"கிராமத்து வீட்டில்
மதிய உணவு சாப்பிடுகையில் 
பறிமாறும் அம்மாவின் கைப்பட்டு 
உறவினர் சாப்பிடும்  
வாழையிலை அருகே வைத்திருந்த 
தண்ணீர் தம்ளர் 
சாய்ந்து வழிந்தோடுகையில் 
'என்ன பார்த்து
பறிமாறக் கூடாதா..?' 
என்ற அப்பாவின் சூடான கேள்வி 
உறவினர்கள் முன்னே 
அம்மாவை விசனப்பட வைத்ததை...
வழிந்தோடும் நீருக்கு 
வளைந்து நெளிந்தப் பாதை உண்டாக்கி, 
பாம்பாக்கி முற்றத்தில் விழச்செய்து  
அப்பா, அம்மா மற்றும்  
உறவினர் அனைவரையும் 
தனது மழலைச் செயலால் 
மகிழ்ச்சியாக்கி 
குளிர வைக்கிறாள் 
குட்டிப் பாப்பா..!"
-     
கி. அற்புதராஜு.

