எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 24 April 2020

படித்ததில் பிடித்தவை (“நன்றி சொல்ல வேண்டும்” – கல்யாண்ஜி கவிதை)


நன்றி சொல்ல வேண்டும்

வாகனத்தைத் தவறான இடத்தில்
நிறுத்தியதற்காக நான்
காவல் நிலையத்தின் வெளிப்புறம்
நிறுத்தப்பட்டிருக்கிறேன்.

இதைவிடக் கூடுதலான குற்றமாக
என் உடல் மொழியின் ஏதோ ஒன்று
இருந்திருக்க வேண்டும்.

வெயிலைப் பூசிக்கிடக்கிற
நகராட்சி மருத்துவமனையிலிருந்து
மகப்பேறு முடிந்த தாய்
ஆட்டோவில் ஏறிக்கொண்டிருந்தாள்
மூத்த பெண் குழந்தையுடன்
கருஞ்சிவப்பில் பிஞ்சுக்கால்கள் தெரிய.

வலது பக்கத்தில் ஏழிலைக்கிழங்குப்
பையோடு முதியவள் கிளிஜோஸ்யம்
கேட்டபடி கண்கள் சுருக்கி.

விசிறின சோழிகளில் ஒரு சோழி
நடுக்கத்திலிருந்து விடுபட்டு
அமைதியடைய வெகு நேரமாயிற்று.

நான் சிகப்புச் செங்கல் கட்டிடத்திற்கு
நன்றி சொல்லவேண்டும்...

என் குற்றங்களுக்கு
சுங்கிடித்துணிக்குள் பிஞ்சுப்பாதங்களையும்
ஏழிலைக்கிழங்கின் முறிந்த குறுக்குவெட்டையும்
ஒரு சோழியின் நடுக்கத்தையும்
தண்டனையாகத் தந்ததற்கு..!

    *கல்யாண்ஜி*

Wednesday, 22 April 2020

படித்ததில் பிடித்தவை (“அன்பு” – கல்யாண்ஜி கவிதை)


அன்பு

கைப்பிள்ளையுடன்
பேசிக் கொண்டே
கோலம் போடுகிறாள்
அந்தப் பெண்...

நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்...

    *கல்யாண்ஜி*

Sunday, 19 April 2020

படித்ததில் பிடித்தவை (“இரவு” – அ.வெண்ணிலா கவிதை)


இரவு

ஒவ்வொரு இரவுகள் முடிந்து
வீடு திரும்பும் வேளையில்
நான் இழந்தது
ஒன்றுமில்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதும்
நிரூபணத்தை
நீ ஏற்றுக் கொள்வதும்
நம் வழக்கங்களாய் இருப்பதையே
வாழ்தல் என்கிறார்கள்..!”

    *அ.வெண்ணிலா*

Wednesday, 15 April 2020

படித்ததில் பிடித்தவை (“சாபம்” – முத்துராசா குமார் கவிதை)

சாபம்


படகுக் கவிழ பிராத்திக்கிறாயே... என்று
எனக்கு சாபம் விட்டுச்சென்ற நீங்கள்
மீதிக் கதையையும்
கேட்டுப் போயிருக்கலாம்...

நீண்ட காலமாக கரை திரும்பாத
அந்த ஆளற்ற படகில்
நடுத்தர வயது மீனொன்று
துள்ளிக் குதித்து துடிதுடிக்கிறது..!


       -   முத்துராசா குமார்.
      (பிடிமண் கவிதைத் தொகுப்பிலிருந்து...)

Friday, 10 April 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தைகளின் கிறுக்கல்” – தமிழ் இயலன் கவிதை)


*குழந்தைகளின் கிறுக்கல்*

சபிக்கப்பட்ட
செங்கற்களால்
நிரம்பியவை
குழந்தைகளின்
கிறுக்கல் இல்லாத
வீட்டுச்சுவர்கள்.

பிஞ்சு விரல்கள்
அஞ்சிக்கிடக்கும்
இல்லங்களில்
பிகாசோ மறுபடியும்
புதைக்கப்படுகிறான்.

மறு வண்ணப்பூச்சுக்கான
செலவுக்கணக்கில்
மறையக் கூடும்
புதிய டாவின்சியின்
அறிவியல் கோடுகள்.

வண்ணத்தூரிகைகள்
வாங்கப்படா வீடுகளில்
தீண்ட மறுக்கிறோம்
மைக்கேல் எஞ்சலோவை.

வாடகை வீடு என
மிரட்டப்பட்ட
கரங்களிடையே
மருண்டு மறைகிறான்
இன்றைய வான்கோ.

சுவர் மறுத்தாலும்
தாள் கொடுத்தாவது
கிறுக்கவிடுங்கள்.
வெளிப்படட்டும் மனம்.
வெற்றியடையட்டும் திறன்.

