிடுகிறவர்கள் எத்தனையோ பேர். வாழ்க்கை இன்பம்என்பது பணம் மட்டுமில்லை; விலையில்லாத உலகம் ஒன்று கண்முன்னே விரிந்து கிடக்கிறது. அதன் அருமையை நாம் உணர்வதே இல்லை.

இன்றைய உலகம் சந்திக்கும் பிரதான பிரச்சினை வாழ்வுரிமை மறுக்கப்படுவதே. தேசம் ஓர் இனத்தின் வாழ்வுரிமையை மறுக்கிறது. அதிகாரம் வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மதமும், சாதியும் வாழ்வுரிமையோடு விளையாடுகின்றன. வாழ்வுரிமையைப் பறிகொடுத்த மனிதர்கள், நீதி கேட்டு குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். உலகின் காதுகளில் அந்தக் குரல் எட்டவேயில்லை.

நிலம், நீர், உணவுஎன தனது ஆதாரங்களை மனிதர்கள் இழந்து வருகிறார்கள். யாவும் சந்தைப் பொருளாகிவிட்டன. தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் வாழ்வுரிமையாகும். ஆனால், இன்றும் முடிவில்லாமல் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் மாநிலங்களுக்கு இடையே நீண்டுவருகின்றன. அதற்குக் காரணம் அவை தேசிய அரசியலுக்குத் தேவையாக இருக்கிறதுஎன்பதே.

பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறவர்களில் அதிகமானோர் அடித்தட்டு மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களுமே ஆவர். இந்தியாவைப் பொறுத்தவரை, தண்ணீர் பிரச்சினை சாதிப் பிரச்சினையுடன் தொடர்புடையது.

தண்ணீர் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களே. தண்ணீரைக் கண்டடைவது, கொண்டு வந்து சேர்ப்பது, பெண்களின் வேலையாக மட்டுமே கருதப்படுகிறது.


[The Source (FrenchLa Source des femmes) is a 2011 French drama-comedy film directed by Radu Mihăileanu.]

தி சோர்ஸ்என்றொரு பிரெஞ்சு திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். அதில், ஆப்பிரிக்காவில் ஒரு கர்ப்பிணிப் பெண். அவர் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்போது அடிபட்டுவிடுகிறாள். இதனால், உள்ளுர் பெண்கள் கவலையடைகிறார்கள். ஆண்கள் எவரும் தண்ணீர் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று உணர்ந்த பெண்கள், ‘இனி ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்என்றொரு போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். இது ஆண்களின் தன்மானப் பிரச்சினையாக உருமாறுகிறது. முடிவில் பெண்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை படம் அற்புதமாக சித்தரிக்கிறது.

இந்திய அரசு விரைவில் நாடு முழுவதும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்தனை தண்ணீர் விநியோகத்தையும் தனியாரிடம் வழங்கலாம் என திட்டமிட்டு வருகிறது. இது மோசமான செயல் திட்டமாகும்.

தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க புத்தனே முயன்றிருக்கிறான். சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதிநீர் பங்கீடு குறித்து எழுந்த பிரச்சினையைப் புத்தன் தீர்த்து வைத்தான்என்கிறது வரலாறு. ஆனால், இன்று நீதிமன்றம் தலையிட்டும்கூட காவிரி நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

உணவு, உடை, நீர், கல்வி, வேலை, மொழி என அத்தனை உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்? சவம் மட்டும்தான் எதையும் ஏற்றுக்கொள்ளும். மவுனமாகக் கிடக்கும்.

வாழ்வுரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுவதும் சமூகப் போராளிகள் தொடர்ந்து குரல் கொடுத்தபடியே இருக்கிறார்கள். தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. நமக்கென்ன ஆகப் போகிறது?’ என ஒதுங்கிப் போய்விடாமல் பறிக்கப்படும் உரிமைகள் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதே வாழ்தலின் அர்த்தம்!

- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 06.06.2017)


*** *** ***

Saturday, 27 May 2017

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)


இலை
"யாருமற்ற தன் சவ ஊர்வலத்தில்
தானே நடனமாடிக் கடக்கும்
பழுத்த இலை..!"
- நாகராஜ சுப்ரமணி.


அம்மாவின் புடவை
"கொடியில் காயும்
குழந்தையின் துணிகளை
வெயில் படாமல்
சிரத்தையுடனே
பார்த்துக்கொள்கிறது
அருகில் காயும்
அம்மாவின் புடவை..!"

- ராமதுரை ஜெயராமன்.

Friday, 19 May 2017

படித்ததில் பிடித்தவை (“சந்தேகத்தின் நிழல்!” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)


சந்தேகத்தின் நிழல்!

ஒருவரது வீட்டுக்குள் சந்தேகம் நுழையும் போது சந்தோஷம் வெளியேறிப் போய் விடும் என்பார்கள். சந்தேகம் என்பது தீர்க்க முடியாத மன வியாதி; சமூகத்தில் வேகமாக பரவி வரும் விஷக் கிருமி!

உண்மையை மறைப்பதே சந்தேகத்தின் தோற்றுவாய். உண்மையை அறிந்துகொள்ள சந்தேகம் தேவைப்படுகிறது. அரசும் அதிகாரமும் தங்களை ஏமாற்றுகிறது என மக்கள் சந்தேகம் கொள்வது தவறில்லை. சுயலாபங்களுக்காக வணிக நிறுவனங்கள் மோசடி செய்கின்றன என்று சாமானியன் சந்தேகப்படுவது தவறில்லை. நீதி மறுக்கப்படும்போதும், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அதிகாரத்தை சந்தேகம் கொள்ளவேண்டியது இயற்கையே. ஆனால், குடும்ப உறவுகளை சந்தேகப்படுவதும், வீண்சந்தேகத்தின்பேரில் தன்னை வதைத்துக்கொள்வதும், கண்டிக்கவும் களையவும் வேண்டிய விஷயம்!

கவிஞர் தஞ்சை என்.ராமையாதாஸ் ஒரு பாடலில் தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்; அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும் என்கிறார். மிகச் சரியான விளக்கம் அது.

இந்திய வரலாற்றில் சந்தேகத்தின்பேரில் கொல்லப் பட்டவர்கள் ஏராளம். அதில், சிலரே வஞ்சகர்கள். பெரும்பாலும் அப்பாவிகளே சந்தேகத்தின்பேரில் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். காலம் கடந்து உண்மை வெளிப்பட்டபோதும் அவர்கள் மீது படிந்த கறை நீங்குவதில்லை.

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவை சந்தேகத்தின் உருவமாகச் சொல்வார்கள். அவன் மனைவி டெஸ்டிமோனாவைச் சந்தேகம்கொண்டு கொன்றுவிடுகிறான். முடிவில், அவள் அப்பாவி எனத் தெரியவருகிறது. ஒத்தல்லோவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மாறாக, ஊருக்கு ஒரு ஒத்தல்லோ உருவாகி வருகிறார்கள்.

இன்று, எத்தனையோ குடும்பங்கள் சந்தேகத்தால் பிரிந்து, நீதிமன்ற வாசல்களில் நிற்கின்றன. சமூக ஊடகங்கள் அதுவும் ஃபேஸ்புக் போன்றவற்றின் வளர்ச்சி சந்தேகத்தின் வேகத்தை அதிகமாக்கிவிட்டது. ஃபேஸ்புக்கில் தனது மனைவி அல்லது காதலி தனக்குத் தெரியாமல் யாருடனோ பேசிப் பழகிவருகிறாள் என்ற சந்தேகம் ஆண்கள் பலருக்கு இருக்கிறது. இதுபோலவே கணவன் அல்லது காதலன் யாருடனோ ரகசியமாகப் பழகுவதாக நினைக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இரண்டிலும் சந்தேகப்பட வேண்டிய காரியங்கள் நடக்கவும் செய்கின்றன. ஆனால் எது நிஜம் என்று அறியாமல், சந்தேகத்தின் விஷம் ஒருவருக்குள் ஆழமாக இறங்கி வன்கொலையில் போய் முடிகிறது என்பதே துயரம்.

