எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 17 July 2016

படித்ததில் பிடித்தவை (“கடைசிப்பெட்டி” – ஞானக்கூத்தன் கவிதை)


கடைசிப்பெட்டி
“வண்டி புறப்பட நேரம் இருக்கிறது.
இரயில் நிலையத்துக் கடிகாரத்தின் பெரியமுள்
திடுக்கிட்டு திடுக்கிட்டு நகர்கிறது.
பிறந்தகம் போகும் புதுமணப் பெண்ணுக்கு
ஆரஞ்சு தோலுரித்துத் தருகிறான் மாப்பிள்ளை.
தொட்டுக் கொள்கிற துவையல் பற்றாமல்
எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்.
பெட்டிகள் வராத தண்டவாளத்தின் மேல்
நிலைய விளக்குகள் பிரகாசிக்கின்றன.
திடுக்கிட்டு திடுக்கிட்டு நகர்ந்த முள்
இரயிலின் புறப்பாட்டு நேரத்தைத் தொட்டது.
சென்ட்ரல் ஸ்டேஷன் இரயில் நிலையத்தில்
சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது.
இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம் போல்
சோகம் தருவது உலகில் வேறேது..?”
-          ஞானக்கூத்தன்.

[இந்தக் கவிதையில் உரையாடலைத் தூண்டும் இடம் திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்கிறது என்ற வரி. திடுக்கிடல் காண்பவரின் மனம் சார்ந்தது. ஆரஞ்சு தோலுரித்துத் தருகிறான் என்பது உறவின் நெருக்கத்தைக் காட்டுகிறது. எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்’ என்ற வரியில் அவசரமும் போதாமையும் தெரிகிறது. சற்று நேரத்தில் ரயில் போய்விடும் என்பதில் ஒரு வலியை உணர்கிறோம். ரயில் நிலையத்தில் சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது இந்த இடத்தை வாசிக்கும்போது உறவின் ஆழம், பிரிவின் வலி இரண்டையும் உணர்கிறோம். கவிதைக்குள் பேசாத இடங்கள் கவிதையின் சக்தியாக மாறுகிறது. இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம் போல் / சோகம் தருவது உலகில் வேறேது..?’ பின்புறம் என்று சொல்கிறபோது பார்க்க முடியாத ஒன்றும் கூடவே பிறக்கிறது. இருந்தும் உணர்வுகள் தீண்ட முடியாத ரயில் வண்டி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடித்த பின் நீளும் உரையாடல் அந்தரங்கமாக மாறுவது ஞானக்கூத்தனின் கலா அதிர்வு. வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றம் இந்தக் கவிதை.
- க.வை.பழனிச்சாமி]

{நன்றி: தி ந்து தமிழ்}

No comments:

Post a Comment