குறுக்கே நிற்காதீர்கள்
கிறுக்கர்களே..!”
                                                                    

                   - தமிழ் இயலன்.

Thursday, 9 April 2020

படித்ததில் பிடித்தவை (”உன் பெயர் வைத்திருக்கின்றேன்” – அய்யனார் கவிதை)


உன் பெயர் வைத்திருக்கின்றேன்...

புத்தகங்களாலும் அழுக்குத்
துணிகளாலும்
நிரம்பி கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடி தொட்டிக்குள்
உலவுகின்றன
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசி கொள்வதாய்
சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கின்றேன்
ஒரு முறை வந்து
பார்த்துவிட்டுபோயேன்.


  -   அய்யனார்.
(நானிலும் நுழையும் வெளிச்சம் கவிதை தொகுதியிலிருந்து).

Sunday, 5 April 2020

படித்ததில் பிடித்தவை (“பயணம்” – கு.வைரச்சிந்திரன் கவிதை)


பயணம்
வாங்கித் தரச் சொல்லி
அடம் பிடித்து அழும்
குழந்தையின்
பின்னாலேயே செல்கிறது
பலூன்காரனின் வண்டியும்
வாழ்க்கையும்..!

            கு. வைரச்சிந்திரன்.

Friday, 3 April 2020

படித்ததில் பிடித்தவை (“புரிதல்” – தேவதச்சன் கவிதை)


புரிதல்

தன் கழுத்தைவிட உயரமான
சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி.

கேரியரில் அவள் புத்தகப்பை
விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது.

மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன.

அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன.

வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்.
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்.

சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.

   – தேவதச்சன்.

(போராடும் பலம் வறுமை இயல்பாகவே கொடுப்பது. எதிர்காலம் கல்வியில் தான் இருக்கிறது என்னும் புரிதல் வளர்ப்பில் வந்துள்ளது. வெளி உலகில் இருந்து அவள் சவால்களை எதிர்பார்க்கிறாள். உதவியை அல்ல. அதே சமயம் தனது பிரச்சனைகளில் எதை நகரும் வாகனத்துப் பெண் கவனித்தாள் என்பதே இவளது மனதுள் உள்ள கேள்வி. வாசகன் வாழ்க்கையின் புதிர்களில் தனது இருப்பிடமான புள்ளி தன்னுடன் பிறர் தம்மை இணைத்துக்கொள்ளும் புள்ளியே விடை தெரியாதது. முன்னுரிமை பெறும் விஷயங்களே கடந்து செல்லுதலில் துணையாகின்றன.இன்னொரு பகலில் என்பது வாழ்க்கையின் பின்னணி மலைக்கும் மடுவுக்குமாக இரு ஜீவிகளிடையே வேறுபடுவதை மிகக் கலையாகத் தொட்டுச் செல்வது.)

Saturday, 28 March 2020

படித்ததில் பிடித்தவை (“இடம் பெயர்தல்” – பாபுசசிதரன் கவிதை)


*இடம் பெயர்தல்*

காலாற வரப்பில் நடந்து
சில பல பனைகளை கடந்து
வேலங்குச்சி உடைச்சி
பல் துலக்கி...
ஏரி மதிலில் கால் கழுவி...
அப்படியே கொஞ்சம்
இறங்கி தலைமுழுகி...
கட்டியிருக்கும் வேட்டியையும்
சட்டை போட்டுக்கொள்ளா
துண்டையும் அலசி...
கட்டிக் கொண்டு வீடுவரும்
காய்ந்து போன நினைவுகளூடே...
மகனோடு சென்னையில்
பிடுங்கி நடப்பட்ட முதியவரும்...
அடைபட்டுக்கிடந்த நிலநீரும்...
அடுக்குமாடி நீச்சல் குளத்தில்...
ஒருவருக்கொருவர்
தத்தம் பிம்பங்களை
பார்த்துக் கொண்டார்கள்...
அதில் ஒரு கிராமம்
பட்டுபோய் கிடந்தது..!

-                              
     -   கா. பாபுசசிதரன்,  22.03.2020,
    (அடுக்குமாடி கவிதைகள்).

Sunday, 8 March 2020

படித்ததில் பிடித்தவை (“நதி” – கே.ஆர்.அப்பாவு கவிதை)


*நதி*

நதிகளுக்கெல்லாம்
பெண்களின் பெயர்களை
வைத்துவிட்டு
நதிகளை இணைக்க
வேண்டும்...
நதிகளை இணைக்க
வேண்டும்...
என்றால் எப்படி..?

   -   கே.ஆர்.அப்பாவு.
  (மறுபக்கம் கவிதைதொகுப்பிலிருந்து)