ஸ்பை கேமரா, ஸ்பை ரெக்கார்டர் போன்றவை இன்று அதிகமாக விற்பனையாகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறவர்கள் துப்பறியும் நிபுணர்கள் இல்லை; சந்தேகவாதிகளே. பரஸ்பர நம்பிக்கைகள் தகர்ந்துவருவதும்; வீட்டுக்குள்ளாக ஒருவரையொருவர் ஏமாற்றி வாழமுடியும் என்ற கள்ளத்தனம் உருவானதும், அறம் அழிந்துபோன சமூகச் செயல்களுமே சந்தேகத்துக்கான முக்கிய காரணங்கள்!

ஒரு சொட்டு சந்தேகம் போதும் ஒருவரின் வாழ்க்கை நரகமாக! என்கிறது துருக்கி கதை. பாக்தாத் நகரில் மாறாத அன்பு கொண்ட இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் ஒன்றாகவே கடை நடத்தினார்கள். சகோதரிகளை திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களின் அன்பைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது. சந்தையில் அவர்கள் நடந்து போகும்போது அண்ணன், தம்பி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும்! என்று அடையாளம் காட்டுவார்கள். அவ்வளவு சிறப்பான மனிதர்களாக வாழ்ந்தார்கள்.

ஒருநாள் அண்ணன் கடையை மூடும்போது தங்கக் காதணி ஒன்றைப் பார்த்தான். அது தன் மனைவியின் காதணி. இது எப்படி கடைக்குள் வந்தது என்று யோசித்தான். தம்பியிடம் இதைப் பற்றி கேட்கலாம் என நினைத்தான். ஆனால், கேட்கவில்லை.

மாறாக தம்பி மீது சந்தேகம் கொள்ளத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் தம்பி உச்சிவேளையில் யாருக்கும் தெரியாமல் வெளியே போவதும், சற்று நேரத்தில் அமைதியாக வந்து வேலையைத் தொடர்வதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் அதிகமானது.

அது போலவே ஓர் இரவு தன் மனைவியிடம் தம்பி ஏதோ பேசிக் கொண்டிருப்பதும், அவள் ரகசியமாக எதையோ தருவதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் உறுதியானது, அன்று முதல் அவன் தம்பியைக் கண்டாலே எரிந்துவிழத் தொடங்கினான். மனைவியைக் காரணம் இல்லாமல் அடித்தான். தம்பியோ அண்ணனின் கோபத்தை தாங்கிக் கொண்டான். அண்ணன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் எனப் புரியாமல் தவித்தான் தம்பி.

அண்ணன் தானாக கற்பனை செய்ய ஆரம்பித்தான். தம்பி தன்னை ஏமாற்றி பணம் சேர்க்கிறான். தன் மனைவியோடு கள்ளத்தனமாகப் பழகுகிறான். தனது பிள்ளைகள் அவனுக்கு பிறந்தவையாக இருக்கக்கூடும். முடிவில் ஒருநாள் தன்னை கொன்றுவிட்டு சொத்தை முழுவதுமாக அபகரிக்க தம்பி திட்டம் போடுகிறான் என அண்ணன் நினைத்தான். இந்தக் கவலை அவனை வாட்டியது. உறக்கம் இல்லாமல் தவிக்க வைத்தது.

முடிவில் ஒருநாள் தான் வணிகத்தின் பொருட்டு வெளியூர் போய்வருவதாகக் கூறிவிட்டு உள்ளுரிலே ரகசியமாக தங்கிக் கொண்டான் அண்ணன். தான் இல்லாத நேரத்தில் தம்பி ரகசியமாக ஒரு வீட்டுக்குப் போய் பணம் தருவதையும், தன் மனைவி யாருக்கும் தெரியாமல் உணவு கொண்டுவந்து தருவதையும் கண்டு கொதித்துப் போனான். கடையை மூடிவிட்டு தம்பி திரும்பி வரும்போது, அவனை மறைந்திருந்து கொலை செய்துவிட்டு, தன் மனைவியைக் கொல்ல வீட்டுக்குப் போனான்.

மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை வாளால் வெட்டி துண்டிக்கப்போகும்போது அவள் 'ஏன் என்னைக் கொல்கிறீர்கள்? அந்தக் காரணத்தை மட்டும் சொல்லுங்கள்' எனக் கதறினாள். அண்ணன் நடந்த விஷயங்களைக் கூறினான். அதற்கு மனைவி 'என் காதணியை உங்கள் சிறிய மகன்தான் எடுத்து உங்கள் சட்டைப் பையில் போட்டிருக்கிறான். அதைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபம் கொள்வீர்களோ எனச் சொல்லவில்லை' என்றாள்.

பொய் சொல்லாதே. என் தம்பி ரகசியமாக வெளியே போவதும். நீ அவனுடன் இரவில் பேசுவதும், அவனுக்கு சாப்பாடு தருவதும் சல்லாபம் இல்லையா? எனக் கத்தினான். அதற்கு அவள் சொன்னாள்: 'உங்கள் தம்பி குடற்புண்ணால் அவதிப்படுகிறார். அதற்கு வைத்தியம் பார்த்து வந்தார். இந்த விஷயம் தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். தம்பியை ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டு கடைவேலையை நீங்களே பார்ப்பீர்கள் என நினைத்து அதை மறைத்துவிட்டார். அவர் மனைவிக்கு பத்தியச் சாப்பாடு செய்யத் தெரியாது என்பதால் நான் தயாரித்துக் கொடுத்தேன். உங்கள் சந்தேகம் உங்கள் மீது மாறாத அன்பு வைத்த சகோதரனைக் கொன்றுவிட்டது. இப்போது உங்களுக்காகவே வாழ்ந்து வரும் என்னை கொல்லத் துடிக்கிறது. வாருங்கள்என் தலையைத் துண்டியுங்கள்!' என அழுதாள்.

உண்மையை உணர்ந்த வணிகன் தன் சந்தேகம் எவ்வளவு முட்டாள்தனமானது என உணர்ந்து அதே வாளால் தன்னை வெட்டி சாய்த்துக்கொண்டான் என கதை முடிகிறது.

சந்தேகத்தின் விளைவுகளைப் பற்றி இப்படி ஆயிரமாயிரம் கதைகள் உலகெங்கும் இருக்கின்றன. ஆனால், இன்றும் படித்தவர் பாமரர் எனப் பேதமின்றி மனிதர்கள் சந்தேகத்துக்கு பலியாகி வருகிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே உள்ளது!

- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 16.05.2017)


*** *** ***

Thursday, 11 May 2017

படித்ததில் பிடித்தவை (“ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்” - கதிர்பாரதி கவிதை)


ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்

வேட்டி மட்டுமே உடுத்தும் மாமனுக்கு
வாக்கப்பட்ட அத்தையொருத்தி
தன் மனசுக்குள் மடித்துவைத்திருக்கிறாள்
பெல்பாட்டம் பேன்ட் ஒன்றை.

யாருமற்ற பொழுதுகளில்
அதை வெளியே எடுத்து
உதறி
நீவிவிட்டு
மீண்டும் மடித்து வைத்துக்கொள்கிறாள்.

அப்போது மட்டும்
மிகச் சன்னமாக ஒலிக்கவிடுவாள்
யெஸ் ஐ லவ் திஸ் இடியட்
ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்
பாடலை.

மற்றபடி
மாமனுக்கு மூன்று பிள்ளைகள் பெற்றிருக்கிறாள்
அதிலொன்று இரட்டைப் பிரசவம்.

-  கதிர்பாரதி,

(ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்).

Saturday, 22 April 2017

“தவறவிடக் கூடாத சிறார் புத்தகங்கள்”

(தொகுப்பு: ஆதி)

ஏப்ரல் 23 - உலகப் புத்தக நாள்
 உலகப் புத்தக நாளையொட்டித் தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய 20 புத்தகங்களைப் பார்ப்போம்.

