எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 21 February 2018

படித்ததில் பிடித்தவை (“வரதட்சணை” – சரஸ்வதி தாயுமானவன் கவிதை)



வரதட்சணை
பட்டப்பகலில்
பலரும் பார்த்திருக்க
கெட்டிமேளச் சத்தத்தில்
கொள்ளை போனது
பெண்ணோடு
பொன்னும் பொருளும்..!
-      மன்னை சரஸ்வதி தாயுமானவன்.


                                 விதைக் கடையில் சரஸ்வதி.
இந்த விதை கடையில் கவிதையும் கிடைக்கும்
-       எஸ்.கோபாலகிருஷ்ணன் (தி இந்து, 18.02.2018)

கவிதைகள் எங்கு உருவாகின்றன? இசையமைப்பாளர் தந்த மெட்டை ஹெட்போனில் கேட்ட படி யோசிக்கும் கவிஞரிடம், காதலில் விழுந்தவரிடம் இருந்து கவிதைகள் வருவது உண்டு. பெரும்பாலும், சலனமற்ற, மனதுக்கு இதமான அமைதியான சூழல்களிலேயே கவிதைகள் உருவாகின்றன. ஆனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான கடைத்தெருவில், கடை வியாபாரத்தையும் கவனித்தபடி இருக்கும் பெண், கவிதைகள் எழுதுபவர் என்பது ஆச்சரியம்தானே!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி அருகில் சாலையோரம் இருக்கிறது அந்த தள்ளுவண்டிக் கடை. தோட்டக்கலைச் செடிகளுக்கான விதைகளை தட்டுகளில் வைத்து வியாபாரம் செய்து வருகிறார் சரஸ்வதி (48). விதை விற்கும் தொழி லாளி என்பதோடு இவருக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. அது, கவிதை எழுதும் படைப்பாளி.
மன்னை சரஸ்வதி தாயுமானவன்என்ற பெயரில், ‘நெல்மணிகள், உயிர்த்துளிகள்என்ற தலைப்பில் 284 கவிதைகள் அடங்கிய தொகுப்பை எழுதியிருக்கிறார். இதுதவிர, நூற்றுக்கணக்கான கவிதைகளை கைவசம் வைத்துள்ளார். செம்மலர்போன்ற பொதுவுடமை இயக்க இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
விதைக்கடையில் வியாபாரத்தை கணவர் தாயுமானவனுடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார். தினமும் கிடைக்கும் 200, 300 ரூபாய் வருமானத்தைக் கொண்டு தங்களது 3 மகள்களையும் முதுகலை பட்டதாரிகளாக ஆக்கியுள்ளனர். அவர்களில் இருவருக்கு திருமணமும் முடித்துவிட்டனர்.
வீட்டு வேலைகள், கடையில் வியாபாரத்துக்கு நடுவில், சரஸ்வதிக்குள் ஒரு கவிஞர் உருவானது எப்படி? அவரே கூறுகிறார்..
ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். தாய்மாமாவும், அண்ணனும் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதால், இயல்பாகவே எந்த ஒரு நிகழ்வையும் பொதுப் பார்வையோடு பொருத்திப் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதனால், பாடப் புத்தகங்களை விட கதை, கவிதை, கட்டுரைகள்தான் அதிகம் படித்தேன்.
கவிதை எழுதவேண்டும் என்று உட்கார்பவர்களுக்கு தான் கற்பனை வேண்டும். என் கவிதைகளில் கற்பனைகள் அதிகம் இருக்காது. என் வாழ்வில் நடந்த சம்பவங்கள், என் கடைக்கு வரும் மக்கள் வெளிப்படுத்தும் ஏக்கங்கள் என என்னை பாதிக்கிற விஷயங்களை கவிதைகள் ஆக்கிவிடுகிறேன்’’ என்று பெருமிதத் தோடு கூறியவர், தான் எழுதிய வரதட்சணைஎன்ற கவிதையைக் காட்டினார்.

