எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 23 July 2016

படித்ததில் பிடித்தவை (“விளிம்பு காக்கும் தண்ணீர்” – ஞானக்கூத்தன் கவிதை)


விளிம்பு காக்கும் தண்ணீர்
கொட்டிவிட்ட தண்ணீர்
தரையில் ஓடியது. ஓடி
சற்று தூரத்தில் நின்றுவிட்டது
வழி தெரியாதது போல.
தொங்கும் மின்விசிறியின் காற்று
தண்ணீரை அசைக்கிறது
மேலே தொடர்ந்து செல்ல
தண்ணீருக்கு விருப்பமில்லை
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
காற்றினால் கலையும்
தன் விளிம்புகளை
இறுகப் பிடித்துக்கொண்டு
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.”
-          ஞானக்கூத்தன்.

[காணும் அனுபவம் கவிதா அனுபவமாக மாறி எப்படி ஒரு கவிதையைத் தருகிறது என்பதை அறிந்துகொள்ள இந்தக் கவிதை மிகச் சரியான எடுத்துக்காட்டு. சற்று தூரத்தில் நின்றுவிட்டது / வழி தெரியாதது போல.இந்த வரிதான் நீரின் ஓட்டத்தைக் கவிதைக்கான நிகழ்வாக்குகிறது. ஓடாது அங்கேயே நிற்கிற நீரை வழி தெரியாது நிற்பதாகப் பார்க்கிறார் ஞானக்கூத்தன். கவிஞனின் இந்தப் பார்வைதான் கவிதை மீது நாம் கொள்கிற காதல். எந்தக் கவிதையும் யாருக்குமான கவிதையாக மாறுவது இந்த இடத்தில்தான்.

நீரின் ஓட்டத்தை மனித வாழ்வின் பயணமாக அல்லது மனதின் எண்ணமாக மாற்றுகிறது கவிதை. இன்னொரு வாசக அனுபவம் இதை வேறாகவும் வாசிக்கலாம். இதே கவிதை எனக்கு நாளை இன்னொரு உணர்வைத் தரலாம். அதற்கான சாத்தியம் கவிதையில் அதிகம். கொட்டிய வினையால் நிகழ்ந்த நீரின் ஓட்டத்தை மனித வாழ்வோடு இணைக்கிறது கவிதை.

வழி தெரியாதது போல என்கிற வரி வாழ்வின் பயண நடுவில் நிகழ்கிற ஸ்தம்பிப்பு. அல்லது ஒரு தயக்கம். அதனால்தான் வழி தெரியாதது போல என்கிறார். வாசிப்பில் நீரோடு நம் மனமும் பயணிக்கிறது. நீரின் இடத்தில் வாசிக்கும் மனம் உட்கார்ந்து கொள்கிறது. இப்போது நீர் வேறு மனம் வேறல்ல. அதனால் கவிதை எல்லாருக்குமானதாகிறது. கடந்து வந்த வாழ்வை அசைபோடுகிறது மனம். புறம் அந்த இடத்தைக் கலைக்க விரும்பலாம். மனம் அதே இடத்தில் இருக்க விரும்பலாம். தன் விளிம்புகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு என்ற வரியிலிருந்து வாசகன் எளிதாக மீள முடியாது.
- க.வை.பழனிச்சாமி]

{நன்றி: தி ந்து தமிழ்}

No comments:

Post a Comment