10 நேரடி தமிழ்ப் புத்தகங்கள்

 "ஆடும் மயில் மற்றும் மலரும் உள்ளம்", 
அழ.வள்ளியப்பா
என்.சி.பி.எச். வெளியீடு.
 புகழ்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல் தொகுதிகள் இவை. குழந்தைகளே வாசித்து, பாடி மகிழக்கூடிய பல்வேறு பாடல்களைக் கொண்ட தொகுப்புகள்.



"தரங்கம்பாடி தங்கப் புதையல்"
பெ. தூரன்
வானதி வெளியீடு.
பண்டைய துறைமுக ஊரான தரங்கம்பாடியில் இருக்கும் புதையலைச் சிறுவர்களே தேடிச் செல்லும் சாகசக் கதை.

"சந்திரகிரிக் கோட்டை"
ஆர்.வி.
கண்ணன்இதழின் ஆசிரியர் ஆர்.வி. பல்வேறு வகைக் கதைகளை எழுதுவதற்காக அறியப்பட்டவர். அவர் எழுதிய சாகசம் நிறைந்த கதை இது.

"கானகக் கன்னி", 
கல்வி கோபாலகிருஷ்ணன்
சாகித்ய அகாடமி வெளியீடு.
 குழந்தைகளுக்கான அறிவியல் நூல்களை எழுதுவதற்காகப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், தாவரங்களைப் பற்றி கதை போல அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் இந்த நூல் மத்திய அரசின் பரிசைப் பெற்றது.

"சிற்பியின் மகள்", 
பூவண்ணன்
வானதி வெளியீடு.
 குழந்தைகளுக்கான வரலாற்று கதைகளை எழுதுவதற்குப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், வரலாற்று பின்னணியில் சிற்பி ஒருவரைப் பற்றி எழுதிய கதை.
  


"தங்க மயில் தேவதை", 
முல்லை தங்கராசன்
பூங்கொடி வெளியீடு.
 ஒரு விறகு வெட்டிக்குத் தங்க முட்டையிடும் மயில் கிடைக்கிறது. அது திடீரெனத் தங்க முட்டையிடுவதை நிறுத்தி விடுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் மாயாஜாலங்களும் மர்மமும் கூடிய கதை.
  
"மர்ம மாளிகையில் பலே பாலு"
வாண்டுமாமா
வானதி வெளியீடு.
 வாண்டுமாமாவின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான பலே பாலு, சமத்து சாரு, அண்ணாசாமி போன்றவர்களின் ஜாலியான சேட்டைகள் நிறைந்த படக்கதைகள் கொண்ட நூல். படக்கதைகளை வரைந்தவர் ஓவியர் செல்லம்.  


"கொடி காட்ட வந்தவன்"
ரேவதி
தமிழ்நாடு காந்தி நினைவு நிதி.
 1934-ம் ஆண்டு குற்றாலத்தில் குளிக்க வரும் மகாத்மா காந்தி, அங்குத் தாழ்த்தப் பட்டவர்கள் குளிக்கத் தடை இருப்பதை அறிந்து திரும்பிச் சென்றது ஓர் உண்மைச் சம்பவம். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான கதை.
  
"ஆயிஷா"
இரா.நடராசன்
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 அறிவியல் மனப் பான்மை தொடர்பாக உத்வேகம் ஊட்டும் ஆயிஷா என்று பள்ளிச் சிறுமியை அடிப்படையாகக் கொண்ட புகழ்பெற்ற கதை.
  
"இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்)",    
ச. தமிழ்ச்செல்வன்
அறிவியல் வெளியீடு.
 குழந்தைகளுக்கு அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்து புதிய பார்வையுடன், எளிய முறையில் புரிதலை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட எட்டு கட்டுரைகளைக் கொண்ட நூல்.
  
10 மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்

 "அப்பா சிறுவனாக இருந்தபோது", 
அலெக்சாந்தர் ரஸ்கின் (நா. முகமது செரீபு)
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 ஒவ்வொருவரும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது செய்த சேட்டைகள், அட்டகாசங்களைச் சிரிக்கச் சிரிக்கத் திரும்பப் படிப்பதற்கு வாய்ப்பளிக்கும் நூல்.
  