‘‘பட்டப்பகலில்
பலரும் பார்த்திருக்க
கெட்டிமேளச் சத்தத்தில்
கொள்ளை போனது
பெண்ணோடு
பொன்னும் பொருளும்..!’’
*** *** *** *** ***

Saturday, 17 February 2018

படித்ததில் பிடித்தவை (“தீராத நினைவு” - வி.யோகேஷ் கவிதை)


தீராத நினைவு
"நம் கடந்த காலங்கள்
ஒரு தேர்ந்த ஓவியனின்
வரைபடப் புத்தகம் போன்றது.

தோன்றும் பொழுதுகளில்
எனக்குப் பிடித்த வர்ணம் தீட்டி
அழகு பார்ப்பதும் பின்பு
நினைவு மயிலிறகை அதற்குள்
சொருகி வைப்பதும்
எனக்கு வாடிக்கையானது.

நேற்று
நாம் பழகிய தருணங்களை
இரு பழக்கூடையில் நிரப்பி
ஒவ்வொன்றையும் இருவரும்
சுமந்த படி பிரிந்தோம்.

தனிமை பசித்திருக்கையில்
ஞாபகப் பழக்கூடையிலிருந்து
ஒவ்வொன்றாய்ப் புசிக்கக் கொடுத்தோம்.

பழக்கூடை தீர்வதற்குள்
மீண்டும் நாம்
சந்திக்க வேண்டும்..!

வி. யோகேஷ்.


Thursday, 8 February 2018

படித்ததில் பிடித்தவை (“விஷப் பார்வைகள்...” - அ. வெண்ணிலா கவிதை)


விஷப் பார்வைகள்...
விஷப் பாம்பொன்று
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற உன்
பார்வைகளைச்
சந்திக்கும்போதெல்லாம்..!"

- அ. வெண்ணிலா.

Friday, 26 January 2018

ஒரு குழந்தையின் வருகை...


“திறந்திருக்கும் கேட் வழியாக
வேகமாக தெருவுக்கு வரும் பந்து...

தெரு வழியாக செல்லும்
எனது இரு சக்கர வாகனத்தின்
வேகத்தை உடனே குறைக்க
வைக்கிறது...

பந்துக்கு பின்னாலே
ஒரு குழந்தை வேகமாக
ஓடி வருமென்று..!”

   -    கி. அற்புதராஜு.

Saturday, 20 January 2018

மாநகரத்தில் அணிலும், எறும்பும் மற்றும் நானும்...


"அணில்கள் 
கேபிள் வயரின்
மேல்தான் பயணிக்கின்றன...

மரங்களில்
பயணிக்க முடிவதில்லை
மாநகரத்தில்...

எறும்புகள்
கோல மாவுகளை
எடுத்து செல்வதில்லை...

எலக்ட்ரிக் பேட்டால் அடித்த
கொசுக்களை
இழுத்துச் செல்கின்றன
மாநகரத்தில்...

கிராமத்தில்
தேர் ஓடும்
பெரிய வீதிகளில்
எதிர் வீடு வரை நீண்டிருக்கும்
மார்கழி மாத கோலங்களை
மிதிக்காமல் தாண்டி தாண்டி
நடந்து சென்ற நானும்...

டாஸ்மாக்கில்
தண்ணி அடித்தவன் போல
வளைந்து நெளிந்து கடக்கிறேன்
இரு சக்கர வாகனத்தில்
மாநகரத்தின் சந்துகளில்
போடப்பட்ட
சிறிய கோலங்களை..!"

- கி. அற்புதராஜு.

Sunday, 14 January 2018

எனது ஆடைகள் துரத்தப்படுகின்றன...


"புதிய வீட்டில்
எனக்கான உடைகளுக்கு
படுக்கை அறையிலிருந்த
பீரோவில் சிறிய இடம்
ஒதுக்கினாள் மனைவி.

பெரிய இடங்களை
பிடித்துக் கொண்டன
மனைவியின்
புடவைகள்.

ஐந்து வருடங்களில்
எனது ஆடைகள்
துரத்தப்பட்டன
பீரோவிலிருந்து
சுவரிலிருந்த அலமாரியின்
சற்றே பெரிய
பகுதிக்குள்.

இரண்டு வருடங்களுக்குள்
அலமாரிக்கும்
படையெடுத்தது
புடவைகள்.
அலமாரியின்
பெரிய பகுதியிலிருந்து
சிறய இடத்துக்கு
மீண்டும் துரத்தப்பட்டன
எனது ஆடைகள்.

