எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 4 January 2018

முதல் பூ


புத்தாண்டுக்கு
குடும்பத்தோடு
பெருமாள் கோவில்
சென்றிருத்தேன்.

வெளிப்பிரகாரத்தில்
தொடங்கிய
சற்றே நீளமான வரிசை
நாங்கள் நின்றதும்
நீளமான வரிசையானது.

வழி நெடுக
ஓரத்தில்
பூச்செடிகள்
நடப்பட்டிருந்தன.

அதில்
செம்பருத்தி பூச்செடி
மிகவும் அழகான
முதல் பூவை
பூத்திருந்தது
பச்சை நிற வலைக்குள்.

வரிசையில் நின்ற
சிறுமிகள் சிலர்
அப்பூவை பறிக்க
முயற்சித்தப் போது
பெரியவர்களை
அதட்ட வைத்தும்...

பூச்செடிக்கு அருகே
குழந்தைகளை
நிற்க விடாமல்
வரிசையை
வேகமாக நகர செய்தும்...

அழகான அந்தப் பூவின்
ஆயுளை நாள் முழுதும்
நீட்டிக்க செய்கிறார்
நிறைய பூக்களால்
அலங்கரிக்கப்பட்ட

சுந்தரராஜப் பெருமாள்..!

      -      கி. அற்புதராஜு.

Thursday, 28 December 2017

படித்ததில் பிடித்தவை (“மற்றும் சில ஆடுகள்” - தேவதச்சன் கவிதை)


மற்றும் சில ஆடுகள்

"காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை.
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன.
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

- தேவதச்சன்.


(வண்ணத்துப் பூச்சிகள் இயற்கையின் மிகப் பெரிய வரங்கள் அவைகளால் காடுகள் மரங்கள் உருவாகும் ஆதாரமான மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. இயற்கையுடன் ஒன்றிய ஒருவனாக இருக்கும் இடையன் ஆடுகளை மட்டும் மேய்க்கும் காட்சியாக அவனைக் குறுக்க முடியாது. அவன் அந்தச் சூழலையே மேய்ப்பவனாகிறான். 
- சத்யானந்தன்)

Sunday, 24 December 2017

படித்ததில் பிடித்தவை (“கடைசி இலை” - வீரன்குட்டி கவிதை)


கடைசி இலை

மரத்தில்
எஞ்சியிருக்கும்
கடைசி இலைக்கு
பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?
வாய்க்கும்.

உச்சிவெயிலில்
தரையில் ஒரு சிற்றெறும்பு
நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.
காற்றில் ஆடியபடி
தொடர்ச்சியாக
எறும்பின் பாதையில்
நிழலிட
அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.

ஆட்டத்தின் உச்சத்தில்
இலை
மரத்தை விட்டு அகலலாம்.
அப்போதும்,
ர் குடையாய்
எறும்பின் மேலேயே
விழ வாய்த்தால்,
தாய் வந்து
குட்டியை ஒளித்ததற்காக
கண் சிவக்க கோபிக்கும் வரை
அந்த இருப்பு தொடருமானால்,
அதுவே
பெருமகிழ்ச்சி..!”

- வீரன்குட்டி (மலையாளம்)

  தமிழில் : சித்தார்த்.

Saturday, 25 November 2017

படித்ததில் பிடித்தவை (“பரிசு” - தேவதச்சன் கவிதை)


பரிசு
என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை.
பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான்.
பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்.
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்..!”
 - தேவதச்சன்.

(ஒரு பரிசுக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் வாங்குபவன் கொடுப்பவன் இருபக்கமும். ஒரு சொட்டில் ஆயிரம் சொட்டுக்கள் என்பது கவித்துவம் ததும்பும் பதிவு)

Sunday, 12 November 2017

படித்ததில் பிடித்தவை (“உறவுகள்...” - கலாப்ரியா கவிதை)


உறவுகள்...
அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்.
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸுக்காய்
அம்மாவும்
அப்பாவும்..!

   -    கலாப்ரியா.

Sunday, 10 September 2017

சட்டென்று மாறுது வானிலை..!


"கிராமத்து வீட்டில்
மதிய உணவு சாப்பிடுகையில்
பறிமாறும் அம்மாவின் கைப்பட்டு
உறவினர் சாப்பிடும் 
வாழையிலை அருகே வைத்திருந்த
தண்ணீர் தம்ளர்
சாய்ந்து வழிந்தோடுகையில்
'என்ன பார்த்து பறிமாறக் கூடாதா..?'
என்ற அப்பாவின் சூடான கேள்வி
உறவினர்கள் முன்னே
அம்மாவை விசனப்பட வைத்ததை...

வழிந்தோடும் நீருக்கு
வளைந்து நெளிந்தப் பாதை உண்டாக்கி,
பாம்பாக்கி முற்றத்தில் விழச்செய்து 
அப்பா, அம்மா மற்றும் 
உறவினர் அனைவரையும்
தனது மழலைச் செயலால்
மகிழ்ச்சியாக்கி
குளிர வைக்கிறாள்
குட்டிப் பாப்பா..!"

-      கி. அற்புதராஜு.

Monday, 28 August 2017

எனது கட்டுரை: நிறம் மாறும் பூக்கள்...


நிம் மாறும் பூக்ள்...
-    கி. அற்புதராஜு.

