எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 27 December 2016

படித்ததில் பிடித்தவை (தேவை அதிகமில்லை... - சௌவி கவிதை)


தேவை அதிகமில்லை...

"பப்பாளி மரத்தின்
யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை
காக்கை கொத்திக் கீழே தள்ளியது. 
இன்னும் சில காக்கைகள் வந்தன.
தின்றதுபோக மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன.

பின் மைனாக்கள் வந்தன. 
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன.

பின் கற்றாழைக் குருவிகள் வந்தன.
அவையும் புசித்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன.

பின் சிட்டுக்குருவிகள் வந்தன.
அவையும் எடுத்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன.

பின் வண்டுகள் வந்தன.
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டு அகன்றன.

இப்போது சாரை சாரையாய்
எறும்புகள் வந்து
கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு
கடக்கின்றன.

மனிதனுக்குத் தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்
பசியாற்றுகிறது எண்ணில்லா உயிர்க்கு.
இத்தனை எடுத்ததுபோக
இன்னும் மிச்சமிருக்கிறது பப்பாளிப்பழம்..!"


- சௌவி.

No comments:

Post a Comment