மாடியில் புதிதாக
ஒரு அறை கட்டப்பட்டவுடன்
எனது ஆடைகள்
மாடியேறின.

இந்த வருடப் பொங்கலுக்கு
வீட்டை சுத்தம்
செய்த பின்
மாடியேறிவிட்டன
மனைவியின் புடவைகளும்.

எனது ஆடைகளுக்காக
மனைவி தேர்வு செய்த
புதிய இடத்தைப்
பார்க்கவும்
எனது ஆடைகளுக்கு
ஆறுதல் சொல்லவும்
மாடி ஏறிக்கொண்டிருக்கிறேன்
நான்..!"

- கி. அற்புதராஜு.

Wednesday, 10 January 2018

உயிர் - அச்சமும்... துட்சமும்...


காட்சி - 1 : அச்சம்
"அவசரமாக
ரயில் பாதையை
கடக்க முயன்றவரை
எக்ஸ்பிரஸ் ரயில்
வருவதாக
எதிரே வந்தவர்
தடுத்து நிறுத்தும் போது
வேகமாக வந்த ரயில்
பெரும் ஓசையுடன்
கடந்து சென்றது.

அவசரபட்டு விட்டோமோ என
கடக்க முயன்றவர்
அதிர்ச்சியில் உறைந்தார்.

தடுத்தவருக்கு நன்றி
சொல்லியிருக்கலாமோ என
திரும்பி பார்த்தப் போது
அவர் வெகுதூரம்
சென்றிருந்தார்."

காட்சி – 2 : துட்சம்
"டெல்லி பயணத்துக்கு
சென்ட்ரலில் எக்ஸ்பிரஸ்
ரயில் பிடிப்பதற்காக,
லோக்கல் ரயில் பிடிக்க
அவசரமாக தண்டவாளத்தை
கடக்க முயலும் போது
கூட்ஸ் ரயில் வருவதை
பார்த்தவுடன்
சற்றே தயங்கி
நின்று விடுகிறார் அவர்.

கூட்ஸ் ரயில் கடந்து
செல்வதற்குள்
லோக்கல் ரயில்
சென்று விடுகிறது.
அடுத்த ரயில் பிடித்து
பரபரப்பான
மனநிலையில்
செல்லும் போது
கூட்ஸ் ரயிலுக்காக
தயங்கி நின்றது
தவறாகி விட்டதே என
வருந்தினார் அவர்.

அவசர அவசரமாக
சென்ட்ரலில் நுழைந்து
நடைமேடை அறிந்து
சென்றடைகையில்
தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸின்
கடைசிப் பெட்டி
கிராஸ் மார்க்கை
காட்டிச் சென்று கொண்டிருந்தது..."

- கி. அற்புதராஜு.

Thursday, 4 January 2018

முதல் பூ


புத்தாண்டுக்கு
குடும்பத்தோடு
பெருமாள் கோவில்
சென்றிருத்தேன்.

வெளிப்பிரகாரத்தில்
தொடங்கிய
சற்றே நீளமான வரிசை
நாங்கள் நின்றதும்
நீளமான வரிசையானது.

வழி நெடுக
ஓரத்தில்
பூச்செடிகள்
நடப்பட்டிருந்தன.

அதில்
செம்பருத்தி பூச்செடி
மிகவும் அழகான
முதல் பூவை
பூத்திருந்தது
பச்சை நிற வலைக்குள்.

வரிசையில் நின்ற
சிறுமிகள் சிலர்
அப்பூவை பறிக்க
முயற்சித்தப் போது
பெரியவர்களை
அதட்ட வைத்தும்...

பூச்செடிக்கு அருகே
குழந்தைகளை
நிற்க விடாமல்
வரிசையை
வேகமாக நகர செய்தும்...

அழகான அந்தப் பூவின்
ஆயுளை நாள் முழுதும்
நீட்டிக்க செய்கிறார்
நிறைய பூக்களால்
அலங்கரிக்கப்பட்ட

சுந்தரராஜப் பெருமாள்..!

      -      கி. அற்புதராஜு.