ஜூலை மாத 4-வது சனிக்கிழமை மாலை அமைந்தகரை லஷ்மி தியேட்டர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 15 B பேருந்தில் சென்ட்ரல் செல்ல நானும், மனைவியும் ஏறினோம். மகளிர் இருக்கைகள் மட்டும் காலியாக இருக்க இருவரும் அதில் உட்கார்ந்தோம். 

அடுத்த நிறுத்தத்தில் நிறைய பெண்கள் ஏற நான் மட்டும் எழுந்து நின்றுக் கொண்டேன்.  தலையில் மல்லிகைப் பூவுடன் பேருந்தில் ஏறிய ஒரு நடு வயது பெண், சற்றே காலை வெளியே வைத்தப்படி உட்கார்ந்திருந்த பெண்ணிடம், "ஏன் காலை வெளியே நிட்டி உட்கார்ந்திருக்கிறாய்..? உன்  கால் தடுக்கி நான் கீழே விழுந்திருந்தால் எனக்கு அடிப்பட்டிருக்கும்..." என நின்றபடி சண்டை பிடித்தார். காலை உள்ளே நேராக வைத்த அந்தப் பெண் எதுவும் பேசாமல் இருக்க, எதிர்வினையின்றி சண்டைப்பேச்சு தொடரவில்லை.

அடுத்த நிறுத்தத்தில் கணவன், மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ஏறியவர்கள் உட்கார இடமின்றி எங்கள் அருகில் நின்றுக் கொண்டனர். 

ஒருவர் இறங்குவதற்கு இறுக்கையிலிருந்து  எழுந்தவுடன் தாவி சென்று உட்கார்ந்தார் சண்டை போட்ட அந்தப் பெண். பக்கத்தில் ஒரு வட இந்திய நபர் உறங்கிக் கொண்டிருந்தார். நிற்பவர்கள் பக்கமாக ஒய்யாரமாக பக்கவாட்டில் காலை நீட்டி உட்கார்ந்த அந்தப் பெண் கைப்பேசியில் பாடல் கேட்க ஹெட்செட்டை மாட்டினார். நிற்பவர்களுக்கும், நடப்பவர்களுக்கும் இடைஞ்சலாக இருந்தாலும் மெளனமாகவே பயணித்தார்கள். நானும்  பொங்கி எழுந்த கோபத்தை தலையில் தட்டி உட்கார வைத்தேன். 

அடுத்த நிறுத்தத்தில் கைக்குழந்தையுடன் அப்பா இறங்கும் போது பின்னால் சென்ற குழந்தையின் அம்மா காலை குறுக்கே வைத்து உட்கார்ந்து பாடல் கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண்ணின் காலை மிதித்து விட்டார். அவ்வளவுதான் அந்த பெண்ணுக்கு கோபம் வந்து, "அய்யோ காலை செருப்பு காலால் மிதித்து விட்டு போறா பாரு... இவளுக்கெல்லாம் கண் இருக்கா... இல்ல பொட்டையா..." என கத்த, பேருந்தே அவரைப் பார்த்தது. மிதித்து சென்றவர் சொன்ன "சாரிம்மா" வை ஏற்றுக் கொள்ளாமல் சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தார். பேருந்து கிளம்பியப் பிறகும் வசைப் பாடல் தொடர்ந்தது...

"ஏம்மா நீங்க பேருந்து ஏறியவுடன் காலை நீட்டியிருந்த பெண்ணிடம் சண்டைப் போட்டீர்கள்... நீங்க மட்டும் காலை குறுக்கே வைத்திருந்தது நியாயமா? காலை குறுக்கே வைத்தால் போறவங்களுக்கு இடைஞ்சலாதான் இருக்கும்... மிதிக்கதான் செய்வாங்க... உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?" என மீண்டும் பொங்கி விட்டேன்.

"இந்த ஆள் இப்படி உட்கார்ந்தால் நான் காலை வெளியேதான் நீட்டி உட்கார முடியும்" என பக்கத்து இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வட இந்தியரிடம் தனது தவறை தள்ளி விட்டார். சத்தம் கேட்டு விழித்த அவர் ஒன்றும் புரியாமல் முழித்தார். பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தவுடன் சற்றே இடம் விட்டு நகர்ந்து அமர்ந்தார். காலை மிதித்த பெண்ணை வசைப் பாடியவர் இப்போது அந்த வட இந்திய நபரை வசைப் பாடி எதிர்வினை அற்ற ஆட்டம் ஆடினார். 

சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடன் பேருந்திலிருந்து அந்தப் பெண் இறங்கும் போது நாங்களும் இறங்கினோம். அந்தப் பெண்ணின் தலையில் இருந்த மல்லிகைப் பூ சற்றே நிறம் மாறி வெண்மையிலிருந்து பழுப்பாகியிருந்தது மாலை வெயிலில்..!
*** *** ***

Wednesday, 9 August 2017

படித்ததில் பிடித்தவை (“பூக்காடு” - ஜான் சுந்தர் கவிதை)


பூக்காடு

'யோசித்து யோசித்து
மகளுக்கொரு பேர்
வைத்தேன் ரோஜா”.

என் மனைவி
ரோஜாம்மா ஆனாள்.

ரோஜா அப்பா
என் பெயரானது.

மகனும் ஆனான்
ரோஜாண்ணா”.

ரோஜா வீடு...
ரோஜா பென்சில்...
ரோஜா ரப்பர்...'
        
-      இளைய நிலா ஜான் சுந்தர்,
    ("சொந்த ரயில்காரி" - கவிதை தொகுப்பு).