எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 22 July 2017

எனது கட்டுரை: "சுத்தம் என்பது நமக்கு…"


சுத்தம் என்பது நமக்கு…
-         கி. அற்புதராஜு.

மாற்றத்தை எப்போதுமே நாம் ஏற்றுக் கொள்வதில்லை. எந்த ஒரு புதிய பழக்கத்தையும் 3 வாரங்கள் அதாவது 21 நாட்கள் தொடர்ந்தால் மட்டுமே நம் மனமும் உடலும் ஒரு சேர அதை ஏற்றுக் கொள்கிறது.

தினமும் காலை எழுந்தவுடன் பற்களை துலக்குவது தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். தூங்குவதற்கு முன்னும் பற்களை துலக்குதல் மிகவும் நல்ல பழக்கம். பற்சொத்தை மற்றும் பிற நோய்கள்  பற்களுக்கும் ஈறுகளுக்கும் வராமல் தடுக்கின்றன.

வைரமுத்து தனது 'கேள்வி ஞானம்' கவிதையில் இப்படி சொல்லியிருப்பார்:

"வாய் நீராடும்
வாய்ப்புள்ள
போதெல்லாம்
சுட்டு விரல் கொண்டு
தொட்டழுத்து ஈறுகளை

பரவும் ரத்தம் பலம்

ஈறு கெட்டால்
சொல் எஞ்சும்

ஈறு கெட்டால்
பல் எஞ்சுமா ?"

இக் கவிதை பற்களை தன்னுள் வைத்திருக்கும் ஈறுகளையும் பாதுகாக்க அறிவுறுத்துகிறது.

காலை மாலை இரு வேளையும் பல் துலக்குவது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று படிப்பதோடு சரி. நடைமுறைப்படுத்த முடிவதில்லை. இரவு சாப்பிட்டு, டி.வி. பார்த்து தூக்கம் வரும் போது நேராக படுக்கைக்கு செல்ல தோன்றுமே தவிர பல் துலக்க தோன்றாது.

உறவு பெண் பல் டாக்டராக உள்ளார். அவரிடம் நீங்கள் தினமும் இரவிலும் பல் துலக்குவீர்களா?  என்ற போது நல்ல பழக்கம்தான்... ஆனால்  எப்போதுதாவதுதான் என்று சிரித்தார். அவராலும் பழக முடியவில்லை போலும்.

இந்த பழக்கம் அலுவலக நண்பர்களிடமும் இல்லையென்பது இதைப் பற்றி பேசும் போது தெரியவந்தது.

'காலை எழுந்தவுடன் வாயில் ஊரிய எச்சில், கோழையில் கொஞ்சம் அரிசியை சேர்த்து கோழிக்கோ, காகத்துக்கோ வைத்தால் அதை சாப்பிட்டவுடன் அவை இறந்துவிடும்' என கிராமத்து பாட்டி 'கதை' சொல்லியதை சொன்னார் அலுவலக நண்பர் ஒருவர்.

அதன் பிறகு அந்த நினைவே இல்லாது நானும் மறந்துப் போனேன்.

என்னால் செய்யவே முடியாது என்ற இந்த பழக்கத்தை... சொன்னால் நம்ப மாட்டீர்கள்...
ஒரு பத்திரிக்கையில் படித்த இரண்டு வரி செய்தியால் இப்போது காலை இரவு என இருவேளையும் பல் துலக்கத் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆகியும் தொடர்கிறது...

என்னை மாற்றிய அந்த வாசகம்:

"நீங்கள் காலையில் பல் துலக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கண்டிப்பாக இரவில் பல் துலக்கவும்..!"

உங்களையும் மாற்றுமா?

*** *** ***

3 comments:

  1. தொடங்கிவிட்டேன் இரு வேளையும் பல் துலக்க...

    ReplyDelete
  2. 3 வாரம் கூட போதாது. ஓரு மண்டலம் வேண்டும் புதுப்பழக்கம் உள் ஒன்ற.

    ReplyDelete
  3. இனி இரு வேளை இலட்சியம் ஒரு வேளை நிச்சியம்.

    ReplyDelete