"குட்டி இளவரசன்", 
அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம் - ச. மதனகல்யாணி
க்ரியா வெளியீடு.
 உலகப் புகழ்பெற்ற, கோடிக்கணக்கானோரால் வாசிக்கப்பட்ட இந்த நூல் குழந்தைகளுக்கான நூலாகப் போற்றப்படுகிறது. குழந்தைகளின் உலகுக்கே உரிய அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிரம்பிய நூல்.
  
"நீச்சல் பயிற்சி", 
ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள் (தமிழில்: சு.ந. சொக்கலிங்கம்)
என்.சி.பி.எச். வெளியீடு.
 பல்வேறு ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய குழந்தைகளுக்கான இந்தக் கதைகள் இன்றைக்கும் சிறிதளவுகூடச் சுவாரசியம் குன்றாமல் உள்ளன.



"ஆலிஸின் அற்புத உலகம்"
லூயி கரோல் (எஸ். ராமகிருஷ்ணன்)
வம்சி வெளியீடு.
 முயலின் வளைக்குள் சென்று ஒரு திரவத்தைக் குடித்துச் சிறிய உருவைப் பெறும் ஆலிஸ், பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த உலகுக்குள் உலவுகிறாள். மாயாஜாலக் கதைகளில் உச்சம் தொட்ட புத்தகம் இது.
  
"வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்", 
எஸ்.சிவதாஸ் (ப. ஜெயகிருஷ்ணன்)
அறிவியல் வெளியீடு.
 உயிரினங்களைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை பற்றியும் நாம் அறிந்ததும் புரிந்துகொண்டதும் குறைவு. இந்தப் புத்தகத்துக்குள் புகுந்து வெளிவரும்போது, எல்லா உயிரினங்களையும் நாம் நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்.
  


"சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்"
ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் (தமிழில் குமரேசன்)
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 ஸாய் விட்டேகர், கீதா ஹரிஹரன், ஷாமா ஃபதேஅலி, போலி சென் குப்தா போன்ற புகழ்பெற்ற ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளின் தொகுப்பு.
  
"கானகத்துக் கீதங்கள்", 
ஜித் ராய் (கு.ராஜாராம்)
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.
 காடுகள், உயிரினங்களைப் பற்றி மிக எளிமையாகவும், அறிவியல்பூர்வமாகவும் விளக்கி இயற்கையின் உன்னதத்தைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் நூல்.
  
"பெனி எனும் சிறுவன்", 
கிகோ புளூஷி, (யூமா வாசுகி)
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 புறஉலகைப் பற்றி பெரிதாக அறியாத நகரத்துச் சிறுவனாக இருக்கும் பெனி, தன் மாமாவின் கிராமத்துக்குச் சென்று திரும்பும்போது, முற்றிலும் மாறுபட்ட ஒருவனாக இருக்கிறான். குழந்தைகளின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் நாவல்.
  
"புத்தகப் பரிசுப் பெட்டி", 
15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், தமிழில்: உதயசங்கர்
புக்ஸ் ஃபார் சில்ரன்.
 காலம் காலமாக நம்மிடையே புழங்கி வரும் கதைகளும் நம்மைச் சுற்றியுள்ள காக்கா, அணில், பூனை, நாய், குரங்கு, யானை போன்றவற்றைப் பற்றியும் கருத்தைக் கவரும் ஓவியங்களைக் கொண்ட 15 புத்தகங்களின் தொகுப்பு.
  
"கனவினைப் பின்தொடர்ந்து", 
த.வெ.பத்மா (ஜெ. ஷாஜகான்)
எதிர் வெளியீடு.
நம் மறந்துவிட்ட, அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு வரலாற்று செய்திகளைக் கதைபோலச் சுவாரசியமாகத் தரும் நூல்.

(நன்றி: தி இந்து)
*** *** *** *** ***